Welcome To Literary Bookshelf
Sangam literature comprises some of the oldest extant Tamil literature, and deals with love, traditions, war, governance, trade and life.!

கச்சியப்ப சிவாச்சாரியார் அருளிய
கந்த புராணம் - பகுதி 11
6. தக்ஷ காண்டம்/ படலம் 11 - 13 (404 - 907)

kantapurANam of kAcciyappa civAccAriyAr
part 11 /canto 6 taksha kANTam (verses 404 - 907)
In tamil script, Unicode/utf-8 format




Acknowledgements:
Our Sincere thanks go to Dr. Thomas Malten & colleagues of the Univ. of Koeln, Germany for providing with a transliterated/romanized version of this work and for permissions to release the Tamil script version as part of Project Madurai collections.
Our thanks also go to Shaivam.org for the help in the proof-reading of this work in the Tamil Script format.

Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland.
© Project Madurai, 1998-2008.
to preparation
of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet.
are
http://www.projectmadurai.org/

கச்சியப்ப சிவாச்சாரியார் அருளிய
கந்த புராணம் - பாகம் 11

6. தக்ஷ காண்டம்/ படலம் 11 - 13 (404 - 907)


11. சாலை செய் படலம் 404-454

12. ததீசிப் படலம் 455-519

13. ததீசி யுத்தரப் படலம் 520-907

    6. தக்ஷ காண்டம்

    11. சாலை செய் படலம் (404-454)




    404 - அன்றுமுன் னாகவே அளப்பில் காலமா
    ஒன்றுமவ் வேள்வியில் ஓம்பு கின்றிலர்
    துன்றிய முனிவருஞ் சுரரும் பார்தனில்
    முன்றிகழ் அந்தணர் முதலி னோர்களும். - 1



    405 - ஓர்ந்தனன் அன்னதை ஊழின் தீநெறி
    சார்ந்திடு தக்கன்ஓர் வைகல் தன்முனஞ்
    சேர்ந்திடும் இமையவர் திறத்தை நோக்கியே
    ஈர்ந்திடு தீயதொன் றியம்பு கின்றனன். - 2



    406 - எடுத்திடு சுருதியின் இயற்கை முற்றுற
    வடித்திடு தேவிர்காள் வரம்பில் காலமா
    அடுத்திடும் வேள்விய தாற்றல் இன்றியே
    விடுத்ததென் அனையது விளம்பு வீரென்றான். - 3



    407 - வேறு
    எய்யாது வெய்ய வினையீட்டு தக்கன் இவைசெப்ப லோடும் இமையோர்
    மெய்யார ணத்தன் முதனாள் இயற்று வேள்விக் களத்தில் அவியூண்
    ஐயான னத்தர் பெறநல்கல் என்றி அதனாலும் நந்தி யடிகள்
    பொய்யாத சாப உரையாலும் யாங்கள் புரியாதி ருத்து மெனவே. - 4



    408 - அந்நாளில் ஈசன் விடுகின்ற நந்தி அறைகின்ற சாபம் அதனுக்
    கிந்நாளும் அஞ்சி மகவேள்வி தன்னில் யாதுஞ்செ யாது திரிவீர்
    முன்னாக யானொர் பெருமா மகத்தை முறைசெய்வன் முற்றி இடுமேல்
    பின்னாக நீவிர் புரிமின்க ளென்று பீடில்ல வன்பு கலவே. - 5



    409 - நீமுன்னொர் வேள்வி புரிகின்ற தைய நெறியென்றி சைப்ப அவரைப்
    போமின்கள் யாரும் எனவேபு கன்று புரிதோறு மேவி மிகவும்
    ஏமங்கொள் சிந்தை யுளதக்கன் ஊழின் இயல்பால்அ தற்பின் ஒருநாள்
    ஓமஞ்செய் வேள்வி புரிவான்வி ரும்பி உள்ளத்தில் உன்னி முயல்வான். - 6



    410 - தொட்டாம னுத்தொல் மயனைத் தனாது சுதரென்ன முன்னம் உதவிக்
    கட்டாம ரைக்குள் விதிபோல நல்கு கலைகற்று ளானை விளியா
    முட்டாத வேள்வி யதுவொன்று செய்வன் முனிவோர்கள் தேவர் உறைவான்
    எட்டாத வெல்லை தனில்இன்றொர் சாலை இயல்பால்வி தித்தி எனவே.
    (1. அன்று - நந்தியம் பெருமாள் சபித்த காலம்.
    4. நல்கல் - அளிக்காதே. என்றி - என்றனை.
    5. பீடில்லவன் - பெருமையற்ற தக்கன். 6. ஏமம் - இறுமாப்பு.
    7. தொட்டா மனு மயன் - துவட்டா, மனு, மயன் என்போர்;
    இவர்கள் விசுவகன்மாக்கள். தனாது சுதர் - தன்னுடைய புதல்வர்கள்.)
    - 7



    411 - வேறு
    இனிதென இறைஞ்சியே ஏகிக் கங்கையம்
    புனனதி அதனொரு புடைய தாகிய
    கனகலம் என்பதோர் கவின்கொள் வைப்பிடை
    வினைபுரி கம்மியன் விதித்தல் மேயினான். - 8



    412 - பத்துநூ றியோசனைப் பரப்பும் நீளமும்
    ஒத்திடும் வகையதா ஒல்லை நாடியே
    வித்தக வன்மையால் வேள்விக் கோரரண்
    அத்தகு பொழுதினில் அமைத்து நல்கினான். - 9



    413 - நாற்றிசை மருங்கினும் நான்கு கோபுரம்
    வீற்றுவீற் றுதவிய வியன்கொள் நொச்சியில்
    ஏற்றிடு ஞாயில்கள் இயற்றி அன்னதை
    ஆற்றலை யுடையதோ ரரணம் ஆக்கினான். - 10



    414 - உள்ளுற அணங்கினர் அறைதற் கோரிடை
    தௌ¢ளிதின் நல்கியே தேவர் தம்மொடு
    வள்ளுறை வேற்கணார் மருவி ஆடுவான்
    புள்ளுறை வாவியும் பொழிதலும் ஆக்கினான். - 11



    415 - அப்பரி சமைத்துமேல் அமரர் வேதியர்
    எப்பரி சனரும்வந் தீண்டி வெ·கின
    துய்ப்பதற் கொத்திடு சுவைகொள் தீம்பதம்
    வைப்பதோர் இருக்கையும் மரபில் தந்தனன். - 12



    416 - அந்தண ராதியோர் அமரர் யாவரும்
    வந்துண வருந்துவான் வரமபில் சாலைகள்
    இந்திர வுலகென இமைப்பில் ஈந்தனன்
    முந்தையின் மகவிதி முழுதும் நாடினான். - 13



    417 - விருந்தினர் பெற்றிட விரைமென் பாளிதம்
    நரந்தமொ டாரம்வீ நறைகொள் மான்மதம்
    அருந்துறு வௌ¢ளடை ஆன பாகிவை
    இருந்திடு சாலையும் இயற்றி னானரோ. - 14



    418 - ஆனபல் வகையுடை ஆடை செய்யபூண்
    மேனதொர் அம்பொனின் வியன்கொள் குப்பைகள்
    ஏனைய வெறுக்கைகள் மணிகள் யாவையுந்
    தானம தியற்றிடத் தானம் நல்கினான். - 15



    419 - கடிகெழு சததளக் கமல மேலுறை
    அடிகள்தன் நகர்கொலென் றையஞ் செய்திட
    நடைதரு வேள்விசெய் நலங்கொள் சாலைய
    திடையுற அமைத்தனன் யாரும் போற்றவே.
    (8. கனகலம் - கங்கையின் அருகுள்ள ஓர் இடம்.
    9. வித்தக வன்மை - கல்வித் திறம். 10. நொச்சி - மதில்.
    ஞாயில் - மதிலுறுப்பு.
    11. வள் - கூர்மை. 14. பாளிதம் - பாற்சோறு. ஆரம் - சந்தனம்.
    நரந்தம் - வாசனைப் பொருள். வீ - மலர். மான்மதம் - கஸ்தூரி.
    வௌ¢ளடையான பாகு - வெற்றிலைப் பாக்கு.) - 16



    420 - நூறெனும் யோசனை நுவலும் எல்லையின்
    மாறகல் சாலையின் வன்னி சேர்தரக்
    கூறிய மூவகைக் குண்டம் வேதிகை
    வேறுள பரிசெலாம் விதித்தல் செய்தனன். - 17



    421 - மேலொடு கீழ்புடை வெறுக்கை யின்மிசைக்
    கோலநன் மணிகளாற் குயிற்றி வாவியுஞ்
    சோலையும் பறவையுந் தோமில் தேவரும்
    போலிய ஓவியம் புனைந்திட் டானரோ. - 18



    422 - புண்டரீ காசனம் பொருந்து நான்முகன்
    தண்டுள வோன்இவர் தமக்கி ருக்கையும்
    எண்டிசை வாணருக் கியலி ருக்கையும்
    அண்டருக் கிருக்கையும் அருளல் செய்துமேல். - 19



    423 - தொக்குறு முனிவரர் தொல்லை வேதியர்
    ஒக்கலின் மேயினர் உறையி ருக்கையுந்
    தக்கனுக் கிருக்கையுஞ் சமைத்து நல்கினான்
    வைக்குறு தவிசின்நூன் மரபின் நாடியே. - 20



    424 - தக்கனை வணங்கிநின் சாலை முற்றிய
    புக்கனை காண்கெனப் புனைவன் செப்பலும்
    அக்கண மதுதெரிந் தளவி லாதர
    மிக்கனன் மகிழ்ந்தனன் விம்மி தத்தினான். - 21



    425 - பூங்கம லத்தமர் புனிதன் கான்முளை
    பாங்கரின் முனிவரில் பலரைக் கூவியே
    தீங்கனல் மாமகஞ் செய்ய நூன்முறை
    யாங்கனம் வலித்தனன் அவர்க்குச் செப்புவான். - 22



    426 - தருவுறு சமிதைகள் சாகை தண்ணடை
    பரிதிகள் மதலைநாண் பறப்பை பல்பசு
    அரணிநன் முதிரைகள் ஆதி யாவிதற்
    குரியன உய்த்திரென் றொல்லை ஏவினான். - 23



    427 - ஆனொடு நிதிகளை மணியை ஐந்தருக்
    கானினை அழைத்துநம் மகத்தைக் காணிய
    மாநிலத் தந்தணா¢ வருவர் உண்டியும்
    ஏனைய பொருள்களும் ஈமென் றோதினான்.
    (17. மூவகைக் குண்டம் - சதுரம், வட்டம், கோணம் என்னும் முத்திற
    அமைப்பான ஓம குண்டங்கள்.
    19. எண்டிசை வாணர் - அட்ட திக்குப் பாலகர்.
    20. ஒக்கல் - சுற்றத்தார். 22. கான்முளை - புதல்வன்.
    23. சாகை - கிளைகள். தண்ணடை - பச்சிலைகள்.
    பரிதிகள் - யாக மேடைகள். மதலை - யூபஸ்தம்பங்கள்.
    நாண் - தருப்பைக் கயிறு. பறப்பை - சிருக்கு சிருவம்.
    பல்பசு - ஆடு முதலிய பசுக்கள். அரணி - தீக்கடைக்கோல்.
    24. ஆன் - காமதேனு. ரூதி - சங்கநிதி, பதுமநிதி. மணி - சிந்தாமணி.
    தரு - கற்பகத்தரு.) - 24



    428 - நல்விடை கொண்டுபோய் நவையி லான்முதற்
    பல்வகை யவையெலாம் படா¢ந்து வீற்றுவீற்
    றொல்வதோ ரிடந்தொறும் உற்ற ஆயிடைச்
    செல்வதோர் பொருளெலாஞ் சிறப்பின் நல்கவே. - 25



    429 - தனதுறு கிளைஞராய்த் தணப்பி லாததோர்
    முனிவரர் தங்களின் முப்ப தாயிரர்
    துனியறு வோர்தமைச் சொன்றி ஏனவை
    அனைவரும் விருப்புற அளித்தி ரென்றனன். - 26



    430 - மற்றவர்க் கிருதிற மாத வத்தரை
    உற்றனர் யாவரும் உண்டி அன்றியே
    சொற்றன யாவையுந் தொலைவின் றீமென
    நற்றவத் தயன்மகன் நயப்புற் றேவினான். - 27



    431 - தீதினை நன்றெனத் தௌ¤யும் நான்முகன்
    காதலன் ஓர்மகங் கடிதி யற்றுவான்
    வேதியர் விண்ணவர் யாரும் மேவுவான்
    தூதரை நோக்கியே இனைய சொல்லுவான். - 28



    432 - நக்கனை யல்லதோர் நாகர் தங்களை
    மிக்குறு முனிவரை வேத மாந்தரைத்
    திக்கொடு வான்புவி யாண்டுஞ் சென்றுகூய்
    உய்க்குதி ராலென உரைத்துத் தூண்டினான். - 29



    433 - முந்துற வரித்திடும் முனிவர் அவ்வழித்
    தந்தனர் மகஞ்செயத் தகுவ யாவையும்
    வந்தன நோக்கியே மரபில் உய்த்திரென்
    றெந்தைதன் அருளிலான் இயம்பி னானரோ. - 30



    434 - வரித்திடு பான்மையின் வழாது போற்றிடும்
    இருத்தினர் தமிற்பலர் யாக சாலையுள்
    திருத்திய வேதிவாய்ச் செறிபல் பண்டமும்
    நிரைத்தனர் பறப்பையும் நிலையிற் சேர்த்தினார். - 31



    435 - அசைவறு வேதியின் அணித்தி னோரிடை
    வசைதவிர் மதலைகள் மரபின் நாட்டுபு
    பசுநிரை யாத்தனர் பாசங் கொண்டுபின்
    இசைதரு பூசையும் இயல்பின் ஆற்றினார்.
    (26. துனி - துன்பம். சொன்றி - சோறு. 29. நாகர் தேவர்கள்.) - 32



    436 - வேறு
    நடையிது நிகழும் வேலை நலமிலாத் தக்கன் நல்கும்
    விடைதலைக் கொண்டு போய வியன்பெருந் தூதர் தம்மில்
    புடவியின் மறையோர்க் கெல்லாம் புகன்றனர்சிலவர் வெய்யோன்
    உடுபதி நாள்கோள் முன்னர் உரைத்தனர் சிலவா¢ அன்றே. - 33



    437 - காவல ராகி வைகுங் கந்தரு வத்த ராதி
    ஆவதோர் திறத்தோர்க் கெல்லாம் இறைந்தனர் சிலவர் ஆசை
    மேவிய கடவு ளோர்க்கும் விளம்பினர் சிலவர் முப்பால்
    தேவா¢கள் யாருங் கேட்பச் செப்பினர் சிலவ ரன்றே. - 34



    438 - விண்ணக முதல்வ னுககு விளம்பினர் சிலவர் ஆண்டு
    நண்ணிய தேவர்க் கெல்லாம் நவின்றனர் சிலவர் மேலைப்
    புண்ணிய முனிவ ரர்க்குப் புகன்றனர் சிலவர் ஏனைப்
    பண்ணவர் முன்னஞ் சென்று பகர்ந்தனர் சிலவர் அம்மா. - 35



    439 - வானவர் முதுவன் தொல்லை மன்றன்மா நகரத் தெய்திக்
    கோனகர் வாயில் நண்ணிக் குறுகினர் காப்போர் உய்ப்ப
    மேனிறை காத லோடும் விரைந்தவற் றாழ்ந்து நின்சேய்
    ஆனவன் வேள்விக் கேக அடிகள்என் றுரைத்தார் சில்லோர். - 36



    440 - மேனகு சுடர்செய் தூய விண்டுல கதனை நண்ணி
    மானிறை கின்ற கோயில் மணிக்கடை முன்னர் எய்திச்
    சேனையந் தலைவன் உய்ப்பச் சீதரற் பணிந்து வேள்விப்
    பான்மையை தியம்பி எந்தை வருகெனப் பகர்ந்தார் சில்லோ¢. - 37



    441 - மற்றது போழது தன்னில் மாயவன் எழுந்து மா£பூ
    டுற்றிடு திருவும் பாரும் உடன்வர உவணர் கோமான்
    பொற்றடந் தோள்மேற் கொண்டு போர்ப்படை காப்பத் தன்பாற்
    பெற்றனர் சூழத் தானைப் பெருந்தகை பரவச் சென்றான். - 38



    442 - செல்லலும் அதனை நாடித் திசைமுகக் கடவுள் அங்கண்
    ஒல்லையில் எழுந்து முப்பால் ஒண்டொடி மாத ரோடும்
    அல்லியங் கமலம் நீங்கி அன்னமேற் கொண்டு மைந்தர்
    எல்லையில் முனிவர் யாரும் ஏத்தினர் சூழப் போந்தான். - 39



    443 - மாலொடு பிரமன் ஈண்டி வருதலும் மகவான் என்போன்
    வேலொடு வில்லும் வாளும் விண்ணவர் ஏந்திச் சூழ
    நாலிரு மருப்பு வௌ¢ளை நாகம துயர்த்துத் தங்கள்
    பாலுறை குரவ ரோடு பாகமார் விருப்பில் வந்தான். - 40



    444 - ஆயவன் புரத்தில் வைகும் அரம்பையே முதலா வுள்ள
    சேயிழை மார்கள் யாருந் தேவரோ டகன்றா£ எங்கள்
    நாயகன் போந்தான் என்றே நலமிகு சசியென் பாளுந்
    தூயதோர் மானத் தேறித் தோகையர் காப்பச் சென்றாள். - 41



    445 - எண்டிசைக் காவலோரும் ஈரிரு திறத்த ரான
    அண்டரும உடுக்கள் தாமும் ஆரிடத் தொகையு ளோரும்
    வண்டுளர் குமுதம் போற்றும் மதியமும் ஏனைக் கோளும்
    விண்டொடர் இயக்கர் சித்தர் விஞ்சையர் பிறரும் போந்தார்.
    (33. புடவி - பூமி. சிலவர் - சிலர். உடுபதி - சந்திரன்.
    நாள் - நட்சத்திரம். கோள் - கிரகம்.
    34. ஆசை - திக்கு. 37. சேனையந் தலைவன் - சேனாதிபதி.
    38. திருவும் பாரும் - திருமகளும் பூமகளும். உவணர் கோமான் - கருடன்.
    39. மைந்தர் - உபப்பிரமர். 40. குரவர் - வியாழன் முதலியோர்.
    பாகம் - அவிர்ப்பாகம்.
    42. ஈரிரு திறத்தரான அண்டர் - ஆதித்தர், உருத்திரர், வசுக்கள்,
    மருத்துவர் என்னும் நால்வகை தேவர்கள்.
    ஆரிடத்தொகை - முனிவர் குழாம்.) - 42



    446 - சேணிடை மதியி னோடு செறிதரும் உடுக்க ளான
    வாணுதல் மகளிர் யாரும் மகிழ்வொடு தந்தை வேள்வி
    காணிய வந்தார் ஈது கண்ணுறீஇ அவுணர் கோமான்
    சோணித புரத்துக் கேளிர் தொகையொடுந் தெடா¢ந்து சென்றான். - 43



    447 - வனைகலன் நிலவு பொற்றோள் வாசவன் முதலா வுள்ள
    இனையரும் பிறரும் எல்லாம் இருவர்தம் மருங்கும் ஈண்டிக்
    கனகல வனத்திற் செய்த கடிமகச் சாலை எய்த
    முனிவர ரோடுந் தக்கன் முன்னெதிர் கொண்டு நின்றான். - 44



    448 - எதிர்கொடு மகிழ்ந்து மேலாம் இருவர்தங் களையும் அங்கண்
    முதிர்தரு காத லோடு முறைமுறை தழுவி வானோர்
    பதிமுத லோரை நோக்கிப் பரிவுசெய் தினையர் தம்மைக்
    கதுமெனக் கொண்டு வேள்விக் கடிமனை இருக்கை புக்கான். - 45



    449 - மாலயன் தன்னை முன்னவர் மணித்தவி சிருத்தி வான
    மேலுறை மகவா னாதி விண்ணர் முனிவர் யார்க்கும்
    ஏலுறு தவிசு நல்கி இடைப்பட இருந்தான் தக்கன்
    காலுறு கடலா மென்னக் கடவுள்மா மறைக ளார்ப்ப. - 46



    450 - அல்லியங் கமல மாதும் அம்புவி மகளும் வேதாப்
    புல்லிய தெரிவை மாரும் பொருவிலா உடுவி னோருஞ்
    சொல்லருஞ் சசியும் ஏனைச் சூரினர் பிறரும் வேத
    வல்லிதன் இருக்கை நண்ணி மரபின்வீற் றிருந்தார் மன்னோ. - 47



    451 - மாமலர்க் கடவுள் மைந்தன் மகத்தினை நாடி யாருங்
    காமுறும் உண்டி மாந்திக் கதுமென மீடும் என்றே
    பூமிசை மறையோர் தாமும் முனிவரும் போந்து விண்ணோர்
    தாமுறும் அவையை நண்ணித் தகவினால் சார்த லோடும். - 48



    452 - அழைத்திடப் போன தூதர் அனைவரும் போந்து தக்கன்
    கழற்றுணை வணங்கி நிற்பக் கருணைசெய் தவரை நோக்கி
    விழுத்தகு தவத்தீர் நீவிர் விளித்தனர் தமிலு றாது
    பிழைத்தனர் உளரோ உண்டேல் மொழிமெனப் பேசல் உற்றார். - 49



    453 - அகத்தியன் சனகன் முன்னோர் அத்திரி வசிட்டன் என்பான்
    சகத்துயர் பிருகு மேலாந் ததீசிவெஞ் சாபத் தீயோன்
    பகைத்திடு புலத்தை வென்ற பராசரன் இனைய பாலார்
    மகத்தினை இகழா ஈண்டு வருகிலர் போலும் என்றார். - 50



    454 - மற்றது புகல லோடு மலரயன் புதல்வன் கேளா
    இற்றிது செய்தார் யாரே முனிவரில் இனையர் தாமோ
    நெற்றியங் கண்ணி னார்க்கும் நேயம துடைய ரென்னாச்
    செற்றமொ டுயிர்த்து நக்கான் தேவர்கள் யாரும் உட்க.
    (43. சோணிதபுரம் - ஒரு நகரம். இ·து அசுரர்கள் இருக்கும் ஒரு நகரம்.) - 51
    ஆகத் திருவிருத்தம் - 454
    -----------

    12. ததீசிப் படலம் (455-519)




    455 - அன்ன வேலையில் ஆரிடர் தம்மொடுந்
    துன்னி னானொரு தொல்லிறைக் காகவே
    முன்ன மாலமர் மூண்டெழ மற்றவன்
    தன்னை வென்ற ததீசிஎன் பானரோ. - 1



    456 - கடிது போந்து கடிமகச் சாலையின்
    இடைய தாகி இமையவர் யாவரும்
    அடையும் எல்லை அணுகலுங் கண்ணுறீஇக்
    கொடிய தக்கன் குறித்துணர் கின்றனன். - 2



    457 - ஆகும் ஆகும் அரற்குரித் தல்லன்இப்
    பாக மாமகம் பார்க்கும் பொருட்டினால்
    ஏகி னானெனக் கஞசி எனாநினைந்
    தோகை யெய்தி உளங்குளிர்ப் பாகியே. - 3



    458 - வருக ஈண்டென மற்றவன் தன்னிடை
    ஒருபெ ருந்தவி சுய்த்தலும் மாதவர்
    இரும ருங்கும் இருந்திட ஆயிடைப்
    பொருவின் மாதவப் புங்கவன் மேவியே. - 4



    459 - ஆக்கந் தீரும் அயன்புதல் வன்தனை
    நோக்கி எம்மை நொடித்ததென் நீயிவண்
    ஊக்கி யுற்றதென் ஒல்லையில் யாவையும்
    நீக்க மின்றி நிகழ்த்துதி யென்னவே. - 5



    460 - தக்கன் ஆண்டுத் ததீசியை நோக்கியே
    நக்க னென்பவன் நான்பெறுங் கன்னியை
    மிக்க காதலின் வேட்டொளித் தோர்பகல்
    உக்க மேலுய்த் துயர்வரை ஏகினான். - 6



    461 - போய பின்னைப் புதல்விக்குத் தன்பெரு
    மாயை செய்தனன் மற்றவர் தங்களை
    ஆயு மாறவ் வகன்கிரி எய்தினேன்
    ஏய தன்மை இருவருந் தேர்ந்தரோ. - 7



    462 - அடுத்த பூதரை ஆங்கவர் கூவியே
    தடுத்தி டுங்களத் தக்கனை நம்முனம்
    விடுத்தி ரல்லிர் விலக்குதி ராலென
    எடுத்தி யம்பினர் ஏயினர் போலுமால்.
    (1. ஆரிடர் - முனிவர்கள். தொல் - பழைய.
    இறை- இங்குக் குபன் என்னும் அரசன்;
    இக் குபன் என்னும் அரசனுக்காகப் போர் செய்த திருமாலைத் ததீசி
    முனிவர் வென்றார் என்பது வரலாறு; இதன் விரிவை இந்நூலில் முன்னர்க் காண்க.
    5. நொடித்தது - அழைத்தது. ஊக்குதல் - முயற்சித்தல்.
    6. உக்கம் - இடபம். உயர்வரை - கயிலைமலை.) - 8



    463 - இற்று ணர்ந்திலன் ஏகினன் பூதர்கள்
    நிற்றி நீயென்று நிந்தனை எண்ணில
    சொற்ற லோடுந் துணையதில் வௌ¢ளியம்
    பொற்றை நீங்கிப் புரம்புகுந் தேனியான். - 9



    464 - தங்கண் மாநகர் சார்ந்தனன் நீங்குழி
    எங்கண் மாதும் எனைவந்து கண்டிலன்
    மங்கை யென்செய்வள் மற்றவன் மாயையால்
    துங்க மேன்மை துறந்தனள் போயினாள். - 10



    465 - அந்த வேலை அரும்பெரும் வேள்வியொன்
    றெந்தை செய்துழி யான்சென் றரற்குமுன்
    தந்த பாகந் தடுத்தனன் அவ்வழி
    நந்தி சாபம் நவின்றனன் போயினான். - 11



    466 - வேறு
    எறுழ்படு தண்ணுமை இயம்பு கையுடைச்
    சிறுதொழில் லவன்மொழி தீச்சொற் கஞ்சியே
    முறைபடு வேள்வியை முற்றச் செய்திலன்
    குறையிடை நிறுவினன் குரவ னாகியோன். - 12



    467 - நஞ்சமர் களன்அருள் நந்தி கூறிய
    வெஞ்சொலும் என்பெரு விரத முந்தெரீஇ
    அஞ்சினர் இன்றுகா றாரும் வேள்வியை
    நெஞ்சினும் உன்னலர் நிகழ்த்தும் வேட்கையால். - 13



    468 - ஆனதொர் செயலுணர்ந் தையம் ஏற்றிடும்
    வானவன் தனக்கவி மாற்றும் பான்மையான்
    நானொரு வேள்வியை நடாத்து கின்றனன்
    ஏனைய தோர்பயன் யாதும் வேண்டலன். - 14



    469 - அப்பெரு மகந்தனக் கமரர் மாதவர்
    எப்பரி சனரும்வந் தீண்டு தொக்கனர்
    ஒப்பருந் தவத்தினீர் உமக்கும் இத்திறஞ்
    செப்பினன் விடுத்தனன் செயலி தென்னவே.
    (9. இற்று - இதனை. 10. மாது - இங்கு மகள்.
    11. எந்தை - என் தந்தையான பிரமன்.
    12. எறுழ் - வலிமை. தண்ணுமை - மத்தளம். எறுழ் படு...
    சிறுதொழிலவன் - நந்தியம் பெருமான். குரவனாகியோன் - பிரமன்.
    14. ஐயம் ஏற்றிடும் வானவன் - சிவன்.) - 15



    470 - வேறு
    தண்ணளி புரித தீசி தக்கன துரையைக் கேளாப்
    புண்ணியம் பயனின் றம்மா பொருளினிற் பவமே யென்னா
    எண்ணினன் வினைக ளீட்டு இழிதகன் இயற்கை போலாம்
    அண்ணல்தன் செயலும் என்னா அணியெயி றிலங்க நக்கான். - 16



    471 - நக்கதோர் வேலை தன்னில் நலத்தகும் ஊழிக் கான்மேன்
    மிக்கெழும் வடவை என்ன வெய்துயிர்த் துரப்பிச் சீறி
    முக்கணன் அடியான் போலும் முறுவலித் திகழ்ந்தாய் என்னத்
    தக்கனீ துரைத்த லோடுந் ததீசிமா முனிவன் சொல்வான். - 17



    472 - மலரயன் முதலே யாக வரம்பிலா உயிரை முன்னந்
    தலையளித் துதவு தாதையாய் அளித்து மாற்றி
    உலகெலா மாகி ஒன்றாய் உயிர்க்குயி ராகி மேலாய்
    இலகிய பரனை நீத்தோ யாகம்ஒன் றியற்ற நின்றாய். - 18



    473 - புங்கவர் எவர்க்கும் நல்கும் புவிபுகழ் அறிகொள் வானும்
    அங்கியின் முதலும் வேள்விக் கதிபனும் அளிக்கின் றானுஞ்
    சங்கரன் தானே வேதஞ் சாற்றுமால் மகத்துக் காதி
    இங்கொரு தேவுண் டென்னின் எழுகென உரைத்தி மாதோ. - 19



    474 - மாலயன் முதலோர் யாரும் வரம்பிலித் திருவை எய்த
    மேலைநாள் அளித்தோன் தானும் விமலனும் இனையர்க் கெல்லாம்
    மூலமுந் தனக்கு வேறொர் முதலிலா தவனும் எங்கள்
    ஆலமர் கடவுள் அன்றி அமரரில் யாவர் அம்மா. - 20



    475 - தேவதே வன்மா தேவன் சிறப்புடை ஈசன் எங்கோன்
    மூவரின் முதல்வன் ஏகன் முடிவிற்கு முடிவாய் நின்றோன்
    ஆவியுள் ஆவி யானோன் அந்தண னாதி என்றே
    ஏவரை யிசைத்த அம்மா எல்லையில் மறைக ளெல்லாம். - 21



    476 - விதிமுறை லாகி உள்ளோர் வியனுயிர்த் தொகையாம் ஈசன்
    பதியவன் பணிய தன்றே பரித்தனர் இனையர் எல்லாம்
    இதுவுமச் சுருதி வாய்மை இவையெலாம் அயர்த்து வாளா
    மதிமயங் கினையால் பேரா மாயையூ டழுந்து கின்றாய். - 22



    477 - அந்தணர்க் காதி ஈசன் ஏனையோர்க் கரியே வேதா
    இந்திரன் என்று வேதம் இயம்பிய மறையோர் தங்கண்
    முந்தையின் முதலை நீத்து முறையகன் றொழுகல் பெற்ற
    தந்தையை விலக்கி வேறு தேடுவான் தன்மை யன்றே. - 23



    478 - ஆதலின் எவர்க்கும் மேலாம் ஆதியை இகழா நிற்றல்
    பேதைமை யன்றி யீதோர் பெருமித மன்றால் ஆற்ற
    நோதக உன்னி யாரே நோற்பவா¢ அனையை நீயே
    வேதம தொழுக்கம் நீத்திவ் வேள்வியைப் புரிய நின்றாய். - 24



    479 - விலக்கினை மறையின் வாய்மை வேள்விசெய் யினுமுற் றாது
    கலக்குமேல் அமல னாணை காண்டியால் அவனுக் கஞ்சா
    வலத்தினர் யாவ ருண்டேல் மாய்வரே மறையும் எம்முன்
    இலைப்பொலி சூலம் ஏந்தும் ஏகனென் றேத்திற் றன்றே.
    (16. வினைகள் - பாவச் செயல்கள். ஈட்டும் - செய்யும்.
    17. ஊழிக்கால் - ஊழிக்காற்று. வடவை - வடவாமுகாக்கினி.
    19. மகத்துக்கு ஆதி - யாகத்தலைவன்.
    20. விமலன் - மலமற்றவன்; பரிசுத்தன். 21. ஏவரை - எவரை.
    22. அயர்த்து - மறந்து. வாளா - வீணாக. பேரா - நீங்காத.
    23. முந்தையின் முதலை - முழுமுதற் கடவுளாகிய சிவனை.) - 25



    480 - ஆதியு முடிவும் இல்லா அமலனுக் கவியை நல்கி
    வேதக முறைவ ழாது வேள்விஓம் புவது நாடாய்
    தீதுநின் எண்ணம் என்னச் சிவன்தனச் கருள்பா கத்தை
    மாதவன் தனக்கு நல்கி மாமகம் புரிவன் என்றான். - 26



    481 - அவ்வுரை கொடியோன் கூற அருந்தவ முனிவன் கேளா
    அவ்வமீது துரைத்தாய் மேலாய் யாவரும் புகழ நின்ற
    செவ்வியர் தமையி ழித்துச் சிறியரை உயர்ச்சி செய்தல்
    உய்வகை அன்றா னும்மோ ருயிர்க்கெலா முடிவீ தென்றான். - 27



    482 - ஊறுசேர் தக்கன் சொல்வான் உனதுருத் திரனை ஒப்பார்
    ஆறின்மே லைந்த வான உருத்திரர் அமர்வான் ஆசை
    ஈறுசேர் தருமீ சானர் இருந்தனர் அவர்க்கே முன்னர்
    வீறுசேர் அவியை நல்கி வேள்வியை முடிப்ப னென்றான். - 28



    483 - என்னலும் முனிவன் சொல்வான் ஈறுசெய் தகில மெல்லாந்
    தன்னிடை யொடுக்கி மீட்டுந் தாதையாய் நல்கி யாரு
    முன்னருந் திறத்தில் வைகும் உருத்திர மூர்த்திக் கொப்போ
    அன்னவன் வடிவும் பேரும் அவனருள் அதனாற் பெற்றோர். - 29



    484 - உருத்திர மூர்த்தி என்போன் உயர்பரம் பொருளா யுள்ளே
    நிருத்தம தியற்று கின்ற நித்தனாம் அவன்தன் பொற்றாள்
    கருத்திடை நினைந்தோர் அன்னான் காயமுந் திருப்பேர் தானும்
    பரிப்பரால் அனையர் எல்லை பகர்ந்திடின் உலப்பின் றாமால். - 30



    485 - ஆதிதன் நாமம் பெற்றோர் அவனியல் அடையார் கொண்ட
    ஏதமில் வடிவும் அற்றே என்னினும் இறைவ ரென்றே
    பூதல முழுதும் விண்ணும் போற்றிட இருப்பர் இந்த
    வேதனும் புகழு நீரான் மெய்ந்நெறித் தலைமை சார்வார். - 31



    486 - ஈசனை அளப்பில் காலம் இதயமேல் உன்னி நோற்றே
    ஆசக லுருவம் பெற்ற அன்பினர் போல்வர் இன்னோர்
    வாசவன் முதலோர் போல வரத்தகார் எந்தை பால்நீ
    நேசமில் லாத தன்மை நினைந்திலர் போலு மென்றான். - 32



    487 - வேறு
    என்ற காலை இருந்ததக் கன்னிது
    நன்று நாரணன் நான்முகன் நிற்கஈ
    றொன்று செய்யும் உருத்திர னாதியாய்
    நின்ற தென்கொல் நிகழத்துதி யென்னவே. - 33



    488 - விதிசி ரங்கள் வியன்முடி வேய்ந்திடும்
    பதிசி வன்தன் பதத்துணை உட்கொடு
    மதிசி றந்திட வாலிதின் வைகிய
    ததீசி யென்னுந் தவமுனி சாற்றுவான்.
    (26. நாடாய் - கருதுகின்றிலை. 27. எவ்வம் - குற்றம்.
    28. ஆறின் மேல் ஐந்து ஆன உருத்திரர் - ஏகாதச ருத்திரர்.
    ஆசைஈறு - வடகிழக்குத் திசை.
    32. உருவம் பெற்ற - சாரூபம் பெற்ற. 34. விதி சிரங்கள் -
    பிரமர்களின் தலைகள். முடி - தலைமாலை.) - 34



    489 - இருவர் தம்மொடும் எண்ணிய தன்மையால்
    ஒருவ னான உருத்திர மூர்த்தியைப்
    பெரியன் என்று பிடித்திலை அன்னதுந்
    தெரிய ஓதுவன் தேர்ந்தனை கேட்டியால். - 35



    490 - ஆதி யந்தமி லாதஎம் மண்ணலுக்
    கோது பேரும் உருவுமொர் செய்கையும்
    யாது மில்லையிவ் வாற்றினை எண்ணிலா
    வேதம் யாவும் விளம்புந் துணிபினால். - 36



    491 - அன்ன தோர்பரத் தண்ணல்தன் னாணையால்
    முன்னை யாரிருள் மூடத்துண் மூழ்கிய
    மன்னு யிர்த்தொகை வல்வினை நீக்குவான்
    உன்னி யேதன்னு ளத்தருள் செய்துமேல். - 37



    492 - உருவுஞ் செய்கையும் ஓங்கிய பேருமுன்
    அருளி னாற்கொண்ட னைத்தையும் முன்புபோல்
    தெரிய நல்கித் திசைமுக னாதியாஞ்
    சுரர்கள் யாரையுந் தொன்முறை ஈந்துபின். - 38



    493 - ஏற்ற தொல்பணி யாவும் இசைத்தவை
    போற்று செய்கை புரிந்துபின் யாவையும்
    மாற்று கின்றது மற்றெமக் காமெனச்
    சாற்றி னான்அத் தகைமையுங் கேட்டிநீ. - 39



    494 - வேறு
    அந்தம் ஆதியின் றாகியே உயிரெலாம் அளிக்குந்
    தந்தை யாகிய தனக்கன்றி முழுதடுந் தகைமை
    மைந்த ராகிய அமரரான் முடிவுறா மையினால்
    எந்தை தன்வயிற் கொண்டனன் ஈறுசெய் யியற்கை. - 40



    495 - அன்று தேவர்கள் யாவரும் எம்பிரான் அடியில்
    சென்று தாழ்ந்தெமக் கிப்பணி புரிந்தனை சிறியேம்
    என்று தீருதும் இப்பரம் என்றலும் எங்கோன்
    ஒன்று கூறுதுங் கேண்மினோ நீவிர்என் றுரைத்தான். - 41



    496 - ஆயுள் மற்றுமக் கெத்துணை அத்துணை யளவு
    நீயிர் இச்செயல் புரிமின்கள் பரமெ நினைந்தீர்
    தூய வித்தையால் நீறுள தாக்கியே தொழுது
    காய மேற்புனைந் தஞ்செழுத் துன்னுதிர் கருத்தின்.
    (37. தன்ஆணை - தனது அருட் சத்தி. 40. ஈறுசெய் இயற்கை -
    சங்காரத் தொழில். 42. பரம் - பாரம்; சுமை. தூய வித்தையால் -
    பரிசுத்தமான பஞ்சப்பிரம மந்திரங்களால். உன்னுதிர் - நினையுங்கள்.) - 42



    497 - தன்மை யிங்கிவை புரிதிரேல் இத்தொழில் தரிக்கும்
    வன்மை யெய்துவீர் அன்றிநங் கலைகணும் மருங்கு
    தொன்மை யுள்ளன காட்டிநின் றருளுமால் தொலைவில்
    நன்மை எய்துவீர் என்றருள் செய்தனன் நம்பன். - 43



    498 - அன்ன வர்க்கொடே யெவ்வகைச் செய்கையும் அளித்துப்
    பின்னை யுள்ளதோர் செய்கையும் புரியுமெம் பெருமான்
    முன்னை வேதங்கள் அவன்தனை ஐந்தொழில் முதல்வன்
    என்னும் மற்றிது தேருதி கேட்டியால் இன்னும். - 44



    499 - வேறு
    உருத்திரன் என்னும் நாமம் ஒப்பிலா அரற்கும் அன்னான்
    தரத்தகு சிறார்கள் ஆனோர் தங்கட்கும் அனையன் பாதங்
    கருத்திடை உன்னிப் போற்றுங் கணங்கட்கும் அவன்றன் மேனி
    பரித்திடு வோர்க்குஞ் செந்தீப் பண்ணவன் தனக்கும் ஆமால். - 45



    500 - இன்னலங் கடலுட் பட்டோர் யாரையும் எடுக்கும் நீரால்
    உன்னரும் பரம மூர்த்தி உருத்திரன் எனும்பேர் பெற்றான்
    அன்னவன் தரவந் தோர்க்கும் அடியடைந் தோர்க்கும் அன்னான்
    தன்னுரு வெய்தி னோர்க்குஞ் சார்ந்ததால் அவன்த னிப்பேர். - 46



    501 - செந்தழ லென்ன நின்ற தேவனுக் குருத்தி ரப்பேர்
    வந்தது புகல்வன் கேட்டி வானவன் யாரும் ஈண்டி
    முந்தையில் அவுணர் தம்மை முனிந்திட முயன்று செல்ல
    அந்தமில் நிதியந் தன்னை அவ்வழி ஒருங்கு பெற்றார். - 47



    502 - பெற்றிடு நிதியம் எல்லாம் பீடிலால் கனல்பால் வைத்துச்
    செற்றலர் தம்மேற் சென்று செருச்செய்து மீண்டு தேவர்
    உற்றுழி அதுகொ டாமல் ஓடலுந் தொடர்ந்து சூழ
    மற்றவன் கலுழ்த லாலே வந்தது மறையுங் கூறும். - 48



    503 - ஓதுமா மறைகள் தம்மில் உருத்திரன் எனும்பேர் நாட்டி
    ஏதிலார் தம்மைச் சொற்ற தீசன்மேற் சாரா வந்த
    ஆதிநா யகனைச் சுட்டி அறைந்ததும் பிறர்மாட் டேறா
    மேதைசா லுணர்வின் ஆன்றோர் விகற்பம்ஈ துணர்வ ரன்றே. - 49



    504 - ஓங்கிய சுருதி தன்னுள் உருத்திரன் எனுநா மத்தால்
    தீங்கன லோனை ஏனைத் திறத்தரை உரைத்த வாற்றை
    ஈங்கிவண் மொழியல் எங்கோற் கியம்பிய இடங்கள் நாடி
    ஆங்கவன் தலைமை காண்டி அறைகுவன் இன்னும் ஒன்றே.
    (46. அன்னான் தன்உரு - சிவசாரூபம். 48. கலுழ்தல் - அழுதல்.
    49. மேதை - சிறந்த அளிவு. 50. மொழியல் - கூறாதே.
    காண்டி - காண்பாயாக.) - 50



    505 - வேறு
    முந்தை யோர்பகன் முனிவர்கள் யாவரு முதலோ
    டந்த மில்லதோர் பரம்இவர் அவரென அறைந்து
    தந்தமிற் சென்று வாதுசெய் தறிவருந் தகவால்
    நொந்து மற்றவர் பிரமனை வினவுவான் நுவன்றா£. - 51



    506 - மல்லல் மேருவின் முடிதனில் மனோவதி வைகும்
    அல்லி வான்கம லத்திடை அண்ணலை அணுகி
    எல்லை தீர்ந்திடு பரம்பொருள் உணர்கிலேம் இவரென்
    றொல்லை தன்னில்நீ உரைத்தருள் செய்யனெ உரைத்தார். - 52



    507 - உரைத்த வாசகங் கேட்டலும் நான்முகத் தொருவன்
    கருத்தில் இங்கிவை தௌ¤தர மறைமொழி காட்டி
    விரித்து மென்னினுந் தௌ¤வுறார் மெய்மையால் விரைவில்
    தெரித்து மிங்கென உன்னினன் அவர்மயல் தீர்ப்பான். - 53



    508 - நாற்ற லைச்சிறு மாமகன் தாதைதன் னலஞ்சேர்
    தோற்ற முள்ளுற உன்னியே விழபுனல் சொரிய
    ஏற்றெ ழுந்துமீக் கரம்எடா வுருத்திர னென்றே
    சாற்றி மும்முறை நின்றனன் தௌ¤தருந் தகவால். - 54



    509 - அங்கண் நான்முகன் சூளினால் ஆதியம் பகவன்
    சங்க ரன்எனக் காட்டியே பொடிப்புமெய் தயங்க
    வெங்க னற்படும் இழுதென உருகிமீ மிசைசேர்
    செங்கை மீட்டனன் முனிவருக் கினையன செப்பும். - 55



    510 - வம்மி னோவுமக் கோருமரை மொழிகுவன் வானோர்
    தம்மை எங்களை அளித்தனன் மறைகளுந் தந்தான்
    மெய்ம்மை யாவர்க்குஞ் செய்பணி உதவினன் மேனாள்
    மும்மை யாகிய செய்கைநம் பாலென மொழிந்தான். - 56



    511 - அருளின் நீர்மையால் ஐந்தொழில் புரிபவன் அநாதி
    பரமன் நின்மலன் ஏதுவுக் கேதுவாம் பகவன்
    ஒருவா¢ பாலினும் பிறந்திடான் அருவதாய் உருவாய்
    இருமை யாயுறை பூரண னியாவர்க்கும் ஈசன். - 57



    512 - முற்று மாயினான் முடிவிற்கும் முடிவிற்கும் முடிவாய்
    உற்றுளான் என்றும் உள்ளவன் அனைத்தையும் உடையோன்
    மற்றென னாலுரைப் பரியதோர் சீர்த்தியன் மலர்த்தாள்
    பற்றினோர்க் கன்றி உணரவொண ணாததோர் பழையோன். - 58



    513 - அன்ன தோர்சிவன் பரமென மறையெலாம் அறையும்
    இன்னு மாங்கவன் நிலையினைக் கண்ணனும் யானும்
    உன்னி நாடியுங் காண்கிலம் அவன்பதி ஒழிந்தோர்
    மன்னு யிர்த்தொகை யென்றனன் அன்னதொல் மலரோன். - 59



    514 - அருள்பு ரிந்துபின் சிவனடி கைதொழு தந்நாள்
    மருள கன்றிடு பிதாமகன் இருந்தனன் மற்றப்
    பொருளின் நீர்மையைத் தெரிந்துதம் புந்திமேற் கொண்ட
    இருளொ ழிந்தனர் மகிழ்ந்தனர் முனிவரர் இசைப்பார்.
    (51. பரம் - பரம்பொருள். 55. இழுது - நெய்.
    மீமிசை - மிகமேலே; தலைக்குமேல்.
    58. மலர்த்தாள் பற்றியரா அன்பினர். 60. மருள் - மயக்கம்.
    பிதாமகன் - பிரமதேவன்.) - 60



    515 - தாதை யாய்எமை அளித்தனை யாங்கள்உன் தனயர்
    ஆத லால்எமக் கித்திறம் தேற்றினை அடிகேள்
    ஈதலால் இன்று குரவனும் ஆயினை என்றே
    பாத தாமரை வணங்கினர் முனிவரர் பலரும். - 61



    516 - அடிவ ணங்கினர் தமைத்தெரிந் தின்றுதொட் டமலன்
    வடிவம் உன்னுதிர் அருச்சனை புரிகுதிர் வயங்கும்
    பொடிய ணிந்துநல் லஞ்செழுத் தியம்புதிர் புரைசேர்
    கொடிய வெம்பவம் அகலுதிர் எனவிடை கொடுத்தான். - 62



    517 - ஆதலால் எங்க ளீசனே பரம்பொருள் அல்லா
    ஏதி லாரெலா உயிர்த்தொகை யாகுமால் இதனைக்
    காத லாலுரைத் தேன்அன்று வாய்மையே காண்டி
    வேத மேமுத லாகிய கலையெலாம் விளம்பும். - 63



    518 - அன்றி முன்அயன் உன்றனக் கரன்புகழ் அனைத்தும்
    நன்று கேட்டிட உணர்த்தினன் நீயது நாடி
    நின்று மாதவம் புரிந்திது பெற்றனை நினக்குப்
    பொன்று காலம்வந் தெய்தலின் மறந்தனை போலாம். - 64



    519 - தந்தை யேமுதல் யாவரும் முடிவுறுந் தகவால்
    வந்து நின்னவை இருந்தனர் மாயையால் மருண்டாய்
    உய்ந்திடு டும்படி நினைத்தியேல் அரற்கவி உதவி
    இந்த மாமகம் புரிந்திடு வாயென இசைத்தான்.
    (62. பொடி - விபூதி. அஞ்செழுத்து - பஞ்சாட்சரம்.
    63. ஏதிலார் - அயலார்.
    65. நின் அவை - உனது சபை.) - 65
    ஆகத் திருவிருத்தம் - 519
    ---------

    13. ததீசி யுத்தரப் படலம் (520 - 907)




    520 - இந்த வண்ணமத் ததீசிமா முனிவரன் இயம்பக்
    கந்த மாமலர்க் கடவுள்சேய் நகைசெய்து கானிற்
    சிந்து மென்பொடு சிரத்தொகை அணியுமோ தேவர்
    வெந்த சாம்பரும் பூசுமோ பரனெனும் மேலோன். - 1



    521 - கழிந்த தீயுடல் ஏந்தியே திரியுமோ கானில்
    இழிந்த கேசமுந் தரிக்குமோ ஏனத்தின் எயிறு
    மொழிந்த கூருமத் தோடுமேற் கொள்ளுமோ உலகம்
    அழிந்தி டும்படி உயிர்களை முடிக்குமோ அமலன். - 2



    522 - புலியின் ஈருரி உடுக்குமோ தந்தியின் புன்றோல்
    வலிய தன்புயம் போக்குமோ செந்தழல் மழுமான்
    இலைகொள் முத்தலை வேற்படை ஏந்துமோ எங்கும்
    பலியு மேற்குமோ நிருத்தமுஞ் செய்யுமோ பகவன். - 3



    523 - மிக்க சாரதர் படையெனத் திரியுமோ விடமே
    கக்கும் வெம்பணி பூணுமோ வெண்டலை கலமாச்
    செக்கர் மாமுடி தரிக்குமோ அம்பரந் திசையா
    நக்க னாகுமோ வேற்றுருக் கொள்ளுமோ நாதன். - 4



    524 - விடையும் ஏறுமோ ஆலமுங் கொள்ளுமோ வீந்தோர்
    சுடலை தன்னினும் ஆடுமோ ஒருத்தியைச் சுமந்தோர்
    மடம கட்கிடங் கொடுக்குமோ மகவையும் பெறுமோ
    கடிய தோர்குணம் படைக்குமோ பரமெனுங் கடவுள். - 5



    525 - ஆதலால் உங்கள் ஈசனோர் குணமிலன் அவனுக்
    கீத லின்றியாம் புரிகின்ற மகத்தவி எனலும்
    நாத னைக்கொலோ பழிக்குவன் இவனென நகையாக்
    கோதின் மாதவ முனிவரன் அழலெனக் கொதித்தான். - 6



    526 - தீர்த்தன் உண்மையை உணர்கிலன் இவனொடு சிறிதும்
    வா£த்தை கூறுதல் தகாதுமால் அயன்முதல் வானோர்
    ஆர்த்தசங் கத்தில் இகழ்ந்தவற் கெதிர்மொழி யறைய
    ஈர்த்த தென்னுளம் உணர்த்துவன் சிலவென இசைந்தான். - 7



    527 - இந்த வாறிசைந் தெம்பெரு மான்றனக் கிவண்நீ
    நிந்தை போற்சில கூறினை நிமலனுக் கவைதாம்
    வந்த வண்ணமோர் சிறுவதும் உணர்ந்திலை மருண்டாய்
    புந்தி யில்லதோர் கயவநீ கேளெனப் புகல்வான். - 8



    528 - நிலவு கின்றதன் னருளுருக் கொண்டிடு நிமலன்
    தலைமை பெற்றிடு புங்கவர் தம்மைமுன் தந்தே
    உலகம் யாவையும் அளித்தருள் செய்திட உதவி
    அலகி லாவுயிர் யாவையும் அயன்கண்நின் றளிப்பான். - 9



    529 - மாய வன்கண் நின் றவையெலாம் போற்றிமற் றவைக்குத்
    தூய துப்புர வருத்தியே மேல்வினை தொலைச்சி
    ஆய வற்றிலோர் பற்பல வீடுற அருளி
    மேய ஆருயிர் உலகெலாம் பின்னரே வீட்டும். - 10



    530 - அன்ன வேலையில் அவையெலாம் அழித்தபின் னளிப்போர்
    என்ன நின்றவர் தன்மையும் ஒடுக்குறும் இதற்பின்
    முன்ன ருள்ளதோர் ஏகமாய் உறையும்எம் மூர்த்தி
    பின்னும் இம்முறை புரிந்திடும் என்றும்இப் பெற்றி.
    (1. கந்தமாமலர் - சிறந்த தாமரைமலர். 2. கேசம் - மயிர்;
    இது பிரம்மவிஷ்ணுக்களின் சிகை. ஏனத்தின் எயிறு - பன்றிக்கொம்பு.
    கூருமம் - ஆமை. 3. தந்தி - யானை. பலி - பிச்சை.
    பகவன் - சகல குணங்களும் உடையவன்; சிவன்.
    4. வெண்டலை - தசைநீங்கியதலை. அம்பரம் - ஆடை. நக்கன் - நிருவாணி.
    6. ஈதல்இன்று - கொடுப்பதில்லை.
    7. தீர்த்தன் - பரிசுத்தன்; சிவபெருமான். சங்கம் - சபை.
    8. நிந்தைபோல் - பழிப்பினையுடையவைபோல்.
    சிறுவதும் - சிறிதும். கயவ - கீழ்மகனே! 9. மேல் வினை - ஆகாமியவினை.
    10. துப்புரவு - போகம்.) - 11



    531 - பரமன் இவ்வகை அடுந்தொறும் அடுந்தொறும் பலவாம்
    பிரம னாதியோர் என்பினைத் தரிக்குமப் பெரியோர்
    சிரமெலாந் தொடுத்த தணியலா அணிந்திடுஞ் சிகைதன்
    உரமு லாவுமுந் நூலென வேயணிந் துறையும். - 12



    532 - அல்ல தங்கவர் தங்களை முத்தலை அயிலால்
    மெல்ல வேயெடுத் தேந்திடும் அவர்தமை விழியால்
    தொல்லை நாளின் நீறாக்கியும் புனைந்திடுந் தூயோன்
    மல்லல் மாதவம் அனையவர் இயற்றிய வகையால். - 13



    533 - ஆத லால்தனை வியப்பதற் கன்றவை அணிதல்
    ஈத லாதொரு திறமுள தியாவரும் எவர்க்கும்
    நாத னேயிவன் என்றுதன் பாங்கரே நண்ணித்
    தீதெ லாமொரீஇ முத்திபெற் றுய்ந்திடுஞ் செயலே. - 14



    534 - என்பு நீறொடு கழியுடல் சிகைமுடி எனைத்தும்
    முன்ப ணிந்திடும் இயல்பினை முழுதுயிர்த் தொகைக்கும்
    அன்பு செய்திடுஞ் செயலிது வாமென அறிநீ
    பின்பு முள்ளதுங் கேண்மதி அகந்தையாற் பெரியோய். - 15



    535 - விண்ணு ளோர்க்கெலாம் அல்லலே வைகலும் விளைத்து
    நண்ணும் ஆடக் கண்ணினன் முன்னமோர் நாளில்
    மண்ண கந்தனை வௌவியே வயிற்றிடை வைத்துத்
    துண்ணெ னப்பிலம் புக்கனன் உயிரெலாந் துளங்க. - 16



    536 - கண்டு வானவர் யாவரும் அஞ்சினர் கரிய
    கொண்டல்நன் மேனியம் பண்ணவன் கோகன தத்தோன்
    துண்ட மாகிய விடத்திலோர் ஏனமாய்த் தோன்றி
    அண்ட மீதுபோய் வடவரை எனவளர்ந் தார்த்தான். - 17



    537 - ஓரி மைக்குமுன் பாதலந் தன்னில்மால் உற்றுக்
    கூரெ யிற்றினாற் பாய்ந்துபொற் கண்ணனைக் கொன்று
    பாரி னைக்கொடு மீண்டுமுன் போலவே பதித்து
    வீர முற்றனன் தன்னையே மதித்தனன் மிகவும். - 18



    538 - மாலும் அப்பகல் அகந்தையாய் உணர்வின்றி மருப்பால்
    ஞாலம் யாவையும் அழிதர இடந்தவை நனிசூழ்
    வேலை தன்னையும் உடைத்தனன் அன்னதோர் வேலை
    ஆல மார்களத் தண்ணல்கண் டெய்தினான் அங்கண்.
    (12. உரம் - மார்பு. முந்நூல் - பூணூல். 13. அயில் - சூலம்.
    நீறாக்கி - விபூதி ஆககி.
    15. கழியுடல் - வெண்டலை. முடி - தலைகள்.
    16. ஆடகக் கண்ணினன் - இரணியாட்சன்.
    17. கொண்டல்நன் மேனியம் பண்ணவன் - திருமால்.
    கோகனதத்தோன் துண்டமாகிய இடத்தில் - பிரமனுடைய நாசியினிடத்தில்.
    துண்டம் - நாசி. ஏனம் - (வௌ¢ளைப்) பன்றி. வடவரை - மேருமலை.
    18. பொற்கண்ணன் - இரணியாட்சன். 19. மருப்பால் - கொம்பினால்.
    இடந்து - கிளரி. வேலை - கடல்.) - 19



    539 - கண்டு கண்ணுதல் அவன்மருப் பொன்றினைக் கரத்தால்
    கொண்டு வல்லையிற் பறித்தலும் உணர்வுமுன் முறுக
    விண்டு மற்றதும் பறிப்பன்இங் கிவனென வெருவிப்
    பண்டு போலநின் றேத்தலும் போயினன் பரமன். - 20



    540 - அன்று கொண்டதோர் மருப்பினைச் சின்னமா அணிந்தான்
    இன்றும் அங்கவன் மார்பிடைப் பிறையென இலங்கும்
    ஓன்று மற்றிது கேட்டனை நின்றதும் உரைப்பாம்
    நன்று தேர்ந்துணர் மறைகளும் இத்திறம் நவிலும். - 21



    541 - அடலின் மேதகு தேவரும் அவுணரும் அந்நாட்
    கடல்க டைந்திடும் எல்லையின் மந்தரங் கவிழ
    நெடிய மாலது நிறுவியே பொருக்கென நீத்தந்
    தடவி உள்ளணைந் தாமையாய் வெரிநிடைத் தரித்தான். - 22



    542 - தரித்த வேலைஅவ் வேலையை மதித்திடத் தன்கண்
    அருத்தி மிக்குறும் அமிர்தினைத் தருதலும் அதனைத்
    தெரித்து மற்றிது நமதென நமதெனச் செப்பி
    மருத்தின் நம்மையால் அமரரும் அவுணரும் மலைந்தார். - 23



    543 - மலைந்த போரினை நீக்கலன் மாயன்இவ் வரையை
    அலைந்த வேலையின் நிறுவியே வெரிநிடை ஆற்றி
    உலைந்தி டாவகை காத்துமா லெனப்பெரி துன்னக்
    கலந்த தால் அவன் உளத்தினில் அகந்தையங் கடலே. - 24



    544 - அகந்தை எய்தியே யாவையுந் தேற்றலான் அலைபோய்த்
    திகந்த முற்றிட வேலைகள் உழக்கினன் திரியச்
    சகந்த னக்கழி வெய்தலும் தனதருட் டன்மை
    இகந்த னன்கொலாம் கண்ணனென் றுன்னினன் எங்கோன். - 25



    545 - அற்றை நாளவண் வல்லையில் ஏகியே அரிதன்
    முற்ற லாமையின் உருவினை நோக்கியே முனிந்து
    கற்றை வார்சடைக் கண்ணுதல் யாப்புறக் கரத்தாற்
    பற்றி யாங்கவன் அகந்தையும் வன்மையும் பறித்தான். - 26



    546 - நினைந்து தொல்லுருக் கொண்டனன் புகழ்தலும் நிலவைப்
    புனைந்த செஞ்சடை நின்மலன் அவுணரைப் போக்கி
    இனைந்த தேவருக் கமிர்தினை ஈகென ஏக
    வனைந்த மேனிமான் மாயைமால் அவுணரை மாய்த்தான். - 27



    547 - மாய்த்து வானவர்க் கமுதினை நல்கினன் வையங்
    காத்த கண்ணனென் றுரைப்பரால் அவனுறு கமடம்
    மீத்த யங்கிய காப்பினை வாங்கியே விமலன்
    சாத்தி னான்முனம் அணிந்திடு மருப்புடன் சார.
    (22. வெரித் - முதுகு. 23. மருத்து - அமிர்தம்.
    24. அகந்தையங் கடல் - அகங்காரமாகிய கடல்.
    25. திகந்தம் - திக்கின் முடிவு. இகந்தனன் - இகழ்ந்தனன்.
    26. முற்றல் ஆமை - முதிய ஆமை.
    28. கமடம் மீத் தங்கிய காப்பு - ஆமை ஓடு.) - 28



    548 - வாரி சூழ்புவி அகழ்தரு கேழலின் மருப்பும்
    மூரி யாமையின் ஓடுமேற் கொண்டது மொழிந்தாம்
    தாரு காவனத் தெம்பிரான் பலிக்குறு தகவுஞ்
    சேர வேயவண் நிகழ்ந்தவுங் கூறுதுந் தௌ¤நீ. - 29



    549 - வேறு
    முன்பு தாருக வனத்தின் முனிவரர் யாரும் ஈசற்
    கன்பி லராகி வேள்வி அளப்பில புரிந்து தாமே
    இன்புறு முத்தி தன்னை எய்துவான் உன்னி அங்கம்
    துன்புற வாளா நோற்றுத் துணிவினால் ஒழுக லுற்றார். - 30



    550 - ஒழுகிய வேலை தன்னில் உயிர்க்குயி ராகி உற்றோன்
    பழுதினை அகற்றித் தன்னோர் பாங்கரில் உமையாள் மேவ
    விழுமிய கயிலை நாப்பண் வீற்றிருந் தருள்வோன் அங்கண்
    இழுதையர் புரியும் நீர்மை யாவையும் உணர்ந்தான் அன்றே. - 31



    551 - முன்னவன் இதனை நாடி முழுதுணர் முகுந்தன் தன்னை
    உன்னினன் அன்ன பான்மை ஒய்யென உணர்ந்து மாலோன்
    என்னையும் முதல்வன் தன்பால் எய்துவான் பணித்தான் என்னாப்
    பன்னப அமளி நீத்துப் பணியினாற் கயிலை உற்றான். - 32



    552 - உற்றனன் நகர்முன் எய்தி உணர்த்திய நந்தி உய்ப்பப்
    பற்றலர் புரமூன் றட்ட பரனடி பணிந்து முன்போய்
    நிற்றலுங் குறிப்பால் அங்கண் நினைத்தன உணர்த்தி மாயன்
    பொற்றடஞ் செங்கை பற்றிப் புனிதன்ஆண் டெழுந்து போந்தான். - 33



    553 - கயிலையங் கிரியை நீங்கிக் கண்ணனை நோக்கித் தொன்னாள்
    இயலுறு நினது பெண்மை எய்துதி இவண்நீ யென்னப்
    புயலுறழ் மேனி மாயோன் பொருக்கென அளப்பில் காமர்
    மயலுறு பான்மை அங்கோர் மடந்தையாய் மருங்கு வந்தான். - 34



    554 - வந்திடு கின்ற காலை மாயைசேர் பொருண்மை முற்றுந்
    1தந்திடும் உமையுங் காணில் தளர்ந்து வீழ்பான்மை தானும்
    அந்தமில் யாணர் மேல்கொண் டாயிடைப் பெயர்ந்தான் முக்கண்
    எந்தைதன் வடிவின் நீர்மை யார்விரித் துரைக்கற் பாலார். - 35



    555 - முன்பன துருவை எல்லாம் முகனுறு விழியால் மாந்தித்
    முன்புறு மால்மீக் கொள்ளத் துண்ணென அரியுஞ் சோர்ந்தும்
    அன்புடை அருளால் வந்தான் மற்றவன் தனக்கு மாலோன்
    என்பதோர் பெயரும் அஞ்ஞான றெய்திய போலும் அன்றே.
    (29. கேழல் - பன்றி. மூரி - பெரிய. 30. வாளா - வீணாக.
    31. அங்கண் - இங்குத் தாருகாவனம். இழுதையர் - அறிவிலிகள்.
    32. முதல்வன் - இறைவன்; சிவன். பன்னக அமளி - சேஷசயனம்.
    32. பற்றலர் - பகைவர் ; திரிபுரர். 35. யாணர் - அழகு.
    36. முன்பன் - முதல்வன்.) - 36



    556 - நராரியின் உரிவை நீத்து நக்கனே யாகி முக்கட்
    பராபரன் சூலத் தோடு பலிக்கலன் அங்கை கொண்டு
    முராரிதன் பாங்கர் செல்ல முனிவருக் கிருக்கை யாகத்
    தராதல மதிக்க நின்ற தாருகா வனத்திற் புக்கான். - 37



    557 - புக்கனன் மாலை நோக்கிப் போந்துநீ நமைஎண் ணாது
    தொக்குறு முனிவர் வைகுஞ் சூழல்கள் தோறும் நண்ணி
    மிக்கமால் பூட்டி அன்னோர் விரதங்கள் மாற்றி நந்தம்
    பக்கநீ வருதி என்னப் பகர்ந்தனன் விடுத்துச் சென்றான். - 38



    558 - விடுத்தலும் முராரி ஏகி வேள்வியுந் தவமுந் தாமே
    கொடுத்திடு முத்தி யென்னுங் கொள்கைசேர் முனிவர் யாரும்
    அடுத்திடும் அவைக்கண் எய்தி அளவையில் அநங்கர் வல்லே
    தொடுத்திடு சரங்க ளேபோல் துணைவிழி பரப்பி நின்றான். - 39



    559 - கண்டனர் முனிவர் அம்மா கதுமெனக் காம வேட்கை
    கொண்டனர் விரத நோன்மை குலைந்தனர் மகத்தின் செய்கை
    விண்டனர் மதனீர் பாய மெலிந்தனர் வெதும்பி வேழம்
    உண்டிடு கனியாம் என்ன உணர்வுபோய் உருகா நின்றார். - 40



    560 - ஆலமார் கண்டத் தெந்தை அருளினால் மாயோன் கொண்ட
    கோலமார் வடிவ மெல்லாங் குறிப்புடன் நோக்கி நோக்கிச்
    சீலமாம் அனைத்தும் வீட்டிச் செழுஞ்சுடர் மலர்ச்சி கண்ட
    ஓலமார் விட்டி லென்ன ஒல்லென வந்து சூழ்ந்தார். - 41



    561 - பார்கொலோ விசும்பு கொல்லோ பங்கயன் பதியோ காமன்
    ஊர்கொலோ முகுந்தன் வைகும் உலகமோ உறையுள் அன்றேல்
    நீர்கொலோ அமரர்க் காக நிருதரைத் தொலைத்தீர் உன்மை
    ஆர்கொலோ உணரு கிற்பார் அடியருக் கருளு மென்றார். - 42



    562 - என்றிவை பலவும் பன்னி இடருழந் தெரியிற் பட்ட
    மென்றளிர் அலங்க லென்ன வெதும்பியே விரகத் தீயால்
    பொன்றினர் போன்று நின்றார் பொருவரு முனிவர் பொன்னார்
    கொன்றையஞ் சடையோன் செய்த செயலினைக் கூறல் உற்றேன். - 43



    563 - கண்ணனை விடுத்தத் தானோர் கலனொடு சூலம் ஏந்தி
    எண்ணரும் முனிவர் வைகும் இருக்கையின் மறுகு சென்று
    பண்ணிசை மறைகள் பாடி ஐயமேற் படர்வார் போன்றான்
    உண்ணிகழ் உணர்வாய் என்றும் உயிரினுக் குயிராய் நின்றான்.
    (37. நராரி - நரசிங்கம். உரிவை - தோல்.
    நக்கன் - நிருவாணி; சிவன். முராரி - திருமால்.
    38. மால் பூட்டி - மோகத்தை உண்டாக்கி.
    39. அளவைஇல் அநங்கர் - அளவற்ற மன்மதர்கள்.
    40. விண்டனர் - விடுத்தனர். மதநீர் - காமநீர். வேழம் உண்டிடு கனி -
    வேழம் என்னும் நோய் பிடித்த விளாங்கனி;
    வேழம் என்னும் நோய்பிடித்த விளாங்கனி உள்ளீடின்றி இருக்கும்;
    இதனைத்தான் 'யானையுண்ட விளாம்பழம்' என்பது.
    41. ஓலம் - இரதல். விட்டில் - விட்டிற் பறவை; இ·து உருவைக் கண்டு
    அழியும் தன்மையது.
    43. பன்னி - சொல்லி. 44. கலன் - பிட்சாபாத்திரம். மறுகு - வீதி.
    பண்ணிசை மறைகள் - பண்ணோசையோடு உள்ளாளக்கீதம்.) - 44



    564 - பாட்டியல் இசையை அங்கண் முனிவர்தம் பன்னி மார்கள்
    கேட்டலும் எவர்கொல் அம்மா கிடைத்தனர் அவரைக் காண்பான்
    வேட்டன விழிகள் இன்னே விரைவினில் சேறும் என்னா
    ஈட்டமொ டெழுந்து வீதி எய்தியங் கிறைவற் கண்டார். - 45



    565 - கண்ணுறு மாதர் யாருங் காமன்ஐங் கணையின் மூழகி
    உண்ணிகழ் உணர்வு மாழ்க உயிர்பதை பதைத்துச் சோர
    அண்ணல்தன் காத லென்னும் ஆழ்திரைப் பட்டார் அன்னார்
    பண்ணிய செய்கை தன்னில் சிறிதியான் பகர்தல் உற்றேன். - 46



    566 - வேறு
    காய மேல்அணி கண்டிலம் இத்தவர்
    தூய பாடலைத் துண்ணெனக் கேட்டலும்
    மேய காமத்தின் 1வீழ்ந்தனம் ஆகையால்
    மாய மேஇவ் வடிவம்என் பார்சிலர்.
    (பா-ம் 1 - வீழ்ந்தன வாகையால்.) - 47



    567 - ஐயர் செய்கை அறிந்தனம் இவ்விடைப்
    பைய வந்து பலிதனைக் கேட்பது
    மெய்ய தன்றிது மெல்லிய லார் தமை
    மையல் செய்திட வந்ததென் பார்சிலர். - 48



    568 - நன்று நன்றிந்த நற்றவர்க் காந்துகில்
    ஒன்று நல்கி உணவளித் கோவிலா
    மன்ற லின்புற மங்கையர் ஏவரும்
    இன்று கொல்என் றிரங்குகின் றார்சிலர். - 49



    569 - மாறி லாஇவ் வனத்திடை வந்தனன்
    வேறொரு ரூரிடை மேவிலன் போலுமால்
    தேறில் யாமுனஞ் செய்திடு செய்தவப்
    பேறி தாமெனப் பேசுகின் றார்சிலர். - 50



    570 - ஈண்டு வந்த இருந்தவன் யாரையும்
    வேண்ட லன்இது மெய்மை அவன்பதம்
    பூண்டு காதலிற் போற்றுநர் போலமெய்
    தீண்டு தும்மெனச் செப்புகின் றார்சிலர். - 51



    571 - பூணி லங்கிய பொற்றொடி சங்கினம்
    மாணு றுந்துகில் மற்றிவை சோர்தலுங்
    காணு கின்றனர் கைநெரித் தஞ்சியே
    நாணி வீதி நடுவிருந் தார்சிலா¢. - 52



    572 - ஏமம் பாயமெய் எங்கணுங் காமவேள்
    தூமம் பாயவை சூழ்ந்துயிர் வாட்டிட
    வாமம் பாய்புனல் போல்மயிர்க் கால்தொறுங்
    காமம் பாயக்க லுகின் றார்சிலர்.
    (47. காமமேல் - உடலின்மேல்.
    49. துகில் - ஆடை. ஏவரும் - எவரும்.
    51. பதம் - பாதம். மெய் - உடல். 53. ஏமம் - கலக்கம்.
    தூம் அம்பு - விடும் அம்புகன்.
    வாமம் - மலை. புனல் - பால்நீர்.) - 53



    573 - பாசம் நீங்கிப் பரபதம் ஈதென
    ஆசை யோடுகண் டன்புசெய் வாரென
    வாசம் நீங்கி வளையுகுத் தையர்தங்
    கோசம் நோக்கினர் கும்பிடு வா£சிலர். - 54



    574 - இளையி னோடுறும் எந்தைதன் வேட்கையால்
    களையி னோடு கதுமெனச் சென்றுபால்
    அளையி னோடுறும் ஓதனம் அங்கைவீழ்
    வளையி னோடு வழங்குகின் றார்சிலர். - 55



    575 - பாவை மார்முன் பலிக்குறுந் தன்மையால்
    நீவி இன்றிந் நெற்றியங் கண்ணுதல்
    மேவும் நந்துகில் வீழ்கினும் வீழுக
    ஏவ மோஎமக் கென்றுரைப் பார்சிலர். - 56



    576 - போய நாணம் புகுந்தது மால்உளந்
    தீயு மால்நிறை சிந்திய தாருயிர்
    வீயும் மெய்யும் விளிந்திடும் எம்முயிர்
    ஈயும் எங்களுக் கென்றுரைப் பார்சிலர். - 57



    577 - தண்டு லங்கொல் தவத்தர் இரப்பெனக்
    கொண்டு சென்று குறுகினர் காமமாம்
    மண்டு தீச்சுட வண்பொடி ஆதலும்
    அண்டர் நாயகன் போலணிந் தார்சிலர். - 58



    578 - வடிவி னால்எமை மாலுறுத் தாளுமென்
    றடியில் வீழினும் ஆரருள் செய்கிலர்
    கடிது போவது போலுங் கருத்திவர்க்
    கிடுகி லீர்ஐயம் என்றுரைப் பார்சிலர். - 59



    579 - ஆர மற்றனர் ஆரமும் வீழமெய்
    ஈர மற்றனர் ஈரம் அதன்படை
    தீர மற்றனர் தீரவு மேகலா
    பாரம் அற்றனர் பாரமற் றார்சிலர். - 60



    580 - சூலம் உண்டு சுடர்விழி மேல்நிமிர்
    பாலம் உண்டு படர்சடை யுண்டுசெங்
    கோலமுண்டு குறைமதி உண்டிவர்
    ஆல முண்டவர் ஆகுமென் பார்சிலர். - 61



    581 - எந்தை யார்தம் இருங்குறி யின்கணே
    சிந்து கின்ற திவலையொன் றல்லவோ
    உந்தி மேல்வந் துலகனைத் துந்தரும்
    அந்த நான்முகன் ஆனதென் பார்சிலர்.
    (54. வாசம் நீங்கி - ஆடை இழந்து. வளை - வளையல்.
    கோசம் - ஆண்குறி.
    55. இளை - இளமை. அளை - தயிர். ஓதனம் - சோறு.
    56. நீவி - ஆடை. ஏவமோ - குற்றமோ.
    58. தண்டுலம் - அரிசி.
    59. கடிது விரைந்து ஐயம் இடுகிலீர் - பிச்சையிடாதிர்கள்.
    62. இரும்குறி - பெருமை பொருந்திய ஆண்குறி. திவலை - துளி.) - 62



    582 - சங்கும் ஆழியுந் தாங்குதல் இன்றியே
    பொங்கு காமரம் பொன்னந் துகிலொரீஇத்
    துங்க மாதவர் துண்ணென மால்கொள
    அங்கண் மேவும் அரியையொத் தார்சிலர். - 63



    583 - கட்டு செஞ்சடைக் கண்ணியின் உள்ளகப்
    பட்ட மான்எனப் பார்த்தகண் வாங்கலர்
    சட்டு வந்தனில் தாங்கிய ஓதனம்
    இட்டு வௌ¢ளிடை ஏமரு வார்சிலர். - 64



    584 - கிளியின் மேற்செலுங் கேழ்கிளர் ஓதிமம்
    களிம யக்குறு காளகண் டத்திறை
    வௌ¤யின் மேனியும் மெய்ப்படு கோலமுந்
    தௌ¤கி லாது தெருமரு வார்சிலர். - 65



    585 - அளியின் அட்ட அடிசில்கொண் டாயிடைக்
    களிம மயக்கங் கருத்துற ஏகியே
    ஔ¤யி னுக்கோ ளியாகி உள்ளாருரு
    வௌ¤யி னுக்கு விரைந்தளிப் பார்சிலர். - 66



    586 - அண்ணல் மேனிகண் டார்வமுற் றாடைபோய்ப்
    பெண்ணின் நீர்மைப் பெருங்குறி மூடியும்
    கண்ணை மூடியும் வைக்கடங் காமையால்
    விண்ணை மூடினர் போல்வௌ¢ கினார்சிலர். - 67



    587 - விருந்த ராயிவண் மேவினிர் விண்ணவர்
    மருந்து போல்வதொர் வண்பதம் உண்டவை
    அருந்தி யேநல் லருள்புரிந் தோரிறை
    இருந்து போமென் றிசைத்திடு வார்சிலர். - 68



    588 - கையி லேந்து கலனொடு சூலமும்
    வையும் நம்மனை வந்திடும் பாலொடு
    நெய்யும் உண்டியும் நிற்றலும் உண்டியாம்
    உய்ய நீரிங் குறையுமென் பார்சிலர். - 69



    589 - பார்க்குமா தர்க்கும் பல்குழு ஆடவர்
    ஆர்க்கும் மையல் அளிக்கும் வடிவுளீர்
    சீர்க்கும் ஓடொன்று செங்கைகொண் டெங்கணும்
    ஏற்கு மோவிதென் என்றுரைப் பார்சிலர். - 70



    590 - இன்றுமைக் கண்டி யாங்களும் ஆடைபோய்
    ஒன்று காதலுற் றோய்ந்தனம் இங்கிது
    நன்று கூடுதிர் நங்களை நீரென
    நின்று கூறி நெடிதுயிர்த் தார்சிலர்.
    (63. சங்கு - பாஞ்ச சன்னியம்; வளையல். ஆழி - சக்கரம்; மோதிரம்.
    பொன்னம் துகில் - பீதாம்பரம்;
    அழகிய ஆடை. 64. செஞ்சடைக் கண்ணி - செஞ்சடையாகிய வலை.
    சட்டுவம் - அகப்பை.
    65. கிளியின் மேற்செலும் கேழ்கிளர்ஓ திமற் - திலோத்தமையாகிய கிளியின்மேல்
    ஆசைகொண்டு தொடர்ந்து சென்ற அழகு பொருந்திய பிரமதேவனாகிய அன்னம்.
    67. பெண்ணின் நீர்மைப் பெருங்குறி - பெண்தன்மைக்குரிய பெண்குறி.
    68. மருந்து - தேவாமிர்தம். பதம் - சோறு. 69. கலன் - பிரம கபாலம்.) - 71



    591 - நந்தும் இவ்வனம் நண்ணிய மாதவர்
    இந்த வேலையில் ஏகலர் யாவதுஞ்
    சிந்தை கொள்ளலிர் சேக்கையுண் டோரிறை
    வந்து போமென வாய்மலர்ந் தார்சிலர். - 72



    592 - எம்மை ஆரிட மாதரென் றெண்ணியோ
    வெம்மை பேசினும் மேவுகி லீர்பவம்
    உம்மை மேவுங் கொலோஒழிந் தார்கள்போல்
    அம்ம வந்தெமை ஆளுமென் பார்சிலர். - 73



    593 - ஆடை தாரும் அதன்றெனில் கொண்டதோர்
    வேடை தீரும் விளம்பு கிலீரெனில்
    கூட வாருங் குறிப்புமக் கென்னெனப்
    பாடு சோ¢ந்து பகர்ந்திடு வார்சிலர். - 74



    594 - ஒல்லு கின்ற துமக்கிவ் வடிவினால்
    செல்லு கின்ற தெரிவையர் யாரையுங்
    கொல்லு கின்றது வோபலி கொள்வதோ
    சொல்லு மென்று தொடர்ந்திடு வார்சிலர். - 75



    595 - போற்றி இங்கெமைப் புல்லும்என் றாலுமால்
    ஆற்றி இன்பத் தணைகிலிர் யாவருஞ்
    சாற்று கின்றனர் சங்கரர் என்றுமை
    ஏற்று தோவதற் கென்றுரைப் பார்சிலர். - 76



    596 - அணங்கின் நல்லவர் அண்ணல்தன் கோசமேல்
    நுணங்கு மாலொடு நோக்கி அதற்குமுன்
    வணங்கு மாறென மற்றவர் நாணுபு
    கணங்க ளோடு கவிழ்ந்துசென் றார்சிலர். - 77



    597 - வேறு
    இன்னவர் பலருஞ் சூழா ஈண்டுபு கலையுஞ் சங்குந்
    துன்னிய கலனும் நாணுந் துறப்பருங் கற்புஞ் சிந்தி
    மன்னுயிர் ஒன்றுந் தாங்கி மால்கொடு தொடர எங்கோன்
    பொன்னடிக் கமலஞ் சேப்பப் புனிதமா மறுகிற் போனான். - 78



    598 - சில்லிடை வீணை நாதஞ் செய்திடும் அ·தே அன்றிச்
    சில்லிடை மறைகள் பாடுஞ் சில்லிடைச் சிவநூல் ஓதுஞ்
    சில்லிடைத் தன்மெய் காட்டுஞ் சில்லிடை ஐயங் கேட்குஞ்
    சில்லிடை அன்பர் போல்தன் சீர்த்தியைப் புகழ்ந்து செல்லும்.
    (72. இந்த வேலையில் - இப்பொழுது. ஏகலர் - வாரார். சேக்கை - படுக்கை.
    74. வேடை - விரகதாபம். குறிப்பு - கருத்து.
    76. சங்கரன் - இன்பத்தைச் செய்பவன்.
    79. சிவநூல் - சிவாகமம்.) - 79



    599 - தேமலர்க் கமலை அன்ன தெரிவையர் தொழுங்கால் ஈசன்
    மாமலர்த் தாள்மேல் இட்ட மலர்களும் அன்னார் சிந்துந்
    தூமலர்த் தொடையுஞ் சங்குந் துலங்குபொற் கலனுங் காமன்
    பூமலா¢த் தொடையும் ஈண்டப் பொலிந்ததப் புனித வீதி. - 80



    600 - ஊனுலாம் உயிர்கட் கெல்லாம் உணர்வுடன் உயிராய் நின்றோன்
    வானுலாம் பலிக்கு வந்த வடிவினை நினைக்கின் மாயோன்
    தானுமா லாகி இன்னுந் தளர்வுறும் என்றால் அம்மா
    ஏனையோர் செய்கை தன்னை இனைத்தென இயம்ப லாமோ. - 81



    601 - செந்திரு வனைய மேனிச் சீறடிக் கருங்கட் செவ்வாய்ப்
    பைந்தொடி மகளிர் கற்பாம் பரவைகள் மதிக்கும் எண்ணில்
    மந்தரம் போன்றான் எங்கோன் மற்றவர்க் கெல்லாம் வெவ்வே
    றிந்திர ஞால மென்று எல்லையில் உருக்கொண் டெய்தி. - 82



    602 - நீண்டஅந் நிகமம் புக்க நிமலன்மேல் ஆர்வம் வைத்துக்
    காண்டகு மாதர் யாருங் கருவுறு நிலையராகி
    மாண்டகு வயாவும் மற்றோர் வருத்தமும் இன்றி யாங்கே
    ஆண்டகை மகார்க ளாக வாறெண்ணா யிரரைப் பெற்றார். - 83



    603 - பந்தைபால் விழைவு செய்தாங் கிமைப்பினின் மடவார் ஈன்ற
    மைந்தர்கள் யாரும் ஐயன் மலரடி முன்னர்த் தாழ்ந்து
    புந்திகொள் அன்பின் நின்று போற்றிட அனையன் நீவிர்
    நந்தமை உன்னி ஈண்டு நற்றவத் திருத்திர் என்றான். - 84



    604 - நெட்டிருஞ் சடில மீது நிலவினை முடித்த அண்ணல்
    கட்டுரை செய்தல் கேளாக் கைதொழூஉ விடைபெற் றேகி
    உட்டௌ¤ வெய்தி நோற்றாங் கொருசிறை இருந்தார் நாற்பான்
    எட்டுள பத்து நூற்றின் எண்டொகை முனிவர் யாரும். - 85



    605 - சேயென வந்தோர் நோற்பச் சென்றுழித் தெரிவை மாராம்
    மாயிரும் பரவை நீத்தம் மால்கொடு தொடர்ந்து செல்லப்
    போயினன் என்ப மன்னோ புரியிகந் தரிமுன் ஈந்த
    ஆயிரங் கமலங் கொண்டோர் ஆழியை அளிக்க வல்லோன். - 86



    606 - போதலும் அதனை நோக்கிப் பொற்றொடி யாகி நின்ற
    சீதரன் அமலன் தன்பாற் சேறலுந் தொடர்ந்து பின்னா¢
    மாதவர் யாரும் போந்தார் மற்றதன் இயல்பு நோக்கி
    ஏதமில் கங்கை பாலாம் யமுனையைக் கடுத்த தன்றே. - 87



    607 - மெல்லியல் வடிவ மாகி மேயினோன் தன்பால் வீழ்ந்து
    செல்லுறு முனிவர் ஆற்றத் தீவினை புரிந்த நீரால்
    அல்லுறழ் மிடற்றுப் புத்தேள் அவர்க்கெலாந் தனதாய் உள்ள
    தொல்லுரு மறைத்து வேறோர் வடிவொடு தோன்றி நின்றான்.
    (82. கற்பாம் பரவைகள் - கற்பெனும் கடல்களை. மதிக்கும் - கடைகின்ற.
    83. நிகமம் - வீதி. கரு - கருப்பம். வயா - கருப்பநோய்.
    ஆண்டகை மகார்கள் - ஆண்மக்கள்.
    86. ஓர் ஆழி - ஒப்பற்ற சுதரிசனம் என்னும் சக்கரப்படை.
    87. சீதரன் - திருமால்.
    கங்கை - இது தௌ¤ந்த நீர். யமுனை - இது கலங்கிய நீர்.
    கங்கை மாயோன் உள்ளத்திற்கும்; யமுனை தாருக முனிவர் உள்ளத்திற்கும் உவமைகளாகும்.) - 88



    608 - மடந்தை யாய்வந்த மாலோன் மணிமிடற் றிறைவன் தன்பால்
    அடைந்திட முனிவர் தத்தம் அரிவையா¢ தம்மை நோக்கித்
    தொடர்ந்தனர் இவரும் நம்போல் தோற்றனர் கலையும் நாணுங்
    கடந்தனர் இவனைக் கண்டு காதலித் தார்கொல் என்றார். - 89



    609 - மோனமா நெறியின் நோற்கும் முனிவரர் முகுந்தன் தன்பால்
    ஆனமால் சிறிது நீங்கி அருங்குலப் பன்னி மார்கள்
    ஈனமா நிலையை நோக்கி இன்னலுற் றிரங்கி ஏங்கி
    மானமேல் கொண்டு வீடா மன்னுயி ரோடு நின்றார். - 90



    610 - பொன்னுலாம் அல்கு லாள்இப் பொற்றொடி ஒருத்தி எம்பால்
    மன்னிய தவத்தைச் சிந்தி மால்செய்தாள் ஒருவன் வந்து
    பன்னிமார் கற்பை வீட்டிப் படுத்தினன்¢ மோகம் அந்தோ
    என்னமா யங்கொ லீதென் றெண்ணினர் யாரும் ஈண்டி. - 91



    611 - எண்ணிய முனிவர் தேறி இயம்புவார் கயிலை வைகுங்
    கண்ணுத லாகும் இன்னோர் கற்பினை உடைத்தான் யாமுன்
    பண்ணிய தவத்தை வீட்டப் பைந்தொடி யாகி வந்தோன்
    மண்ணுல கனைத்தும் உண்ட மாயவன் போலும் அன்றே. - 92



    612 - நந்தவந் தன்னை வீட்ட நாரணன் தானே நம்பால்
    வந்தனன் அன்றால் ஈசன் பணியினால் மாயை செய்தான்
    இந்திரை கேள்வன் செய்த தென்கொலோ எமது நோன்பு
    சிந்தினும் நன்றால் இன்னுந் தீர்வுநேர்ந் தியற்று கின்றோம். - 93



    613 - அங்கையிற் கபால்ஒன் றேந்தி ஐயம்ஏற் றிடுவான் போலச்
    சங்கரன் வந்து மற்றித் தாருகா வனத்தின் மேவு
    மங்கையர் கற்புச் சிந்தும் வசையுரைக் கொழிவு முண்டோ
    செங்கதிர் மதியஞ் செல்லுந் திசையெலாம் பரவும் அன்றே. - 94



    614 - தானொரு வேடங் கொண்டுந் தண்டுள வலங்கற் சென்னி
    வானவன் தன்னை விட்டு மற்றிவை அனைத்துஞ் செய்தோன்
    கானுறு கடுக்கை வேய்ந்த கண்ணு தலேகொல் என்றே
    மானவெங் கனலுஞ் சீற்ற வன்னியுங் கிளர நின்றார். - 95



    615 - நின்றிடு முனிவர் யாரும் நெருப்பெழ விழித்துச் செம்பொற்
    குன்றுறழ் முலையி னார்தங் குழுவினைக் கூவி யார்பின்
    சென்றிடு கின்றீர் கற்பின் செய்கைய திகந்தீர் இங்ஙன்
    பொன்றுதல் அழகி தன்றேல் போமின்நும் புரியின் என்றார். - 96



    616 - இத்திற மாதர் கேளா ஈங்கிவர் தம்மைக் கண்டோர்
    முத்தராய் உறுவ தன்றி முடிவரோ முனிவர் தாமும்
    பித்தர்கொல் என்றே அன்னான் பிறங்குரு வினையுட் கொண்டு
    நித்தன தருளால் மீண்டு நீணகர் இருக்கை புக்கார்.
    (90. மோனமா நெறி - மௌன வழி. மானம் - அபிமானம். வீடா - இறவா.
    93. இத்திரை கேள்வன் - இலக்குமி நாயகன்; திருமால். 94. கபால் - கபாலம்.) - 97



    617 - நீணகர் புகுந்த பின்னர் நேழிழை மகடூஉ வாகித்
    தாணுவின் அயலின் நின்ற தண்டுள வலங்கற் புத்தேள்
    ஆணுவின் உருவு கொண்டான் அருளினால் அனைய தன்மை
    காணிய விரிஞ்ச னாதிக் கடவுளர் யாரும் வந்தார். - 98



    618 - கடவுளர் யாரும் வந்த காலையில் அங்கண் நின்ற
    முடிவறு முதல்வன் தன்னை முனிவொடு நோக்கி ஈண்டுக்
    கொடியதோர் வேள்வி ஆற்றிக் கொல்லுதும் இவனை என்னா
    மடமைகொள் முனிவர் சூழ்ந்து மற்றொர்தீ மகத்தைச் செய்தார். - 99



    619 - எள்ளுதற் குரிய வேள்வி எரியதன் இடையே யாரும்
    உள்ளுதற் கரிய தோற்றத் துருமிடிக் குரல பேழ்வாய்த்
    தள்ளுதற் கரிய சீற்றத் தழல்விழித் தறுகட் செங்கால்
    வள்ளுகிர்ப் புலியொன் றம்மா வல்லையின் எழுந்த தன்றே. - 100



    620 - எழுதரு புலியை நோக்கி ஈசனை முடித்தி என்றே
    தொழுதனர் விடுப்ப ஆங்கே துண்ணென வருத லோடும்
    அழல்விழிப் பரமன் நேர்போய் அங்கையால் உரித்து மற்றவ்
    வுழுவையந் தோலை முன்னம் உடுத்தனன் தானையொப்ப. - 101



    621 - இங்கிது போய பின்றை இறுதிசெய் கணிச்சி ஒன்று
    செங்கன லிடையில் தோன்றித் தீயவர் விடுப்ப ஏகிச்
    சங்கரன் தனது முன்னஞ் சார்தலும் அதனைப் பற்றி
    அங்கையில் ஏந்தி நீநம் அடுபடை யாதி என்றான். - 102



    622 - பின்னுற ஒருமான் அங்கட் பிறந்தது முனிவர் எல்லாம்
    அன்னதை அரன்பால் உய்ப்ப அந்தரத் தெழுந்து பாய்ந்து
    தன்னெடுங் குரலால் வல்லே சராசரம் வீட்டிச் செல்ல
    முன்னவன் உயிர்கள் அற்றால் முடிவுறா தருட்கண் வைத்தான். - 103



    623 - மற்றதன் பின்றை எந்தை மான்பிணை அதனை நோக்கித்
    தெற்றென விளித்து நத்தஞ் செவியினுக் கணித்தாய் மேவி
    நிற்றலுங் கூவு கென்றே நீடருள் செய்து வாமப்
    பொற்றடங் ககையிற் பற்றிப் பொருக்கென ஏந்தி நின்றான். - 104



    624 - ஏந்திய பின்னர் வேள்வி எரியழற் கிடையே எண்ணில்
    பாந்தளங் கெழுந்து தீயோர் பணியினாற் சீற்றத் தோடும்
    போந்தன அவற்றை மாயோன் புள்ளினுக் கஞ்சித் தன்பாற்
    சேர்ந்திடு பணிக ளோடுஞ் செவ்விதிற் புனைந்தான் எங்கோன்.
    (98. மகடூஉ - பெண். தாணு - அசைவில்லாதவன்; சிவன்.
    99. தீமகம் - அபிசார வோமம்.
    100. வேழ்வாய் - பிளந்த வாய். 101. முடித்தி - சொல்வாயாக.
    உழுவை - புலி. தானை - ஆடை.
    102. கணிச்சி - மழு. தீயவர் - தாருகவன முனிவர்.
    104. வாமம் - இடதுபக்கம்.
    105. பாந்தள் - பாம்பு. பணிகளோடு - பாம்புகளோடு.) - 105



    625 - பணியெலாம் பணிய தாகிப் பரனிடைத் திகழப் பின்னர்
    அணிகெழு கனலின் நாப்பண் அசனிகள் எழுந்தா லென்னக்
    கணிதமில் பூத வௌ¢ளங் கதுமென எழலும் நீவிர்
    மணிகிளர் மிடற்றோன் வன்மை மாற்றுதிர் என்றே உய்த்தார். - 106



    626 - ஆரிடர் ஏவல் போற்றி அண்டமுந் துளங்க ஆர்த்துச்
    சாரதர் வருத லோடுஞ் சங்கரன் அவரை நோக்கி
    நீரெமை அகன்றி டாது நிற்றலுந் தானை யாகிச்
    சேருதி ரென்றான் உற்றோர் தீவினை தீர்க்க வல்லான். - 107



    627 - ஆற்றல் சேர்பூதர் யாரும் ஆதியீ துரைப்ப அன்னான்
    போற்றியே தானை யாகிப் புடையுற நிற்ற லோடுஞ்
    சீற்றமா முனிவர் வேள்வித் தீயில்வெண் டலைதான் ஒன்று
    தோற்றியே உலகம் யாவுந் தொலையநக் கெழுந்த தன்றே. - 108



    628 - நக்கெழு சிரத்தை அன்னோர் நாதன்மேல் விடுத்த லோடும்
    அக்கணம் அணுக வற்றால் அகிலம திறவா வண்ணம்
    முக்கணன் அருள்செய் தந்த முணடமுண் டகக்கை பற்றிச்
    செக்கரஞ சடைமேற் கொண்டுன் செயலினைப் புரிதி யென்றான். - 109



    629 - அறுகுறை முடிமேற் கொண்ட அமலனை நோக்கி நோக்கி
    இறுகிய முனிவர் தத்தம் வாய்மை மந்திரங் களேவி
    இறுதி செய்திடுதி ரென்ன இனையவை துடியொன் றாகிச்
    செறிதரு புவனம் யாவுஞ் செவிடுற ஒலித்த தன்றே. - 110



    630 - பொருவருந் துடியின் ஓதை பொம்மெனக் கேட்ட லோடுந்
    தரணியின் வானி னுள்ள சராசரம் யாவும் ஈசன்
    அருளினால் வீடிற் றில்லை அசனியின் ஆர்ப்புக் கேட்ட
    உரகர் தங்குலங்க ளென்ன ஒய்யென மயங்கிற் றன்றே. - 111



    631 - அத்துடி ஆர்த்துச் செவ்வே அமலன்முன் அணுக மற்றைக்
    கைத்தலம் அதனிற் பற்றிக் கறங்குதி கன்னத் தென்று
    வித்தக மரபில் யாரும் வியப்புற ஏந்தி நின்றான்
    இத்திறம் யாரே செய்வார் என்றனர் முனிவ ரெல்லாம். - 112/tr>


    632 - இனையது கண்டு பின்னும் இறுதிசெய் இறைவற் கின்றால்
    அனைய தென்றறிதல் தேற்றார் அடுசினங் கடவத் தொல்லூழ்
    வினையது விளைவாற் பின்னும் வேள்வியை இயற்றல் உற்றா£
    முனிவரர் கனற்க ணேயோர் முயலகன் எழுந்த தன்றே. - 113



    633 - முயலகன் தன்னை நோக்கி முகமனுஞ் சொற்றுத் தங்கள்
    செயலகன் றிருந்த வேள்வித் தீயையும் விளித்து நந்தம்
    இயலகன் றிடவே செய்த ஈசனை முடித்தி ரென்றே
    மயலகன் றிலாதார் உய்ப்ப வல்விரைந் தணைந்த அம்மா.
    (106. அசனி - இனி. 107. ஆரிடர் - முனிவர்.
    109. நக்கு எழு சிரம் - சிரித்தலையுடைய வெண்டலை.
    110. இனையவை - இங்கு, மந்திரங்கள். துடி - உடுக்கை.
    111. ஓதை - ஓசை. பொம்மென - விரைந்து.
    ளுரகர் - தாகங்கள். 113. முயலகன்- இவன் ஒருபூதம்.
    114. முகமன் - உபசார வார்த்தை. சொற்று - உரைத்து.) - 114



    634 - வன்னியந் தேவும் உட்க வந்திடு கனலை யார்க்கும்
    முன்னவன் ஒருகை ஏந்தி முயலகன் தன்னை மெல்லத்
    தன்னடி அதனால் வீழத் தள்ளிஅக் கமலத் தாளை
    வென்னிடை அருளால் ஊன்றி விண்ணவர் போற்ற நின்றான். - 115



    635 - நிற்றலும் அதனைத் தீயோர் நெருப்பெழ விழியா இன்னும்
    உற்றனன் பரமன் அந்தோ உஞற்றி யாமுய்த்த வெல்லாம்
    இற்றன கொல்லோ என்றே இரங்கியே எண்ணில் சாபஞ்
    சொற்றனர் உலக மெல்லாந் தொலைப்பவன் தொலைய வென்றே. - 116



    636 - சங்கையில் முனிவர் யாருஞ் சாற்றிய சாபம் யாவும்
    எங்கடம் பெருமான் முன்னும் எய்திய தில்லை அன்னோர்
    எங்கவன் தன்பால் உய்க்கும் அளவையில் இறுதி நாளிற்
    பொங்கெரி அதன்மேற் செல்லும் பூளைபோல் மாய்ந்த அன்றே. - 117



    637 - சாபமும் பயனின் றாகத் தவத்தர்கள் யாருங் கொண்ட
    கோபமும் நீங்கி ஆற்றல் குறைந்தொரு செயலும் இன்றிச்
    சோபமும் நாணுங் கொண்டு துளங்கியே தொலைவி லாத
    பாபமும் பழியும் பூண்டு படிக்கொரு பொறையாய் நின்றார். - 118



    638 - ஏற்றமில் முனிவர் தங்கள் ஏழைமை தனையென் னென்று
    சாற்றுதும் இறுதி இல்லாத் தாணுவை முடிப்பான் வேள்வி
    ஆற்றினர் பலவும் உய்த்தார் அறைந்தனர் சாபம் அற்றால்
    மாற்றி அற்றோ தங்கள் வன்மையும் இழந்தோர் மாதோ. - 119



    639 - கடுக்கையும் நதியும் பாம்புங் கலைமதிக் கொழுந்துஞ் சென்னி
    முடித்தவன் பதத்தில் ஊன்று முயலகன் மெல்ல மெல்ல
    எடுத்தெடுத் தசைத்த லோடும் ஏதுவங் கதனை நோக்கி
    நடித்தனன் என்றும் நீங்கா நடம்புரி கின்ற தேபோல். - 120



    640 - ஆண்டவ ணிமையா முக்கண் ஆதிநா யகன்அஞ் ஞான்று
    தாண்டவம் புரித லோடுஞ் சகமெலாந் துளங்கிற் றங்கண்
    ஈண்டிய வுயிர்கள் அச்சுற் றிரங்கிய நடுக்கம் எய்தி
    வீண்டனர் வேள்வி செய்து வினையினை ஈட்டும் வெய்யோர். - 121



    641 - நஞ்சணி கண்டத் தெந்தை நடநவில் செய்கை தன்னைக்
    கஞ்சனும் ஆழி யானுங் கண்டுகண் களித்துப் போற்றி
    செஞ்சகம் மகிழ்ந்து பாங்கர் நின்றனர் மகவான தன்னோ
    டெஞ்சிய அமரர் யாரும் இறைஞ்சுவார் போல வீழ்ந்தார். - 122



    642 - அருளொடு நிருத்தஞ் செய்யும் அண்ணலிப் புவனம் யாவும்
    வெருவுறு செயலும் வீழும் விண்ணவர் அயர்வு நோக்கித்
    திருநட மொழிந்து நிற்பத் தேவருந் தேவர் கோனும்
    பருவுடன் எழுந்து நின்று கைதொழூஉப் பாங்கர் உற்றார்.
    (115. வன்னியந்தேவு - அக்கினிதேவன். 116. உஞற்றி - உண்டாக்கி.
    117. இறுதி நாளில் பொங்குஎரி - ஊழித்தீ பூளை - பூளைப்பஞ்சு.
    119. ஏழைமை - அறியாமை.
    120. கடுக்கை - கொன்றை. 121. விண்டனர் - விலகி நின்றனர்.) - 123



    643 - மாதொர்பா கத்தோன் தன்னை மதித்திடா முனிவர்க் கெல்லாம்
    போதமே யருள லோடும் பொருக்கென எழுந்து பொல்லா
    ஏதமே இயற்று கின்ற எம்பெரும் பிழைகள் யாவும்
    நாதநீ பொறுத்தி என்று நடவில் கழல்முன் வீழ்ந்தார். - 124



    644 - பொறுத்தி எம்பிழையை என்றே போற்றிசெய் முனிவர் தங்கள்
    திறத்தினை நோக்கி நந்தஞ் செந்நெறி யொழுதித் தீய
    மறத்தினை அகற்றி மேலை மாதவம் புரிதி ரென்று
    நிறுத்தினன் அடையா தார்க்கும் நீடருள் புரியும் நித்தன். - 125



    645 - முனிவரை நிறுவி அங்கண் முக்கணன் மீண்டு வௌ¢ளிப்
    பனிவரை ஏகி மாலும் பங்கயத் தவனும் வானோர்
    அனைவருந் தத்தம் பாலில் படைந்திட அருளி அம்பொற்
    புனையிழை உமையி னோடும் பொருந்திவீற் றிருந்தான் அன்றே. - 126



    646 - உரித்திடும் உழுவை வன்தோல் உரிமுத லுள்ள எல்லாந்
    தரித்ததும் எங்கள் நாதன் தாருகா வனத்தில் அன்று
    நிருத்தம தியற்றி நின்ற நீர்மையும் பிறவும் எல்லாம்
    விரித்திவண் உரைத்தாங் கேட்டி மேலதும் இயம்பு கின்றாம். - 127



    647 - வேறு
    துங்க மால்கரி யாக்கையின் உலகெலாந் தொலைக்கும்
    வெங்க யாசுரன் என்பவன் மேருவின் மிசைபோய்ப்
    பங்க யாசனற் போற்றி செய்தருந் தவம்பயில
    அங்கண் நாடியே தோன்றினன் உலகெலாம் அளித்தோன். - 128



    648 - வேண்டு கின்றதென் மொழிகென நான்முகன் விளம்ப
    ஆண்டு நோற்றிடுங் கயாசுரன் என்றனக் கடிகேள்
    மாண்டி டாதபே ராயுளும் ஆற்றலும் வயமும்
    ஈண்டு நல்குதி என்றலும் நகைத்திவை இசைப்பான். - 129



    649 - இந்த வண்ணநீ வேண்டிய தளித்தனம் இகலில்
    அந்தி வண்ணன்நேர் சென்றிடல் சேறியேல் அந்நாட்
    சிந்தும் இவ்வரங் கடைப்பிடி ஈதெனச் செப்பி
    உந்தி வந்தவன் போயினன் தனதுபே ருலகில். - 130



    650 - அன்ன காலையில் கயாசுரன் என்பவன் அயன்சொல்
    உன்னி ஈசன்மேற் போகலாம் ஒழிந்தவர் தம்பால்
    துன்னி வெஞ்சமர் ஆற்றி எவ்வு லகமுந் தொலைத்தே
    இன்னலே புரிந்திருத் தும்என் றுன்னியே எழுந்தான்.
    (124. போதம் - நல்லுணர்ச்சி. பொல்லா ஏதம் - பெரும்பிழை.
    128. துங்கமால் - பெரிய மதமயக்கம் பொருந்திய.
    129. அடிகளே - சுவாமியே.
    130. அந்தி வண்ணன் - சிவபெருமான். சேறியேல் - செல்லுவாயாயின்.) - 131



    651 - எழுதல் கொண்டிடும் அவுணர்கோன் அமரர்கள் யாருங்
    குழுமியே அமர்வான் பதந்தொ றுந்தொறுங் குறுகி
    வழுவியே அவர்முரிந் திடப்பொ ருதுமற் றவரூர்
    முழுது மட்டுமா சுவர்க்கமேல் ஏகினன் முனிவால். - 132




    652 - போகி யோட மராற்றியே அன்னவன் புறந்தந்
    தேகவே துரந்துயர்த் திடுநாள் மருப்பி யானைத்
    தோகை வானுதி பற்றியே பன்முறை சுலவி
    மாக யாசுரன் ஓச்சினன் மகபதி மயங்க. - 133



    653 - பின்னர் அன்னதோர் பொன்னகர் அழித்தனன் பெயர்ந்து
    துன்னு மெண்டிசைக் காவலர் தமையெலாந் துரந்து
    தன்னி னங்களாம் அவுணர்கள் தம்மையுஞ் சாடி
    வன்னி யஞ்சிகை அரக்கர்தங் குழுவையும் மாய்த்தான். - 134



    654 - மஞ்சு நேர்தரு கயாசுரன் புவிமிசை வைகி
    வெஞ்சி னங்கொடே மக்கள்தந் தொகையெலாம் வீட்டி
    நஞ்ச மாமெனத் திரிதலும் நாடி நற்றவர்கள்
    அஞ்சி யோடியே அரனமர் காசியை யடைந்தார். - 135



    655 - அருந்த வத்தர்கள் அடைதலுங் கயாசுரன் அவரைத்
    துரந்து காசியிற் சென்றிட அனையவர் துளங்கித்
    திருந்தும் அந்நகர் வாணர்தங் கிளையொடுஞ் செறிந்து
    விரைந்து போய்மணி கன்னிகை புகுந்தனர் வெருவி. - 136



    656 - இனிது வித்திய தம்பயன் ஈவதே என்னத்
    தனது மந்திரம் முடிபவர் செவியிடைச் சாற்றிப்
    புனித மாயதன் னுருத்திர வடிவருள் புரியும்
    அனக நாயகற் பணிந்துநின் றின்னவா றறைவார். - 137



    657 - வெய்ய தந்தியாய் வந்தொரு தானவன் விரைவில்
    வைய கத்தையட் டெம்மையுங் கொல்லிய வருவான்
    ஐய நின்னதாள் அரணமென் றடைந்தனம் அடியேம்
    உய்ய வேயருள் புரியெனப் போற்றியே உறலும். - 138



    658 - அகில நாயகன் மந்திரத் தப்பரி சனர்கள்
    தொகையி னோடுபோய் அரணமென் றடைதரு தொடர்பை
    முகிலை நேருருக் கயாசுரன் காணுறா முனியா
    இகலி யேமணி கன்னிகை வாயில்வந் திறுத்தான். - 139



    659 - வாயில் வந்திறுத் துருமெனத் தெழித்தலும் மதித்துக்
    கோயி லெய்திய சனமெலாம் உளங்குலை குலையா
    ஆய கண்ணுதல் நிமலனைத் தழீஇ மயக்கடையத்
    தீயன் அன்னது நாடியும் அடும்வகை செறுத்தான்.
    (133. போகி - இந்திரன். நால் மருப்பு யானை - ஐராவதம்.
    135. மஞ்சு - கரிய மேகம்.
    136. மணி கன்னிகை - காசியிலுள்ள கங்கைக் கரையின் ஓர் கட்டம்.
    137. மந்திரம் - தாரக மந்திரம்; பிரணவம். முடிபவர் - இற்போர்.
    138. தந்தியாய் - யானையாக. 139. அகிலநாயகன் - விசுவநாதர். மந்திரம் - ஆலயம்.
    140. உரும் - இடி. தெழித்தல் - கர்ச்சித்தல். தழீஇ - தழுவிக்கொண்டு.) - 140



    660 - செறுத்து மற்றவன் செல்லுழித் தேவர்கள் உய்யக்
    கறுத்த கந்தரத் தண்ணலாங் கத்திறங் கண்டு
    குறித்தெ லாமடும் உக்கிர வடிவினைக் கொண்டு
    நிறுத்தும் அண்டமேல் உச்சியின் முடிதொட நிமிர்ந்தான். - 141



    661 - விண்ணு லாவிய அமரரும் முனிவரும் விழித்துக்
    கண்ணின் நாடரி தெனவிழி பொத்தினர் கவல
    அண்ணல் ஆயிர கோடிஆ தவர்திரண் டதுபோல்
    னுண்ணி லாதபே ரொளியொடு தோன்றினன் எங்கோன். - 142



    662 - உக்கி ரப்பெரு வடிவுகொண் டெம்பிரான் ஒருகால்
    நக்கு மெல்லென உரப்பலும் நடுங்கின அகிலம்
    அக்கொ டுந்தானி ஒழிந்தில துகம்பல அயனும்
    மிக்க தேவரும் அவ்வொலி கேட்டலும் வெருண்டார். - 143



    663 - சொற்ற இத்திறம் உக்கிர வடிவொடுந் தோன்றிக்
    கொற்ற மால்கரி அவுணன்முன் எம்பிரான் குறுக
    மற்றி வன்சிவ னாமெனத் தேறியும் மலைவான்
    உற்று நின்றனன் அயர்த்தனன் மலரயன் உரையே. - 144



    664 - மதித்து வேழமாந் தானவன் எதிர்தலும் வடவை
    உதித்த வன்னியும் அச்சுற எரிவிழித் தொருதன்
    கதித்த தாள்கொடு தள்ளவே கயாசுரன் கவிழ்ந்து
    பதைத்து வீழ்தலும் திதித்தனன் சிரத்தையோர் பதத்தால். - 145



    665 - ஒருப தத்தினைக் கவானுறுத் திருகரத் துகிரால்
    வெரிநி டைப்பிளந் தீரிரு தாள்புடை மேவக்
    குருதி கக்கியே ஒலிட அவுணர்தங் குலத்துக்
    கரியு ரித்தனன் கண்டுநின் றம்மையும் கலங்க. - 146



    666 - கார்த்த சிந்துரத் தவுணர்கோன் விளிந்திடக் கரத்தால்
    ஈ£¢த்த தோலினை ஈர்த்தலும் உலகுயிர் யாவுந்
    தீர்த்தன் மேனிகொள் பேரொளி நோக்கியே தியங்கிப்
    பார்த்த கண்ணெலாங் கதிரிழந் தலமரப் பதைத்த. - 147



    667 - ஆளு நாயகன் அ·தறிந் துயிர்த்தொகை அனைத்தும்
    வாளி லாதுகண் ணயர்வது மாற்றுதல் மதித்து
    நீளி ருங்கரி உரித்திடும் அதளினை நிமலன்
    தோளின் மேற்கொடு போர்த்தனன் அருள்புரி தொடர்பால்.
    (143. உகம் பல - பலயுகம். 145. படவை - வடவாமுகாக்கினி.
    146. இச்செய்யுள் கஜசம்மார மூர்த்தியின் கோலத்தைச் சித்தரித்துக் காட்டுவது.
    147. சிந்துரத்தவுணர்கோன் - கயாசுரன். தீர்த்தன் - பரிசுத்தன் - சிவன்.
    148. அதள் - தோல்.) - 148



    668 - ஐயன் மிக்கதன் கதிரினைக் குருதிநீர் அறாத
    மையல் யானைவன் தோலைமேற கொண்டனன் மறைத்தான்
    செய்ய கோளொடு கரியகோள் இருவருஞ் செறிந்து
    வெய்ய பானுவின் நடுவுறக் கவர்ந்துமே வியபோல். - 149



    669 - மிகவும் எம்பிரான் தன்சுடர் மாற்றி மெய்தளரும்
    அகில மேலவர் விழிக்கெலாந் தொல்கதிர் அருளித்
    தகவில் அச்சமும் அகற்றியே காத்தனன் தனக்கு
    நிகரும் மேலுமின் றாகியே அமர்தரு நிமலன். - 150



    670 - அந்த வேலையில் அமரர்போற் றிசைத்தனர் அதுகேட்
    டெந்தை மாமணி கன்னிகை ஆலயத் தேக
    முந்து தந்திமால் அவுணற்கு வெருவி மொய்ம்பிழந்து
    சிந்தை மான்றுவீழ் பரிசனர் யாவருந் தௌ¤ந்தார். - 151



    671 - செறிவு போகிய சனத்தினோர் எழுந்தருட் டிறத்தால்
    கறைகொள் காலினான் குருதிஎன் பொடுதசை காணா
    இறைவ னேஅவன் தன்னைஅட் டானென எண்ணி
    அறையும் நேமிபோல் ஆடினர் பாடினர் ஆர்த்தார். - 152



    672 - காசி வாணரும் முனிவரும் பணிந்தனர் கழல்கள்
    பூசை யாற்றவும் புரிவித்து வழுத்தியே போனார்
    ஈசன் வேழவன் தோல்புனை பேரருள் இதுகாண்
    பேசு வாம்இனி அயன்சிரம் ஏந்திய பெற்றி. - 153



    673 - வேறு
    முன்னமோர் வைகல் மாலும் முண்டகத் தயனு மாகப்
    பொன்னின்மால் வரையி னுச்சிப் பொலங்குவ டொன்றின் உம்பர்
    மன்னுழி முனிவர் தேவர் வரம்பிலோர் வந்தான் னாரைச்
    சென்னியால் வணக்கஞ் செய்து செங்கரங் குவித்துச் சொல்வார். - 154



    674 - மூவரின் முதலா னோரும் முதலிடை முடிவும் இல்லாத்
    தேவரும் எவையும் நல்குஞ் செல்வரும் பரமே லாகி
    ஓவரும் புவனத் துள்ள உயிர்க்குயி ராய்நின் றோரும்
    ஏவரெங் களுக்கு வல்லே இருவரும் இசைத்தி ரென்றார். - 155



    675 - என்றுரைத் திடலும் வேதா எம்பிரான் பிணித்த மாயை
    தன்றலைப் படலால் யான்அத் தலைமையாம் பிரமம் ஆகும்
    நன்றிதைத் தௌ¤திர் என்ன நாரணன் தானும் அற்றாய்
    உன்றனைத் தந்த யானே உயர்தரும் பிரமம் என்றான். - 156



    676 - இருவரும் இனைய பேசி எண்ணிலா வைகல் யாரும்
    வெருவரு நிலைய தாக வெய்துயிர்த் தழன்று மாறாய்ப்
    பொருவரு தருக்கஞ் செய்யப் போயினர் முனிவர் தேவர்
    ஒருவரும் இன்றி நம்மால் உற்றதிப் பெற்றி என்றே.
    (149. செய்யகோள் - செம்பாம்பு; ராகு. கரியகோள் - கரும்பாம்பு; கேது.
    பானு - சூரியன்.
    151. பரிசனர் - தொண்டர் முதலியோர். 153. காசிவாணர் - காசிவாசிகள்.
    வழுத்தி - துதித்து.
    பெற்றி - தன்மை. 155. இருவரும் - பிரம விஷ்ணுக்களாகிய நீங்கள்.
    156. பிரமம் - மேலான கடவுள்.
    157. தருக்கம் - சண்டை.) - 157



    677 - போதலும் அனையர் பின்னும் பூசல்செய் திட்ட காலை
    வேதமுங் குடிலை தானும் வேறுவே றுருக்கொண் டெய்தி
    வாதம தியற்றல் என்று மன்னுயிர்க் குயிராய் ஆர்க்குந்
    தாதையாஞ் சிவனே வாய்மைத் தற்பரன் என்ற அன்றே. - 158



    678 - பண்டவர் உணர்ந்த வேதப் பனுவலுங் குடிலை வாக்குங்
    கொண்டிலர் விலக்கிப் பின்னுங் கொடியவெம் பூசல் செய்யக்
    கண்டுமற் றதனை அன்னோர் கடுமுரண் தொலைக்கு மாறு
    கொண்டனன் கருணை யார்க்குங் குறித்தருள் கூரும் பெம்மான். - 159



    679 - அடிமுடி யிலாத வள்ளல் அமலமாம் ஔ¤யாய் விண்ணின்
    ரூடுவுற வந்து தோன்ற நாரணன் தானும் வேதக்
    கடவுளுஞ் சிவனாம் என்று கருதிலர் யாதோ இந்தச்
    சுடரென மருண்டார் மாயச் சூழச்சியின் நீங்க லாதார். - 160



    680 - இயலது தெரிந்து சோதி இடையதாய் எம்மை யாளக்
    கயிலையில் உமையா ளோடு கலந்துவீற் றிருக்குங் கோலச்
    செயல்கொடு பரமன் நண்ணச் சிவனெனச் சிந்தை தேற்றிப்
    புயலுறழ் மேனிப் புத்தேள் பொருக்கென எழுந்து தாழந்தான். - 161



    681 - மாயையோர் சிறிதுந் தீரா மலரயன் நமது தந்தை
    ஆயவன் போந்தான் என்னா அச்சுத மூர்த்தி யேபோல்
    நேயமோ டெழுந்து தாழான் நெடியதன் உச்சிச் சென்னித்
    தீயதோர் வாயால் மேலாஞ் சிவனையும் இகழ்த லுற்றான். - 162



    682 - முண்டகம் இருந்த ஐந்து முகத்தவன் முதல்வன் தோற்றங்
    கண்டளன் இகழ வந்தக் கருணையங் கடலுஞ் சீற்றங்
    கொண்டிலன் சிறிது மற்றே கொண்டனன் என்னின் எல்லா
    அண்டமும் உயிரும் பின்னும் அழிவுறா திருக்கு மோதான். - 163



    683 - எகினம துயர்த்த அண்ணல் இரும்பவந் தொலைப்ப ஏனைப்
    பகவர்தம் அகந்தை மாற்றப் பண்ணவர் மதர்ப்புச் சிந்த
    மிகபெருங் கருணை தன்னால் வேதநா யகனுள் ளத்து
    மகிழ்வொடு புரிந்தான் என்ப வயிரவக் கடவுள் தன்னை. - 164



    684 - நீலுறு சுடரின் மெய்யும் ஞெகிழிகள் அகற்றுந் தாளும்
    ஆலம துயிர்க்குஞ் செங்கேழ் அரவவெற் றரையுஞ் சென்னி
    மாலைகள் அநந்த கோடி வயின்வயின் பெயரும் மார்புஞ்
    சூலமும் பரசும் நாணும் துடியும்ஏந் தியபொற் றொளும். - 165



    685 - முக்கணுந் திங்க ளேபோல் முளைத்தவா ளெயிறும் வன்னிச்
    செக்கரஞ் சடையின் சீருஞ் செயிர்கெழு நகையு மாக
    உக்கிர வடிவு கொண்டாங் குதித்திடு வடுகன் தன்னை
    மைக்கிளா¢ கண்டத் தெந்தை நோக்கியே வகுத்துச் சொல்வான்.
    (158. பூசன் - சண்டை. குடிலை - பிரணவம்.
    161. புயல் உறழ் மேனிப் புத்தேள் - திருமால்.
    163. ஐந்து முகத்தவன் - ஐந்து முகங்களையுடைய பிரமதேவன்.
    164. எகினம் - அன்னப்பறவை. வேதநாயகன் - சிவபெருமான்.
    165. ஞெகிழிகள் - சிலம்புகள். செங்கேழ் - செந்நிறம். வெற்றரை - நிருவாணம்.
    166. வடுகன் - வயிரவக் கடவுள். ) - 166



    686 - திகழ்ந்தநஞ் சிறுவ னாகுஞ் செங்கம லத்தோன் சென்னி
    இகழ்ந்தது நம்மை உச்சி இருந்ததே அதனை வல்லை
    அகழ்ந்தனை கரத்தி லேந்தி அவனுயிர் நல்கித் தம்மைப்
    புகழ்ந்திடு முனிவர் தேவர் புரந்தொறும் போதி அன்றே. - 167



    687 - போந்தனை அனையர் தங்கள் புலவுடற் சோரி தானே
    வாய்ந்ததோர் ஐய மாக வாங்குதி வாங்கும் வேலை
    வீந்தவர் தமக்கு மீட்டும் வியனுயிர் உதவி அன்னோர்
    ஆய்ந்திடும் அகந்தை மாற்றி அண்டமேல் அடைதி அம்மா. - 168



    688 - முன்புடைத் தாகும் அண்ட முகடுதோய் பதத்தின் மன்னி
    மன்பதைக் குலங்கள் யாவும் வானவர் தொகையும் யாண்டுந்
    துன்பறக் காத்தி யென்று தூய நல்லருளை நல்கி
    அன்புடைக் கடலாம் எங்கோன் அமலமாஞ் சோதி புக்கான். - 169



    689 - ஆதியங் கடவுள் அங்கண் அடைதலும் அமல மாகுஞ்
    சோதியும் அனையர் காணாத் தோற்றம தாக மாயோன்
    ஈதெலாந் தெரிந்து நிற்றல் இயற்கையன் றென்னா முக்கண்
    நாதனை இறைஞ்சி வல்லை நடந்துதுன் பதியிற் புக்கான். - 170



    690 - அளந்து மண்கொண்ட மாயன் அகனகர் அடைத லோடுங்
    கிளர்ந்தெழு காரி வேதாக் கேழ்கிளர் உச்சிச் சென்னி
    களைந்துதன் நகத்தால் ஏந்தக் காலுறு குருதி நீத்தம்
    வளைந்தது புவியைத் துஞ்சி மலரவன் தானும் வீழ்ந்தான். - 171



    691 - சோரிநீர் நீத்த மாகித் துண்ணென உலகங் கொண்டு
    மேருமால் வரையைச் சூழ வெய்யதன் நுதற்கண் தீயால்
    சேரவே வறப்பித் தந்தச் செங்கம லத்தி னானுக்
    காருயிர் நல்க லோடும் அவனுணர்ந் தெழுந்தான் அன்றே. - 172



    692 - வேறு
    துயிலு ணர்ந்தவ ராமெனத் தொல்லையில்
    பயிலு நல்லுணர் வெய்தலும் பங்கயன்
    வயிர வன்தன் மலரடி மீமிசை
    இயலும் அன்பொ டிறைஞ்சியுரை செய்வான். - 173



    693 - நெற்றி யங்கண் நிமலற் கியான்செயுங்
    குற்ற முண்டு குணிப்பில அன்னதால்
    பெற்று வேன்இப் பெரும்பழி ஈங்கினிச்
    செற்றம் ஏதுந் திருவுளங் கொள்ளலை. - 174



    694 - இன்மை யாக இமைப்பின் உலகடும்
    வன்மை கொண்ட வடுகநின் ஆரருள்
    நன்மையால் தொல்லை நல்லுணர் வெய்தினன்
    புன்மை யாவும் பொறுத்திடல் வேண்டுமால்.
    (168. புலவு - மாமிசம். சோரி - இரத்தம்.
    169. மன்பதைக் குலங்கள் - மக்கட் கூட்டம்.
    171. காரி - வயிரவன். உச்சிச் சென்னி - நடுத்தலை.) - 175



    695 - தீய தான சிறியவிச் சென்னியுந்
    தூய தாகத் தொழும்பினன் கண்டுழி
    மாயை தீர மலர்க்கையிற் கோடிநீ
    மேய சூல வியன்படை என்னவே. - 176



    696 - என்ன இத்தகை பன்னி இறைஞ்சலுஞ்
    சென்னி நான்குடைத் தேவனை நோக்கியே
    அன்ன தாக என்றையன் அருளியே
    பொன்னின் மால்வரை நீங்கினன் போயினான். - 177



    697 - கால வேகன் கனன்முகன் சோமகன்
    ஆல காலன் அதிபலன் ஆதியாச்
    சால நீடிய சாரதர் தானையை
    நீல மேனி நிமலன் உதவினான். - 178



    698 - எண்ணி லாஅக் கணங்களொ டெம்பிரான்
    நண்ணி ஒல்லை நவையுறு மாதவர்
    மண்ணின் மேய வனந்தொறும் வானவர்
    விண்ணின் எல்லை தொறும்விரைந் தேகினான். - 179



    699 - மெய்யின் ஊறும் வியன்குரு திப்புனல்
    ஐய மாக்கொண் டனையர்தம் ஆவிகள்
    உய்ய வேபின் னுதவி உளமெலாந்
    துய்ய வாக்கினன் தொல்லருள் ஆழியான். - 180



    700 - வடுக அண்ணல் அவ்வானவர் ஊரெலாங்
    கடிதின் நீங்கிக் கருவத்தை நீங்குறா
    நெடிய மாலுறை நீள்புரம் போயினான்
    முடுகி யேகினர் முன்கண நாதரே. - 181



    701 - அந்த மில்கணம் ஆனவர் யாவரும்
    முந்தி ஏக முதற்பெரு வாயிலோன்
    தந்தி ரத்தலை வன்தடுத் தானரோ
    நந்தும் ஆழியும் நாரணன் போலுளான். - 182



    702 - கால வேகனை ஆதிக் கணத்தவர்
    ஆல மென்ன அவனொடு போர்செய
    மேலை யோன்அங்கு மேவி அவனுடல்
    சூல மேற்கொந்தித் துண்ணென ஏகினான். - 183



    703 - வேறு
    நிலமகள் ஒருபுடை நிறங்கொள் பங்கய
    மலர்மகள் ஒருபுடை மருவப் ப·றலை
    குலவிய பணியின்மேற் கொண்டல் மேனியான்
    தலைமையொ டுறைதரு தானம் நண்ணினான்.
    (176. கோடி - கொள்வாயாக. 178. நீலமேனிநிமலன் - வயிரவக் கடவுள்.
    181. புரம் - நகர்; வைகுண்டம்.
    182. தந்திரத் தலைவன் - விடுவசேனன்.) - 184



    704 - நிணங்கிளர் முத்தலை நெடிய வேல்இறை
    கணங்களின் நிரையொடு கடிது செல்லமால்
    அணங்கின ரோடெழா ஐயன் தாள்மிசை
    வணங்கிநின் றெந்தைநீ வந்ததென் னென்றான். - 185



    705 - என்றலுங் கண்ணுதல் இறைவன் யாமிவண்
    சென்றது பலிக்குநின் றிருந்து சென்னியில்
    ஒன்றிய குருதியே உதவு வாயென
    நன்றென நாரணன் நவின்று போற்றியே. - 186



    706 - தன்னுதல் அதனிடைத் தனாது செங்கையின்
    நன்னகத் தாலொரு நாடி வாங்கியே
    அன்னதொர் பொழுதினில் அரியுய்த் தானரோ
    துன்னிய குருதிநீர் சூலி ஏற்பவே. - 187



    707 - வீண்டிடு சோரியின் வௌ¢ளம் வெம்பணி
    பூண்டதொர் கண்ணுதல் பொலங்கைச் சென்னிமேல்
    ஆண்டொரு நூறுநூ றவதி உய்த்தலும்
    மாண்டது வேறொரு மயக்கம் வந்ததே. - 188



    708 - பாதியும் நிறைந்ததும் இல்லை பாணியின்
    மீதுறு பலிக்கலன் மிக்க வன்மைபோய்ச்
    சீதரன் சோர்தலுந் திருவும் ஞாலமும்
    காதலன் நிலைமையைக் கண்டி ரங்கினார். - 189



    709 - செஞ்சரண் அடைந்தயர் தெரிவை மார்தமை
    அஞ்சலென் றருளியெம் மண்ணல் அச்சுதன்
    நெஞ்சுறு மயலினை நீக்கி யாங்கவன்
    உஞ்செழு மாறுசெய் துறையுள் நீங்கினான். - 190



    710 - நீங்கினன் பின்வரும் நெடிய மாயனை
    ஈங்கினி திருத்திஎன் றியம்ப அன்னவன்
    ஓங்குநின் சூலமேல் உற்று ளான்தனைப்
    பாங்குற வருள்கெனப் பகர்ந்து வேண்டவே. - 191



    711 - கைத்தலை அயன்தலைக் கபால்கொண் டுற்றவன்
    முத்தலை வேலினும் முடிந்த சேனையின்
    மெய்த்தலை வனதனை விடுத்துத் தொல்லுயிர்
    அத்தலை நல்கியே அருள்செய் தானரோ.
    (186. கண்ணுதல் இறைவன் - வயிரவக் கடவுள். இவண் - இங்கு. பலி - பிச்சை.
    187. நுதல் - நெற்றி. சூலி - வயிரவன். ஒரு நாடி - ஒரு நரம்பு.
    188. அவதி - அளவு; காலம்.
    189. திருவும் ஞாலமும் - திருமகளும் பூமகளும்.
    191. சூலமேல் உற்றுளான் - விடுவசேனன்.
    192. கபால் - கபாலம்.) - 192



    712 - மாலுல கொருவியே வடுகன் அன்னதோர்
    கோலமொ டேகணங் குழுமிச் சூழ்தர
    மேலுள புவனமேல் மேவி வைகலும்
    பாலனஞ் செய்தனன் பலஅண் டங்களும். - 193



    713 - அடுவதொ ரிறுதியில் கமலன் ஆணையால்
    கடவுளர் சென்னியுங் கமலன் ஆதியோர்
    முடிகளும் அட்டுயிர் முற்று மாற்றிநுண்
    பொடிபட இயற்றுமால் புவனம் யாவையும். - 194



    714 - பொறியுறும் உயிர்களும் புவனம் யாவையும்
    இறுதியாய் அழிவுறும் ஈமத் தெல்லையின்
    மறையெனு ஞாளியை உயர்த்து மற்றவன்
    உறுவதோர் மகிழ்ச்சியால் உலவும் என்பவே. - 195



    715 - வேறு
    கண்ட கங்கொள் கபால்கொடு காசினி
    விண்ட கந்தொறும் வெம்பலிக் குற்றதும்
    முண்ட கன்முத லோர்தமை எம்பிரான்
    தண்ட கஞ்செய் தலையளி யாகுமால். - 196



    716 - ஆற்றின் மல்கும் அவிர்சடை அண்ணல்பால்
    தோற்று கின்றதொர் தூயவன் சோரிநீர்
    ஏற்ற தன்மை இயம்பினம் ஈங்கினி
    வேற்றுருக் கொண்ட தன்மை விளம்புவாம். - 197



    717 - வேறு
    முந்தொரு ஞான்று மூவுலகும் போற்றிடும்
    இந்திரன் இமையவர் இனத்தொ டேகியே
    அந்தமில் கயிலையில் அரனைப் போற்றுவான்
    வந்தனன் அகந்தையும் மனத்தில் தாங்கியே. - 198



    718 - பொன்கெழு கடிமதில் பொன்னங் கோயில்முன்
    மின்கெழு வச்சிர வேந்தன் சேர்தலுங்
    கொன்கெழு பாரிடக் கோலந் தாங்கியே
    முன்கடை நின்றனன் முடிவின் முன்னையோன். - 199



    719 - நின்றிடும் ஒருவனை நெடிது நோக்கியே
    இன்றுனைக் கண்டனன் யாரை ஐயநீ
    மன்றவும் விருந்தினை வள்ள லைத்தொழச்
    சென்றனன் வேலையென் செப்பு கென்னவே. - 200



    720 - மற்றது காலையின் மகேசன் யாவதுஞ்
    சொற்றில னாகியே சூர்த்த நோக்குடன்
    உற்றிட மேல்வரும் ஊற்றம் உன்னலன்
    செற்றம தாயினன் தேவர் செம்மலே.
    (193. பாலனம் - பாதுகாத்தல். 195. ஞாளி - நாய்.
    199. வச்சிரவேந்தன் - இந்திரன்.
    கொன் - அச்சம். பாரிடம் - பூதம். முன்கடை - தலைவாசல்.
    200. விருந்தினை - புதியை.
    201. சூர்த்த - அச்சம் தரத்தக்க.) - 201



    721 - அண்டரும் அகந்தையன் ஆற்ற வுந்திறல்
    கொண்டனன் என்றுதன் குலிச மாப்படை
    கண்டகன் எறிதலுங் கடவுள் மேற்படா
    நுண்டுக ளாகியே நொய்தின் மாய்ந்ததே. - 202



    722 - மருத்துவன் வச்சிரம் மாய்ந்து போதலும்
    புரத்தினை யட்டருள் புனிதன் அவ்வழிக்
    கிருத்திம வுருவினை நீங்கிக் கேழ்கிளர்
    உருத்திர வடிவினை ஒல்லை தாங்கினார். - 203



    723 - உயர்ப்புறு சடிலநின் றூறு தண்புனல்
    அயர்ப்புறு மகபதி அகந்தை கண்டட
    மயிர்ப்புறம் எங்கணும் வந்து தோன்றலின்
    வியர்பபுவந் தடைந்தன மேனி முற்றுமே. - 204



    724 - எள்ளுதல் செய்திடும் இவன்தன் ஆருயிர்
    கொள்ளுதும் எனச்சினங் கொண்ட தீயொடும்
    உள்ளுறு காலெழீஇ ஒருங்கு சென்றெனப்
    பொள்ளென உயிர்ப்பழல் புகையொ டுற்றதே. - 205



    725 - குறுகிநின் றாற்றலால் குலிச மாப்படை
    எறிதரு கொடியனை எய்த வேளெனச்
    செறுகனல் விழியெனச் செப்பச் சேறல்போல்
    நெறிதரு புருவமும் நெற்றி சேர்ந்தவே. - 206



    726 - பற்றலர் புரங்களோ உலகின் பன்மையோ
    முற்றுயிர் ஈட்டமோ முடிக்கப் பேதையைச்
    செற்றிடல் வசையவன் செயலைக் காண்டுமென்
    றுற்றனன் முறுவலும் உதித்த தொல்லையில். - 207



    727 - துடித்தன துவரிதழ் உரப்பித் தூயவாய்
    இடித்தன சேந்தன இரண்டு கண்களும்
    விடத்தினை நுகர்ந்தவன் வெகுளித் தீயினுக்
    கடுத்திடு துணைவர்தம் அமைதி போலவே. - 208



    728 - அக்கணம் இவ்வகை யார்க்கும் ஆதியாம்
    முக்கணன் நான்முகன் முதல தேவரும்
    மிக்குள உயிர்களும் வெருவ வெய்யதோர்
    உக்கிர வடிவுகொண்டு ருத்து நின்றனன்.
    (202. கண்டகன் - இரக்கமில்லாத இந்திர. 203. மருத்துவன் -
    இந்திரன். கிருத்திமம் - பூதம்.
    208. துவர் இதழ் - செவ்விதழ்.) - 209



    729 - வேறு
    நிற்கின்ற எம்பெருமான் பெருஞ்சீற்றந்
          தனைநோக்கி நெஞ்சமாகுங்,
    கற்குன்றம் நடுநடுங்கப் பதைபதையா
         அஞ்சியவன் கழலின் வீழ்ந்தே,
    எற்குன்றன் மாயமெலாந் தெரிந்திடுமோ
         மாலயனும் இன்னுந்தேறார்,
    பொற்குன்றச் சிலையானே வினையேன்செய்
         பிழையதனைப் பொறுத்தி என்றான். - 210



    730 - போற்றிப்பன் முறைதாழும் புரந்தரனை
          அஞ்சலென்று புரிந்து நோக்கி,
    மேற்றிக்கில் வீழ்கின்ற செங்கதிரோ
          இதுவென்ன வேலை மேற்றன்,
    சீற்றத்தீ யினைவீசி ஆங்கவற்கு
          விடைகொடுத்துச் செல்கென் றேவி,
    ஏற்றிற்செய் அரியணைமேல் உறையுள்புகுந்
          துமையொடும்வீற் றிருந்தான் எங்கோன். - 211



    731 - வேறு
    கூற்று வன்தனிக் கூற்றன் மந்திரம்
    வீற்றி ருந்திடும் வேலை வாய்தனில்
    ஆற்றல் சேர்புனற் கரசன் பால்விடு
    சீற்ற மானதோர் சிறுவன் ஆனதே. - 212



    732 - ஆன பாலனை அம்பு ராசிதன்
    கானு லாந்திரைக் கரங்களால் தழீஇத்
    தான வேசன்என் தனயன் ஆயினான்
    நான லாதியார் நற்றவஞ் செய்தார். - 213



    733 - ஊழி பேரினும் உலகம் பேரினும்
    வாழி வாழியென் மைந்த நீயெனாக்
    கேழில் ஆசிகள் கிளத்திப் போற்றினான்
    ஆழி மால்கடற் கரசன் என்பவே. - 214



    734 - நசைகு லாவிய நரலை காத்திட
    வசைவி லான்சிறி தழுத வேலையில்
    வசையி லாதுயர் வானும் மண்ணுமெண்
    டிசையும் யாவையுஞ் செவிடு பட்டவே. - 215



    734 - நூன்மு கத்தினோர் நுனித்துக் காணுறு
    நான்னு கத்தினோன் நாடி இவ்வொலி
    வான்மு கத்திடை வருமி தேதெனா
    மீன்மு கத்துலாம் வேலை மேவினான். - 216



    736 - வேலை சேரஅவ் வேலை வேலையுஞ்
    சால வன்பினால் தவிசொன் றிட்டுநீ
    ஏல மேவுகென் றிருத்தி யான்பெறும்
    பாலன் ஈங்கிவன் பார்த்தி யாலெனா. - 217



    737 - கையில் நீட்டலுங் கடிது வாங்கியே
    ஐயன் தன்மடி அதனில் சேர்த்திடத்
    துய்ய புல்லணந் தொடர்ந்து பற்றினான்
    மையல் மைந்தனுந் தனது வன்மையால்.
    (212. மந்திரம் - ஆலயம்.
    213. அம்புராசி - கடல். தானவேசன் - தானவர் தலைவன்.
    215. நசை - விருப்பம். நரலை - கடல். 218. புல்லணம் - தாடி.
    மையல் மைந்தன் - பித்தன் (சிவன்) மகன் இவன் கோபாக்கினியால் உதித்தவன்.) - 218



    738 - நார்த்தொ டுத்தெனும் நான்கு தாடியும்
    ஈத்துத் தூங்கலும் இணையில் வேதனும்
    ஆர்த்தி எய்தினான் அவன்கண் ஏயவன்
    சீர்த்தி கான்றெனச் சிந்திற் றொண்புனல். - 219



    739 - காறொ டர்ந்திழி கலங்கு கட்புனல்
    ஆறு போலிய அகலம் தன்வழச்
    சேறல் மேயது செறிவுற் றீண்டியே
    வேறொர் வேலைபோல் வேலை புக்கதே. - 220



    740 - முக்கண் நாயகன் முனிவு தன்னிடைப்
    புக்க காலையிற் புனல்வ றந்திடு
    மைக்க ருங்கடல் வறுமை நீங்கிற்றால்
    மிக்க நான்முகன் விழியின் நீரினால். - 221



    741 - பதுமன் அவ்வழிப் படர்ம யிர்த்தொகை
    மதலை கையினும் மரபின் நீக்கியே
    கதுமெ னப்பல கரங்க ளாலெடுத்
    துததி தன்கையில் உயிர்த்து நீட்டினான். - 222



    742 - நீட்டி யோரிறை நினைந்து நீயிது
    கேட்டி யொன்றியாங் கிளத்து வோம்இவன்
    ஏட்டு லாயதேன் இதழி சென்னியிற்
    சூட்டும் எம்பிரான் முனிவில் தோன்றினான். - 223



    743 - கருதி டான்ஒரு கடவுள் தன்னையும்
    வரமும் வேண்டலன் ஏது மற்றிவன்
    ஒருவ ராலுமீ றுற்றி டானரோ
    பரமன் சீற்றமே யான பான்மையால். - 224



    744 - தேவர் தேவர்கோன் திசையினோர் வெரீஇப்
    போவ ரேயெனில் பொருகிற் பாரெவர்
    நீவி ரேனுமுன் நிற்றல் அஞ்சுவீர்
    ஏவ ரேஇவன் எதிர்நிற் பார்களே. - 225



    745 - ஆயுந் தொன்னெறி அமரர் யாவரும்
    ஈயுஞ் சாபம்வந் திவனை நேருமோ
    காயுந் திண்டிறற் கடவுட் டன்மைசேர்
    தீயுந் தீயுநின் சிறுவன் வெம்மையால். - 226



    746 - நானும் அஞ்சுவன் நளினை காவலன்
    தானும் அஞ்சுவன் தவறில் வேள்விசெய்
    கோனும் அஞ்சும்வெங் கூற்றும் அஞ்சுமவ்
    வானும் அஞ்சும்இம் மண்ணும் அஞ்சுமே.
    (219. தூங்கல் - தொங்குதல். ஆர்த்தி - துன்பம்.
    220. அகலம் - மார்பு.
    222. உததி - கடல்; வருணன். 224. மற்று - அசை.
    227. நளினை - திருமகள்.) - 227



    747 - பாச னங்களே பரவ ஞாலமேல்
    தேசில் வெய்யகோல் செலுத்தி யாங்கவர்
    ஆசி செய்யநீ டரசு செய்வனால்
    ஈசன் அன்றியார் இவனை வீட்டுவார். 228 - 228



    748 - என்னு மாத்திரத் திவன்த னக்குநீ
    நன்ன லந்திகழ் நாமம் ஒன்றினைப்
    பன்னு கென்னநீ பரித்த லால்இவன்
    தன்ன தொண்பெயர் சலந்த ரன்எனா. - 229



    749 - பேரிட் டொல்லையில் பிரமன் தானுறை
    ஊரிற் போயினான் உததி பற்பகல்
    சீரிற் போற்றலுஞ் சிறுவன் காளையாய்ப்
    பாரிற் சேர்ந்தனன் அவுணர் பாற்பட. - 230



    750 - சென்று பாரிடைத் திசைகள் யாவையும்
    வென்று வாசவன் விண்ணு ளோர்நிதிக்
    குன்று சேர்தரக் கொடுமை செய்தனன்
    துன்று கின்றதொல் லவுணர் சூழவே. - 231



    751 - பொன்னெ டுங்கிரி தனிற்புத் தேளிரு
    மன்னும் வைகலும் வான நாடெலாந்
    தன்னை நேரிலான் தான வர்க்கெலாம்
    நன்ன யப்பொடு நல்கி னானரோ. - 232



    752 - வச்சி ரப்படை மன்னன் பொன்னகர்
    நச்சும் வண்ணமோர் நகரஞ் செய்கென
    அச்ச லந்தரன் அருளத் தானவர்
    அச்சன் அவ்வழி ச¨திது நல்கினான். - 233



    753 - பாந்தள் மீமிசை பரிக்கு நேமிசா
    லாந்த ரம்மென அறைய நின்றதோர்
    ஏந்தல் மாநக ரிடையில் தானவர்
    வேந்தர் போற்றிட அரசில் மேயினான். - 234



    754 - கால நேமியாம் அவுணன் கன்னிகை
    வேலை நேர்விழி விருந்தை யென்பவள்
    கோல நாடியே குரவன் கூறிட
    ஏல வேமணந் தின்பம் எய்தினான்.
    (228. பாசனங்கள் - அசுர பரிவாரங்கள். வீட்டுவார் - கொல்லுவோர்.
    229. சலத்தரன் - கடலால் வளர்க்கப்பட்டவன். சலம் - கடல்.
    தரம் - தரித்தல்; ஆகவே கடலால் தாங்கப்பட்டவன் சலந்தரன் என்பதாம்.
    333. நச்சும் - விரும்பும். தானவர் தச்சன் - அசுர தச்சன்; கம்மியன்.
    234. நேமி - பூமி. சாலாந்தரம் - காலாந்தரபுரி; இது சலந்தராசுரன் நகரம்.
    235. விருந்தை - இவள் கற்பிலும் அழகிலும் அறிவிலும் சிறந்தவள்;
    காலநேம என்னும் அசுரன் மகள்; விருந்தையைப் பிருந்தை எனவும் கூறுவர்.) - 235



    755 - பாரில் அவ்வழிப் பன்னெ டும்பகல்
    சீரின் வைகினான் தேவர் யாவரும்
    மேரு வுற்றனர் அவரை மேவியாம்
    போர்செய் வோமெனப் புகன்று போயினான். - 236



    756 - துங்க வீரர்கள் தொழுச லந்தரன்
    அங்கண் மேவலும் அமரர் வெய்யவன்
    இங்கும் வந்தனன் என்செய் வோமெனார்
    சிங்கங் கண்டதோர் கரியின் தேம்பினார். - 237



    757 - தேம்பு கின்றவர் செய்வ தோர்சிலார்
    பாம்ப ணைத்துயில் பவனை உன்னியே
    ஓம்பு கென்றலும் உவண மீமிசை
    ஏம்ப லோடும்வந் திமைப்பில் எய்தினான். - 238



    758 - வருச லந்தரன் மாறு கொண்டெழ
    இருப தாயிரம் யாண்டு பல்படை
    உரிய மாயைகொண் டுருத்தெ ழுந்துமால்
    பொருதும் வென்றிலன் புகழ்ந்து போயினான். - 239



    759 - கொண்டல் மேனியன் கொடியன் தன்னொடு
    மண்டு போரிடை மலையும் வேலையில்
    அண்டர் வாசவன் அஞ்சி ஆலமார்
    கண்டன் மேவிய கயிலை எய்தினார். - 240



    760 - வேறு
    அற்றா கின்ற வேலையின் வேலை அருள்மைந்தன்
    பற்றார் தம்மை நாடினன் யாண்டும் பார்க்கின்றான்
    கற்றார் ஏத்துங் கண்ணுதல் மேய கயிலாயத்
    துற்றார் கொல்லென் றுன்னி வெகுண்டான் ஊர்போந்தான். - 241



    761 - தூண்டா ஒற்றால் பெற்றிடு சேனைத் தொகையோடு
    மீண்டா நிற்பான் தென்க கயிலைக்கென் றெழும்வேலை
    வேண்டாம் வேண்டாம் நித்த னுடன்வெஞ் சமர்செய்யின்
    மாண்டாய் என்றாள் இல்லென வாழும் மதிவல்லி. - 242



    762 - குலந்தனில் வந்தாள் கூறிய மாற்றங் குறிக்கொள்ளான்
    நலந்தரு கின்ற செய்வினை ஓரான் நவைபாரான்
    புலந்தரு செற்றம் மீக்கொள யாதும் பொறையின்றிச்
    சலந்த ரனாம்பே ருண்மைய தென்னச் சாதித்தான். - 243



    763 - சோனா மேகம் போற்படை மாரி சொரிகின்ற
    சேனா யூகஞ் சூழ்தர வாழித் திருமைந்தன்
    போனான் எங்கோன் தென்க யிலைக்கோர் புடையாக
    வானா டுள்ளோன் ஆங்கது காணா மறுகுற்றான்.
    (237. துங்கம் - உயர்வு. 238. உவணம் - கருடன். ஏம்பல் - ஆசை.
    241. வேலை அருள்மைந்தன் - சலந்தராசுரன்.
    243. சலந்தரனாம் பேர் உண்மை - கோபத்தைச் சுமந்தவன் சலந்தரன்
    என்பதாம். சலம் - கோபம். தரன் - சுமந்தவன்.) - 244



    764 - தாண்டும் பாய்மாத் தோகரி வீரர் தற்சூழ
    ஈண்டும் வந்தான் தீயவன் ஆவி இறும்வண்ணங்
    காண்டும் என்னா வாசவன் வானோர் கணமோடும்
    வேண்டும் வௌ¢ளிக் குன்றுறு கோயில் மேவுற்றான். - 245



    765 - வேறு
    முந்திய வாயிலின் முறைபு ரிந்திடு
    நந்தியை வணங்கியுள் நடுக்கஞ் செப்பலும்
    அந்தமில் பண்ணவன் அருளை நாடியே
    உந்திட இந்திரன் உறையுள் போயினான். - 246



    766 - குணங்களின் மேற்படு குழகன் மால்வரை
    அணங்கொடு வீற்றிருந் தருளும் எல்லைபோய்
    வணங்கினன் தொழுதனன் வலிய துன்பினால்
    உணங்குதன் மனக்குறை உரைத்தல் மேயினான். - 247



    767 - நிலந்தனை வளைந்த முந்நீரில் வந்தவன்
    சலந்தரன் எனும்பெயர்த் தறுகட் டானவன்
    மலைந்தெமை வென்றிட மாசுற் றோடினேன்
    நலந்தரு நின்றபொன் னாடு நீத்தனன். - 248



    768 - வெந்துயர் எய்தியே மேரு வின்புடை
    உய்ந்தனன் யானென ஔ¤த்து மேவினன்
    அந்தவண் ணத்தையும் அறிகுற் றாங்கவன்
    வந்தனன் அவ்வழி மாலை உன்னினேன். - 249



    769 - மாலும்வந் தணுகியே மலைந்து தோற்றிடா
    மேலுமங் கவன்தனை வியந்து போயினான்
    நீலகண் டத்தனே நினது மால்வரை
    ஏலவந் துற்றனன் இதுவுங் கேட்டனன். - 250



    770 - ஈங்கும்வந் துற்றன னியாவ துன்னியோ
    ஆங்கது தெரிகிலேன் அளியன் துன்பமுந்
    தீங்குறு சலந்தரன் திறலும் வாழ்க்கையும்
    நீங்குதல் உன்னுதி நிமலநீ என்றான். - 251



    771 - வரையெறி படையினன் மாற்றங் கேட்டுநின்
    பருவரல் ஒழிகெனப் பகர்ந்து போக்கியே
    கருணையின் நீர்மையாற் கணிச்சி வானவன்
    ஒருதனி ஆடலை உள்ளத் துன்னினான். - 252



    772 - நான்றகுண் டிகையினன் நரைகொள் யாக்கையன்
    ஊன்றிய கோலினன் ஓலைக் கையினன்
    மூன்ற னல்வளர்ப் புறுமுனி வரேயெனத்
    தோன்றினன் தனக்கொரு தோற்றம் வேறிலான். - 253



    773 - விம்மலை உற்றிடு விரதர்க் காகமுன்
    கைம்மலை உரித்தவன் கயிலை என்றிடும்
    அம்மலை ஒருபுடை அணுகுந் தானவர்
    செம்மலை எதிர்கொடு செல்லல் மேயினான். - 254



    774 - இந்திரன் இமையவர் இனத்தொ டீண்டியே
    வந்தனை செய்தனன் மறைந்து பின்வர
    அந்தணர் வடிவுகொண் டவுணர் காவலன்
    முந்துற வெய்தியே முதல்வன் கூறுவான். - 255



    775 - எங்குளை யாரைநீ எவரை நாடியே
    இங்குறு கின்றனை இயம்பு வாயென
    அங்கணன் மொழிதலும் அந்தண் வேதிய
    சங்கைய தில்வகை சாற்றக்கேள் என்றான். - 256



    776 - நிலந்தனில் உற்றுளேன் நேமி காதலன்
    சலந்தரன் என்பவன் தமியன் வானவர்
    உலைந்திட நுதல்விழி ஒருவன் தன்னுடன்
    மலைந்திட வந்தனன் வல்லையீண் டென்றான். - 257



    777 - அவ்வுரை வினவியே அண்ணல் எண்ணமுஞ்
    செவ்விது செவ்விது தீதுண் டோவெனா
    எவ்வமில் புகழ்ச்சிபோல் இகழ்ந்து காட்டிடா
    நவ்வியங் கைத்தலன் நகைத்துச் செப்புவான். - 258



    778 - கயிலையங் கிரியுறை கண்ணு தற்பிரான்
    அயலுற இருப்பன்யான் அவனொ டேயமர்
    முயலுறு கிற்றியேல் முடிதி உய்ந்திடுஞ்
    செயலினை நினைத்தியேற் செல்கமீண் டென்றான். - 259



    779 - பண்ணவன் இனையன பகர்தல் கேட்டலும்
    எண்ணமில் சலந்தரன் எரியிற் சீறியே
    கண்ணழல் கதுவுறக் காயம் வோ¢வெழத்
    துண்ணென உயிர்த்திவை சொற்றல் மேயினான்.
    (253. நான்ற - தொங்குகின்ற. ஓலை - ஓலைக்குடை.
    மூன்று அனல் - மூவகை அக்கினி.
    254. கைம்மலை - யானை. தானவர் செம்மல் - சலந்தரன்.
    257. நேமிகாதலன் - வருணன் மகன்.
    258. எவ்வம் - குற்றம். நவ்வி - மான்.
    260. பண்ணவன் - அந்தண வடிவுகொண்ட சிவன்.) - 260



    780 - சிறியவன் போலெனைச் 1சிந்தித் தீரியான்
    பெறுவதோர் சயமெலாம் பேசி யாவதென்
    இறைவரை யீண்டுநின் றெனது வன்மையை
    அறிகுதிர் அறிகுதிர் அந்தணீர் என்றான்.
    (பா-ம் 1 - சிந்திப்பீரியான்.) - 261



    781 - என்றிவை சலந்தரன் இசைப்ப யாமுமுன்
    வன்றிறல் காணிய வந்த னம்மெனாத்
    தன்திரு வடியினால் தரணி யின்மிசை
    ஒன்றொரு திகிரியை ஒல்லை கீறினான். - 262



    782 - ஆங்கது திகிரியொன் றாக அந்தணன்
    ஈங்கிது சென்னியில் ஏற்றி வன்மையால்
    தங்குதல் வல்லையோ என்று சாற்றலும்
    தீங்குறு சலந்தரன் இனைய செப்புவான். - 263



    783 - புங்கவர் யாரையும் புறங்கண் டேன்வரு
    கங்கையை அடைத்தனன் கார்கொள் வேலையில்
    அங்கியை அவித்தனன் அரியை வென்றனன்
    இங்கிது தாங்குவ தரிய தோவெனா. - 264



    784 - புரத்தழல் கொளுவியோன் பொறித்த நேமியைக்
    கரத்திடை எடுத்தனன் கனங்கொண் டெய்தலின்
    உரத்திடைப் புயத்திடை உயிர்த்துத் தாங்கியே
    சிரத்திடை வைத்தனன் தேவர் ஆர்க்கவே. - 265



    785 - செழுஞ்சுடர்ப் பா¤தியைச் சென்னி கோடலால்
    ஒழிந்திடு சலந்தரன் உச்சி யேமுதற்
    கிழிந்தது முழுதுடல் கிளர்ந்து சோரிநீர்
    இழிந்தது புவிதனில்இழுமென் ஓசையால். - 266



    786 - பரிதியங் கடவுள்அப் பதகன் தன்னுடல்
    இருபிள வாக்கியே இறைவன் தன்னிடை
    உருவுகொண் டுற்றதிவ் வுலகம் யாவையுங்
    குருதியம் பெருங்கடல் வளைந்து கொண்டதே. - 267



    787 - பாதல நிரயமாம் பாழி யூடுநீ
    போதென எருவைநீர் போந்த தாயிடை
    ஆதியங் கடவுள்அவ் வவுணன் சேனையைக்
    காதினன் விழிபொழி கனலின் தானையால். - 268



    788 - பரந்திடும் அவுணர்தம் பகுதி வீட்டியே
    கரந்ததொல் வடிவினைக் காட்டி நிற்றலும்
    புரந்தரன் முதலினோர் வணங்கிப் போற்றிஎம்
    அரந்தையை அகற்றினை ஐயநீ என்றார். - 269



    789 - முன்புறு புரந்தரன் முதலி னோர்க்கெலாம்
    இன்புறு தொல்லர சியற்ற நல்கியே
    அன்புடன் விடைகொடுத் தமல நாயகன்
    தென்பெருங் கயிலைமேற் சேர்ந்து வைகினான்.
    (262. தரணி - பூமி. திகிரி - சக்கரம். 265. பொறித்த - உண்டாக்கிய.
    நேமி - சக்கரப்படை.
    267. பரிதி அம் கடவுள் - சக்கரமாகிய தெய்வம். பதகன் - கீழ் மகன்;
    சலந்தரன். 268. பாழி - இடம். எருவை நீர் - இரத்தம்.
    காதனன் - அழித்தனன். கனலின் தானை - தீப்பொறியாகிய சேனை.) - 270



    790 - ஆவியை இழந்திடும் அவுணர் காவலன்
    தேவியை விரும்பியே திருவின் நாயகன்
    மாவிர தியரென மற்ற வன்மனைக்
    காவி னுள்இருந் தனன்கை தவத்தினான். - 271



    791 - இருந்திடும் எல்லையில் ஏமக் கற்புடை
    விருந்தைஎன் றிடும்அவள் வேந்தன் செய்கையைத்
    தெரிந்திலள் ஆற்றவுஞ் சிந்தை நொந்துமெய்
    வருந்தினள் உய்ந்திடும் வண்ணங் காண்கிலாள். - 272



    792 - பரிதலுற் றிரங்கினள் பதைத்துச் சோர்ந்தனள்
    ஒருதனித் திருக்கிலள் உரையும் ஆடலள்
    திரிதலுற் றுலவினள் சேய்வ தோர்கிலள்
    இருதலைக் கொள்ளியின் எறும்பு போன்றுவாள். - 273



    793 - கல்வரை யேந்திய காளை யைப்புணர்
    தொல்வரை ஊழினால் துன்பம் நீங்கலா
    மெல்வரை அன்னதோள் விருந்தை மேவினாள்
    இல்வரை இகந்திடா ஏமக் காவினுள். - 274



    794 - மடவரல் வருதலும் வைகுண் டந்தனில்
    கடைமுறை போற்றிடும் இருவர் காவலர்
    அடலரி ஆகியே ஆர்த்து முன்னுற
    இடியுறும் அரவுபோல் ஏங்கி ஓடினாள். - 275



    795 - மடந்தையங் கிரிதலும் மடங்க லானவர்
    தொடர்ந்தனர் பின்வரத் துளங்கிச் சோலையின்
    இடந்தனில் முனியென இருந்த வெய்யனை
    அடைந்தனள் அடைதலும் அஞ்சல்நீ என்றான். - 276



    796 - என்றருள் புரிதலும் இகல்வெஞ் சீயமாய்ப்
    பின்றொடர் காவலர் பெயர்வுற் றோடினார்
    நின்றவள் இருந்தவன் நிலைமை நோக்கியே
    நன்றிவன் இயல்பென நவில்வ தாயினாள். - 277



    797 - எந்தையெம் பெருமகேள் எனது காதலன்
    அந்தமில் ஈசன்மேல் அமருக் கேகினான்
    வந்திலன் இன்னமும் மாய்வுற் றான்கொலோ
    உய்துள னேகொலோ உரைத்திநீ என்றாள்.
    (271. திருவின்நாயகன் - திருமால். மாவிரதியர் - சிவமூர்த்தியை எண்ணித்
    தவம் இயற்றும் ஒரு தவசி.
    272. ஏமம் - இன்பவடிவு. 274. கல்வரை - கோவர்த்தனகிரி. மேல்வரை
    அன்ன - மெல்லிய மூங்கிலைப் போன்ற.
    275. கடைமுறை - வாயில். காவலர் இருவர் - துவார பாலகர். அரி - சிங்கம்.
    276. இரிதல் - ஓடுதல். மடங்கல் - சிங்கம். வெய்யனை - இங்குத் திருமாலை.
    277. சீயம் - சிங்கம். காவலர் - துவார பாலகர்கள்.
    278. எனது காதலன் - என்னுடைய கணவன்; கலந்தராசுரன். கொல் - ஐயப்பொருள்.) - 278



    798 - இரங்கினள் இவ்வகை இசைப்ப மாதவன்
    வரங்கெழு தானையின் மன்னர் மாயையால்
    குரங்கென ஈருருக் கொண்டு கொம்மென
    உரங்கிளர் சலந்தரன் உடல்கொண் டேய்தினார். - 279



    799 - இருபிள வாம்அவ னியாக்கை கொண்டுசென்
    றரிவைமுன் இட்டனர் அதனைக் காண்டலும்
    வெருவினள் பதைத்தனள் வீழ்ந்த ரற்றினாள்
    ஒருவினள் உயிரென உணர்வு நீங்கினாள். - 280



    800 - வருந்தலை வருந்தலை மங்கை நீயெனாக்
    கரந்தனை ஓச்சியே காதல் நீர்மையால்
    இருந்தவன் எழுப்பலும் எழுந்து தேறியே
    விருந்தைகை தொழுதிவை விளம்பல் மேயினாள். - 281



    801 - நின்னிகர் மாதவர் நிலத்தின் இல்லையால்
    என்னுயிர் கார்தியேல் எனது நாயகன்
    பொன்னுடை லந்தனைப் பொருந்தி அவ்வுயிர்
    தன்னையும் அமைத்தனை தருதிநீ என்றாள். - 282



    802 - ஆயது காலையில் அவுணன் யாக்கையை
    ஏயென ஒன்றுமா றியற்றி மாதவன்
    மாயம தாகியே மறைந்து மற்றவன்
    காயம திடைதனில் கலந்து வைகினான். - 283



    803 - புல்லிய குரங்கெனப் புகுந்த கள்வரும்
    ஒல்லையின் மறைந்தனர் உயர்ச லந்தரன்
    தொல்லுடல் புகுந்தரி துண்ணென் றேயெழ
    மெல்லியல் கண்டனள் வியந்து துள்ளினாள். - 284



    804 - உய்ந்தனன் கணவனென் றுளத்தில் உன்னியே
    வெந்துயர் அகன்றனள் விருந்தை என்பவள்
    வந்தனை பேலுமென் மகிண நீயெனா
    அந்தமில் உவகையால் அவனைப் புல்லினாள். - 285



    805 - புல்லிய விருந்தையைப் புணர்ந்து மாயவன்
    எல்லியும் பகலுமோர் இறையும் நீங்கலான்
    அல்லியந் தேனுகர் அளியைப் போல்அவண்
    மெல்லிதழ் அமுதமே மிசைந்து மேவினன். - 286



    806 - காய்கதிர் நுழைவுறாக் கடிமென் காவினுள்
    மேயினன் பலபகல் வேளின் நூல்வழி
    ஆயதோர் வைகலின் அரன தாணையால்
    மாயம தயர்த்தனன் மலர்க்கண் துஞ்சினான்.
    (279. தானையின் மன்னவர் - சேனைக்காவலர். 280. அரிவை - பிருந்தை.
    284. புல்லிய - இழிந்த. துள்ளுதல் - மகிழ்ச்சி மிகுதியால் குதித்தாடுதல்.
    286. புல்லிய - தழுவிய. எல்லியும் - இரவும். 287. கதிர் - சூரிய வௌ¤ச்சம்.
    கடி - அச்சம். வேளின் நூல் - மன்மதாகமம். மாயமது அயர்த்தனன் -
    (தான்கொண்ட) மாயைமறந்து; முற்றெச்சம். துஞ்சினான் - தூங்கினான்.) - 287



    807 - துஞ்சிய வேலையில் துணைவி யாகிய
    பஞ்சினின் மெல்லடிப் பாவை பார்த்திவன்
    வஞ்சகன் வஞ்சகன் மாய னேயெனா
    அஞ்சினள் நெஞ்சகம் அழன்று நீங்கிளாள். - 288



    808 - அருந்ததி அன்னகற் பழிந்த தன்மையால்
    வருந்தினள் உயிர்த்தனள் மாயம் யாவையும்
    பொருந்திய தன்னுயிர்ப் போத நீர்மையால்
    தெரிந்தனள் சீதரற் கிதனைச் செப்புவாள். - 289



    809 - மாவலி யுடையதோர் மடங்க லாயினோர்
    காவல ரிருவர்அக் காவ லாளர்உன்
    மேவல ராயுற வேந்த னாகிநீ
    ஓவலை குரங்கொடு திரிதி ஒண்புவி. - 290



    810 - பொற்புறு கணவனைப் போல வந்தெனைப்
    பற்பகல் புணர்ந்தனை பகைவர் மாயையால்
    கற்புடை மனைவியைக் கவர்ந்து போகநீ
    சொற்படு பழியினைச் சுமத்தியால் என்றாள். - 291



    811 - இக்கொடு மொழிபுகன் றெரியை மூட்டியே
    புக்குயிர் துறந்தனள் புலம்பி யாங்கவள்
    அக்குறு சுடலைநீ றாடி வாடினான்
    மைக்கடல் மேனியன் மாலின் மூழ்கியே. - 292



    812 - வேறு
    அத்துணை தன்னின் வானோர் அம்புயன் கயிலை யேகி
    நித்தனை இறைஞ்சி மாயோன் நிலைமையை உயர்த்தும் போழ்தில்
    சத்தியங் கதனைத் தேர்ந்து தலையளி செய்து தானோர்
    வித்தினை உதவி ஈது விண்டுமுன் இடுதிர் என்றாள். - 293



    813 - ஈதலும் அதனை வேதா இருகையால் ஏந்திச் சென்னி
    மீதுறக் கொண்டு போந்து விருந்தைதன் ஈமந் தன்னில்
    தாதுறு பலியின் வித்தித் தடங்கட லமுதம் பெயய
    மாதவன் முன்னம் ஆங்கோர் துளவமாய் மலிந்த தன்றே.
    (289. தன் உயிர்ப்போத நீர்மையால் - தனது சீவபோதத் தன்மையால்.
    290. மாவலி - மிக்க வலிமை. மேவலராய் உற - பகைவராய்ப் பொருந்த.
    இங்குப் பகைவர் இராவணனும் கும்பகர்ணனும் ஆவர்.
    அரசன் - இ·து இராமனை உணர்த்தும்.
    291. கற்புடைய மனைவி - இங்கு சீதையை உயர்த்தும்.
    292. அக்கு - என்பு. சுடலைநீறு - சுடுகாட்டுச் சாம்பல். ஆடி - புரண்டு.
    293. சத்தி - உமாதேவியார். வித்து - (துளசி) விதை. 294. தாது - புழுதி.
    பலி - சாம்பல்.) - 294



    814 - தண்டுள வான தாங்கோர் கையலாய் நின்ற காலைக்
    கண்டனன் தருவின் கேள்வன் கனலிடைப் புகுந்தாள் மீது
    கொண்டிடு காதல் நீங்கி அவள்வயிற் கூட்டம் வெ·க
    அண்டரும் அயனும் மாலுக் கருங்கவடி இயற்றி ஈந்தார். - 295



    815 - கடியுறு துளவம் என்னுங் கன்னியைக் கொண்டு கஞ்சக்
    கொடியுறு தகைமைத் தான கோநகர் குறுகி வேறோர்
    படியுறு பெற்றித் தல்லாப் பல்பெரும் போகம் ஆற்றி
    முடியுறு கூட்டு மாக முடித்தனன் முளரிக் கண்ணன். - 296



    816 - அவன்சலந் தரனை வீட்டும் ஆழியை வாங்கப் பன்னாள்
    சிவன்கழல் வழபட் டோர்நாள் செங்கணே மலராச் சாத்த
    உவந்தனன் விடைமேல் தோன்றி அப்படை உதவப் பெற்று
    நிவந்தனன் அதனால் வையம் நேமியான் என்ப மாதோ. - 297



    817 - வேறு
    போற்ற லார்தம் புரமடு புங்கவன்
    வேற்று ருக்கொள் வியனருட் டன்மையைச்
    சாற்றி னாம்இனித் தன்னிகர் இல்லதோர்
    ஏற்றின் மேல்வருந் தன்மை இயம்புவாம். - 298



    818 - இன்ன நான்குகத் தெல்லை இராயிரம்
    மன்னு கின்றதொர் வைகல்அவ் வைகல்தான்
    துன்னு முப்பது தொக்கதொர் திங்களா
    அன்ன தாறிரண் டால்வரும் ஆண்டரோ. - 299



    819 - ஆண்டு நூறுசென் றால்அயற் காயுவும்
    மாண்டு போமது மாற்கொரு வைகலாம்
    ஈண்டு நூல்களெ லாமிவை கூறுமால்
    காண்டி யாலிவை கற்றுணர் பேதைநீ. - 300



    820 - ஆய தன்மையில் அச்சுதற் காயுவும்
    மாயும் எல்லையின் மன்னுயிர் யாவையுந்
    தேயும் அண்டஞ் சிதைந்திடும் எங்கணும்
    பாயி ருங்கன லேபரந் துண்ணுமால். - 301



    821 - ஆன காலை அகிலமும் ஈமமாய்த்
    தூந லங்கொடு தோன்றுமச் சூழலில்
    தானு லாவித் தனிநடஞ் செய்திடு
    ஞான நாயக னாயகி காணவே. - 302



    822 - பெருகு தேயுப் பிரளயம் அன்னதில்
    தருமம் யாவினுக் குந்தனித் தெய்வதம்
    வெருவி யாமிவண் வீடுது மேலினிப்
    புரிவ தேனெப் புந்தியிற் சூழ்ந்ததே.
    (295. கூட்டம் - சேர்க்கை. அருங்கடி - அரிய திருமணம்.
    297. அவன் - இங்குத் திருமால். நிவந்தனன் - உயர்ந்தனன்.
    298. ஏறு - இடபம்.
    299. உகம் - யுகம். இன்ன - (பிரமனுக்கு) இத்தன்மையான.
    303. தேயுப்பிரளயம் - அக்கினிப் பிரளயம்; இதில் தருமத் தெய்வம் மட்டும்
    அழியாது என்பது நூற்றுணிபு. தருமம் யாவினுக்கும் தனித்தெய்வதம் -
    எல்லோர்க்கும் பொதுவான தருமத்தெய்வம்.) - 303



    823 - ஆறு லாஞ்சடை அண்ணலைச் சேர்வனேல்
    ஈறிலா சென்றும் உற்றிடு வேனெனாத்
    தேறி யேஅறத் தெய்வதஞ் செங்கணான்
    ஏற தாயொ ரெழிலுருக் கொண்டதே. - 304



    824 - ஏற்றின் மேனிகொண் டீசன்முன் ஏகியே
    போற்றி யானின்று பொன்றிடுந் தன்மையை
    மாற்றி யாற்றல் வழங்கிநிற் கூர்தியாம்
    பேற்றை எற்குப் பிரானருள் என்னவே. - 305



    825 - வேறு
    இறத்தலை இன்மையும் யான மாய்த்தனைப்
    பொறுத்திடுந் தன்மையும் பொருவில் வன்மையும்
    உறைத்திடும் அன்பும்வா லுணர்வும் நல்கியே
    அறத்தனிக் கடவுளுக் கண்ணல் கூறுவான். - 306



    826 - முதலயல் இடைகடை மொழிய நின்றிடுஞ்
    சதுர்வித யுகந்தனில் தருமத் தின்திறம்
    இதுவென நான்குமூன் றிரண்டொன் றாகிய
    பதமுறை யூன்றியே படியிற் சேறிமேல். - 307



    827 - ஈங்குன திடந்தனில் யாமெக் காலமும்
    நீங்கலம் இருந்தனம் நீயும் வந்துநம்
    பாங்கரின் அடைந்தனை பரிவொ டூர்தியாய்த்
    தாங்குதி யாரினுந் தலைமை பெற்றுளாய். - 308



    828 - எண்ணுநந் தொண்டர்கள் இயற்று பாவமும்
    புண்ணிய மாநமைப் புறக்க ணித்துளார்
    பண்ணிய அறமெலாம் பாவ மாகுமால்
    திண்ணமீ தருமறை தானுஞ் செப்புமே. - 309



    829 - மைதவிர் அடியர்செய் பவமு மற்றுளார்
    செய்திடு தருமமுந் திரிப தாகியே
    எய்திடு கின்ற தியாம்உன் றன்னிடை
    மெய்திகழ் உயிரென மேவும் பான்மையால். - 310



    830 - நின்னிடை யாமுளோம் நீயும் ஊர்தியாய்
    மன்னுதி எமதுபால் மற்றி தல்லதை
    இன்னுமோர் வடிவு கொண் டெம்மைப் போற்றுதி
    அன்னதும் உணர்கென அருளிச் செய்தரோ.
    (306. யானம் - வாகனம். 307. சதுர்வித யுகம் - கிரேத திரேத துவாபர
    கலி என்னும் நான்கு வகை யுகங்கள். பதம் - கால். சேறி - செல்வாய்.
    309. புறக்கணித்துளார் - அலட்சியம் செய்தவர்கள்.
    311. இன்னுமோர் வடிவு - மானுட வடிவு.) - 311



    831 - வேறு
    கூர்ந்த சூலக் கொடும்படை வானவன்
    சார்ந்து போற்றுந் தருமக் கடவுளை
    ஊர்ந்தி டுந்தனி யூர்திய தாகியே
    சேர்ந்தி டும்படி சீரருள் செய்தனன். - 312



    832 - அந்த நாண்முத லாதிப் பிரான் றனைச்
    சிந்தை மேல்கொண்ட சீருடை யன்பர்முன்
    நந்தி யாகும் நலம்பெறும் ஊர்திமேல்
    வந்து தோன்றும் வரம்புரி பான்மையால். - 313



    833 - சாற்றும் அவ்விடைக் கேதனைத் தாங்குபேர்
    ஆற்றல் ஈந்த செயலறிந் தல்லவோ
    மாற்ற லார்புரஞ் செற்றுழி மாயவன்
    ஏற்றின் மேனிகொண் டெந்தையைத் தாங்கினான். - 314



    834 - ஆத லால்அரன் அவ்விடை யூர்ந்திடல்
    ஏத மோவன் றிதுநிற்க தெண்டிரை
    மீது தோன்றும் விடத்தையுண் டானென
    ஓதி னாய்அதன் உண்மையைக் கேட்டிநீ. - 315



    835 - வேறு
    நிருதர் தம்முடன் அவுணரும் அமரரும் நேர்ந்து
    திருகு வெஞ்சினத் தொருபகல் முந்துபோர் செய்ய
    இருதி ரத்தினும் பற்பலர் வல்லையில இறப்ப
    வெருவி யன்னது கண்டனர் அமரினை விடுத்தார். - 316



    836 - மேலை வானவர் அவுணர்தங் கோவொடு விரவிக்
    கால மெண்ணில இருந்துபோர் செய்வது கருதி
    நாலு மாமுகத் திறையவன் பதத்தினை நணுகிச்
    சீல மோடவன் தாள்மலர் பணிந்துரை செய்வார். - 317



    837 - ஒல்கு மாயுளை உடையரேம் பற்பகல் உஞற்று
    மல்கு பேரமர் இயற்றுவான் பாற்கடல் மதியா
    அல்க லின்றிய அமிர்தினை வாங்கியே அடிகேள்
    நல்கு வாயெமக் கென்றலும் அயன்இவை நவில்வான். - 318



    838 - ஆதி மாயவற் கிச்செயல் மொழிகுவம் அவனே
    ஓத வேலையைக் கடைந்தமு தளித்திடும் உண்டால்
    சாதல் வல்லையில் வந்திடா தென்றயன் சாற்றிப்
    போது நாமென அவரொடும் பாற்கடல் புகுந்தான். - 319



    839 - நனந்த லைப்படு பயங்கெழு தெண்டிரை நடுவண்
    அனந்தன் மீமிசைச் துயிலுறும் மூர்த்தியை அணுகி
    மனந்த வாதபேர் அன்பொடு நான்முகன் வழுத்த
    நினைந்து கண்விழித் தொய்யென எழுந்தனன் நெடியோன். - 320



    840 - நீவிர் இவ்விடை வந்தவா றென்னென நெடியோன்
    பூவின் மேல்வரு பண்ணவன் அவுணர்கள் பொருவில்
    தேவர் வேந்தர்கள் வேண்டிய குறையினைச் செப்ப
    ஆவ தென்றதற் கியைந்தனன் அளித்திடும் அருளால்.
    (314. செற்றுழி - அழித்தபோது. ஏற்றின் மேனி - இடபவடிவம்.
    316. நிருதர் - இராக்கதர். அவுணர் - அசுரர்.
    320. நல் + நந்து + அலைப்படு - நனந்தலைப்படு. நந்து - சங்கு.
    பயம் - பால்.) - 321



    841 - அருள்பு ரிந்தெழு மாயவன் மந்தரம் அதனை
    உருள்பு ரிந்திடு மத்தென நிறுவியே உடலாம்
    பொருள்பு ரிந்திடும் மதியினை மதலையாப் புரியா
    இருள்பு ரிந்தவா சுகிதனை நாணென யாத்தான். - 322



    842 - ஒருபு றத்தினில் அமரர்கள் ஒருபுறத் தவுணர்
    இருபு றத்தினும் ஈர்த்திட நல்கியிப் புவிசூழ்
    தருபு றக்கிரி யனையமத் தடிமுடி தன்மெய்
    வருபு றத்தினுங் கரத்தினும் பரித்தனன் மாலோன். - 323



    843 - ஆன தன்மையின் மாயவன் பரித்துழி அமரர்
    கோனும் வானவர் யாவரும் அவுணருங் கோமான்
    தானும் வாசுகி பற்றியே வலியுறுந் தகவால்
    வானி லாவுமிழ் பாற்கடல் மறுகிட மதித்தார். - 324



    844 - மதித்த வேலையவ் வேலையி னுடைந்தென வாய்விட்
    டதிர்த்த தேவரும் உலைந்தனர் குலைந்தன அகிலம்
    கதித்த மேருவுஞ் சலித்தன ஒலித்தன கரிகள்
    பதைத்து வெய்துயிர்த் தொடுங்கின நடுங்கின பணியே. - 325



    845 - உடைந்து போவது கொல்லென அமரர்கள் ஒருங்கே
    தொடர்ந்து தம்பெரு வலிகொடே மந்தரஞ் சுழலக்
    கடைந்து வேலையைக் கலக்குறி ஈர்த்திங் கயிறாய்
    அடைந்த வாசுகி பொறுக்கலா தயர்ந்ததை அன்றே. - 326



    846 - ஊன்று பேதுற வெய்தியே யாற்றவெய் துயிர்த்துத்
    தோன்று வெஞ்சினங் கொண்டுமெய் பதைத்துநாத் துடிப்ப
    ஆன்ற ஆயிரம் வாய்தொறும் ஆலகா லத்தைக்
    கான்ற தத்துணை அளக்கரும் உமிழ்ந்தது கடுவே. - 327



    847 - ஈற்றுக் கோடியின் எழுமுகிற் கோடியின் இருண்டு
    கூற்றுக் கோடியின் மறங்கொடு திசைதொறுங் குலவுங்
    காற்றுக் கோடியின் விரைவினால் வடவையங் கடுந்தீ
    நூற்றுக் கோடியிற் பரந்ததவ் விடமெலாம் நொய்தின். - 328



    848 - ஓட லுற்றெழுந் தவ்விடஞ் சூழ்தலும் உலையா
    ஓட லுற்றனர் தானவர் உம்பரா யுள்ளோர்
    ஓட லுற்றனர் முனிவரர் ஓடலுற் றனரால்
    ஓட லுற்றனர் உலகெலாம் படைத்திடும் உரவோர்.
    (322. மதலை - தூண். நாண் - கயிறு. 323. புறக்கிரி - சக்கரவாளகிரி.
    324. பரித்துழி - தாங்கியவுடனே. மறுகிட - கலங்கும் வண்ணம்.
    325. கரிகள் - திக்கு யானைகள். பணி - அட்டநாகங்கள்.
    வேலையின் இன் : சாரியை.
    327. அளக்கர் - பாற்கடல். கடு - விஷம். 328. ஈற்றுக்கோடி - யுகமுடிவு.) - 329



    849 - தண்டு ழாய்முடிப் பண்ணவன் இனையதோர் தன்மை
    கண்டு மந்தரங் காப்புவிட் டுள்ளமேற் கவற்சி
    கொண்டு நாமின்று போற்றுதும் ஈதெனக் குறியா
    அண்ட ராதியர் மேற்செலும் விடத்தின்முன் அடுத்தான். - 330



    850 - மேல்வ ருங்கொடு விடத்தின்முன் னுறுதலும் வெகுண்டு
    சால அங்கது தாமரைக் கண்ணன்மேல் தாக்கி
    மூல முள்ளதோர் வச்சிர மணிநிற முருக்கி
    நீல வண்ணமே யாக்கிய தவனும்நின் றிலனால். - 331



    851 - கோல காலமாய் உலகெலாம் அடுந்தொழில் கொண்ட
    ஆல காலமுன் நிற்கலார் அரிமுத லானோர்
    மூல காலமும் இறுதியும் இன்றியே மூவாக்
    கால காலன்வாழ் கயிலையை அடைந்தனர் கடிதில். - 332



    852 - முந்து வெவ்விடஞ் சுடுதலால் இரிந்தவர் முக்கண்
    எந்தை எம்பெரு மாட்டிவாழ் கயிலையில் எவரும்
    வந்த தற்புத நீரதோ வெருவினால் மைந்தர்
    தந்தை தாயிடத் தன்றியே யாங்ஙனஞ் சார்வார். - 333



    853 - வேறு
    ஆயவர் கயிலையில் அமலற் காகிய
    கோயிலின் முதற்பெருங் கோபு ரத்திடை
    நாயக நந்தியந் தேவை நண்ணியே
    போயதெந் துயரெனப் புகன்று போற்றினார். - 334



    854 - போற்றிய பின்னுறப் புகுந்த வாறெலாஞ்
    சாற்றினர் கேட்டலுந் தகுவர் தேவர்கள்
    வீற்றுற அவண்நிறீஇ வேதன் மாறிசைக்
    கோற்றொழிலாதமைக் கொண்டு போயினான். - 335



    855 - நடைநெறி யருள்புரி நந்தி யெம்பிரான்
    கடைநிலை ஐந்தவாங் காப்பில் எண்டிசை
    அடைதரு மன்னரை அருளின் நோக்கியிவ்
    விடைதனில் உறுதிரென் றியம்பி யேகியே. - 336



    856 - அருள்முறை நாடிமால் அயனென் றுள்ளதோ£
    இருவரை அமலன்முன் எய்த உய்த்தலுங்
    கருணையங் கடல்தனைக் கண்டு போற்றினார்
    பரவச மாயினார் பணிந்து பன்முறை. - 337



    857 - போற்றினர் நிற்றலும் புரத்தை முன்அடும்
    ஆற்றலின் உம்பரான் உரிநின் மேனிதான்
    வேற்றுரு வாய்இவண் மேவிற் றென்னெனச்
    சாற்றினன் யாவையும் உணருந் தன்மையான்.
    (330. போற்றுதும் - காப்போம். 331. மூலம் - முன்னர். முருக்கி - கெடுத்து.
    332. கோலகாலம் - பேரொலி. மூலகாலம் - தோற்றம். மூவா - அழியா.
    333. வெருவினால் - பயமுற்றால். 338. அரி - திருமாலே!.) - 338



    858 - மெய்வழி பாடுசெய் மேலை யோர்க்கெலாம்
    உய்வழி புரிபவன் இனைய ஓதலும்
    மைவழி மேனியன் மானம் உள்ளுற
    அவ்வழி இனையன அறைதல் மேயினான். - 339



    859 - வஞ்சின அவுணர்கள் வான மேலவர்
    வெஞ்சின அமரினில் விளிந்த வேலையில்
    எஞ்சலில் ஆயுவுற் றிகல்செய் வாமெனப்
    புஞ்சமொ டயனொடு புகறல் மேயினார். - 340



    860 - அன்னமென் கொடியினன் அனைய ரோடுபோந்
    தென்னொடு கூறினன் யானெ ழுந்தரோ
    உன்னருள் பெற்றிலன் உணர்ந்தி டாமலே
    மன்னிய அமிழ்திவண் வருதல் வேண்டினேன். - 341



    861 - தானவர் அமரர்கள் சதுர்மு கத்தவன்
    ஏனையர் தம்முட னியானின் றெய்தியே
    பானிறை கடல்கடை பொழுதிற் பாயெரி
    யானது மருளுற ஆலம் போந்ததே. - 342



    862 - உன்றன தருள்பெறா உண்மை நாடியே
    இன்றுல குயிரெலாம் இறக்க அவ்விடஞ்
    சென்றதி யாவருந் தெருமந் தோடினார்
    நின்றவென் மெய்யையிந் நிறம் தாக்கிற்றே. - 343



    863 - வேற்றுரு வாக்கியென் மெய்யில் தாக்கலும்
    ஆற்றலன் அகன்றனன் அனையர் தம்மொடே
    ஏற்றம தானவெம் மிடர்கள் யாவையும்
    ஆற்றுநர் யாருளர் மற்று நீயலால். - 344



    864 - உன்னருள் பெறாமல்அவ் வுததி சேர்தலால்
    இன்னதொர் இன்னல்வந் தெய்திற் றாதலால்
    நின்னடி அடைந்தனம் நீடு தீயெனத்
    துன்னிய கொடுவிடந் தொலைக்கச் செல்லுமால். - 345



    865 - ஆரணம் யாவையும் அறிந்து நாடொணாப்
    பூரண வுமையொடு பொருந்தி இன்னதாம்
    ஏரண வுருவுகொண் டிருக்கை எம்மையாள்
    காரண மன்றியே கருமம் யாவதோ. - 346



    866 - தீயென எழுதரு சீற்ற வெவ்விடம்
    ஆயதை மாற்றியே அளியர் தங்களை
    நீயருள் புரிகென நீல்நி றத்திகழ்
    மாயவன் உரைத்தனன் வழுத்தி நிற்கவே.
    (340. ஆயு - ஆயுள். புஞ்சம் - கூட்டம். 346. ஏரணம் - அழகு.) - 347



    867 - மாதிர இறைவரும் வானு ளோர்களும்
    நீதியில் அவுணரும் நின்ற எல்லையில்
    நாதனை வழுத்தலும் நம்பன் கேட்டரோ
    ஏதிவை அரவம்என் றியம்ப லோடுமே. - 348



    868 - வானவர் அவுணர்கள் மாதி ரத்தவர்
    ஏனையர் வல்லிடத் தின்னல் உற்றுளார்
    கோநகர்க் கடைதொறுங் குழுமி ஏத்தினார்
    ஆனதிவ் வொலியென அயன்வி ளம்பவே. - 349



    869 - கறுத்திடும் மிடறுடைக் கடவுள் நந்தியைக்
    குறிப்பொடு நோக்கியே கொணர்தி யாலெனப்
    புறத்திலம் மேலவன் போந்து மற்றவர்
    திறத்துடன் உரையுளில் செல்ல உய்ப்பவே. - 350



    870 - வந்தவர் யா£ரும் வணங்கி ஈசனைப்
    புந்தியில் அன்பொடு போற்றி யாற்றவுங்
    நொந்தனம் விடத்தினால் நொய்தில் அன்னதைச்
    சிந்தினை எமக்கருள் செய்தி என்னவே. - 351



    871 - வேறு
    ஈதெலாங் கேட்ட மேலோன் இறைவியை நோக்கி இன்னோர்
    ஓதலா மாற்றம் உன்றன் உளத்தினுக் கியைவ தாமோ
    மாதுநீ புகறி யென்ன வந்துநின் னடைந்தார் வானோர்
    ஆதலால் அவர்க்கு வல்லே அருள்புரிந் திடுதி என்றாள். - 352



    872 - வண்டமர் குழலெம் மன்னை மற்றிவை இசைத்த லோடும்
    அண்டரு மகிழ்ச்சி எய்தி ஆதியங் கடவுள் தன்பால்
    தொண்டுசெய் தொழுகு கின்ற சுந்தரன் தன்னை நோக்கிக்
    கொண்டிவண் வருதி யால்அக் கொடுவிடந் தன்னை என்றான். - 353



    873 - என்றலும் இனிதே என்னா இறைஞ்சினன் ஏகி யாண்டுந்
    துன்றிய விடத்தைப் பற்றிச் சுந்தரன் கொடுவந் துய்ப்ப
    ஒன்றொரு திவலை யேபோல் ஒடுங்குற மலர்க்கை வாங்கி
    நின்றிடும் அமரர் தம்மை நோக்கியே நிமலன் சொல்வான். - 354



    874 - காளக வுருவு கொண்ட கடுவினை உண்கோ அன்றேல்
    நீளிடை அதனிற் செல்ல நெறிப்பட எறிகோ என்னா
    வாளுறு மதிதோய் சென்னி வானவன் அருள அன்னான்
    தாளுற வணங்கி நின்று சதுர்முகன் முதலோர் சொல்வார். - 355



    875 - ஐயநீ யன்றி யாரிவ் வனல்விட மாற்று நீரார்
    செய்யகைக் கொண்ட ஆற்றாற் சிறிதெனக் காட்டிற் றன்றே
    வெய்யதோர் இதனை இன்னே விட்டனை என்னிற் பின்னை
    உய்வரோ யாரும் இன்னே ஒருங்குடன் முடிந்தி டாரோ.
    (348. மாதிர விறைவர் - திசைகாவலர். அரவம் - ஓசை.
    349. கோநகர் - (இக்)கயிலையின். கடைதொறும் - திருவாயில்கள் தோறும்.
    353. அண்டரும் - அடைதற்கரிய. சுந்தரன் - இவர் இறைவனின் அணுக்கத்
    தொண்டரில் ஒருவர்; பின்னர் பூமியில் சுந்தரமூர்த்தியாக வந்து தோன்றியவர்.
    354. ஒரு திவலை - ஒரு துளி.
    355. காளகவுருவு - கருமை நிறம். உண்கோ - உண்ணவோ.
    எறிகோ - எறியவோ.) - 356



    876 - முடிவிலா உனக்கே அன்றோ முன்னுறு பாக மெல்லாம்
    விடமதே எனினு மாக வேண்டுதும் இதனை வல்லே
    அடியரேம் உய்யு மாற்றால் அருந்தினை அருள்மோ என்னக்
    கடிகமழ் இதழி வேய்ந்தோன் கலங்கலீர் இனிநீ ரென்றான். 357 - 357



    877 - என்றனன் விரைவில் தன்கை ஏந்திய விடமுட் கொள்ளச்
    சென்றது மிடற்றில் அன்ன திறத்தினை யாரும் நோக்கி
    இன்றெம துயிர்நீ காத்தற் கிங்கிது சான்றாய் அங்கண்
    நின்றிட வருடி என்றே நிமலனைப் போற்றல் உற்றார். - 358



    878 - போற்றலும் மிடற்றில் எங்கோன் பொலன்மணி அணிய தென்ன
    மாற்றருந் தகைமைத் தான வல்விடம் நிறுவி அன்னார்க்
    கேற்றநல் லருளைச் செய்ய யாவரும் இறந்தே இன்று
    தோற்றின ராகும் என்னச் சொல்லரு மகிழ்ச்சி கொண்டார். - 359



    879 - மாமகிழ் சிறந்து நிற்கும் மாலயன் முதலோர் தம்மைத்
    தூமதி மிலைச்சுஞ் சென்னித் தொல்லையோன் அருளால் நோக்கிக்
    காமரு கடலை இன்னுங் கடைதிரால் அமுதுண் டாகும்
    போமினீர் இன்னே என்னப் போற்றினர் வணங்கிப் போனார். - 360



    880 - போனவர் தொன்மை போலப் புணரியைக் கடைந்த காலை
    மேனிகழ் அமிர்த மேனை வியன்பொருள் பலவும் வந்த
    வானவர் தாமே பெற்றோர் மற்றவை தம்மை ஆலம்
    ஆனதை அமலன் உண்ட தவருயிர் அளித்த தன்றே. - 361



    881 - கடல்விடம் நுகர்ந்த தொல்லைக் கடவுள்பின் னழிக்குங் காலை
    உடலுயிர் அகிலம் யாவும் ஒடுங்கிய விடம தன்றோ
    சுடலைய தாகும் அந்தச் சுடலைகாண் அனைய சோதி
    நடநவில் கின்ற எல்லை நாடருந் தகைமைத் த·தே. - 362



    882 - அங்கதும் அன்றி எந்தை அகிலமு முடித்த ஞான்றின்
    எங்கும்வௌ¢ ளிடைய தாகி ஈமமாம் அவ்வீ மத்து
    மங்கையுந் தானு மேவு மற்றிது தவறோ அன்னான்
    கங்கையை முடிமேற் கொண்ட காதைமேல் உரைத்தும் அன்றே. - 363



    883 - ஈசனை ஒருஞான் றம்மை எழில்பெறு கயிலைக் காவில்
    பேசலள் ஆடல் உன்னிப் பின்வரா விழியி ரண்டுந்
    தேசுறு கரத்தாற் பொத்தச் செறிதரு புவனம் யாவும்
    மாசிருள் பரந்த தெல்லா உயிர்களும் வருத்தங் கொள்ள. - 364



    884 - திங்களின் கதிரும் ஏனைத் தினகரன் வெயிலுந் தீயின்
    பொங்குசெஞ் சுடரும் ஏனைப் புலவர்தங் கதிரு மற்றும்
    எங்குள ஔ¤யும் மாய்வுற் றிருள்நிறம் படைத்த மாதோ
    சங்கரன் விழியால் எல்லாச் சோதியுந் தழைத்த நீரால்.
    (357. அருந்தினை அருள்மோ - அருந்தி அருள்க.
    359. பொலன்மணி - அழகிய நீலமணி.
    361. புணரி - போற் கடல். ஏனை வியன்பொருள் - மற்றைய மேலான
    காமதேனு, கற்பகத்தரு முதலிய பல பொருள்கள்.
    364. ஒரு ஞான்று - ஒரு தினம். பொத்த - மூட.) - 365



    885 - தன்னிகர் பிறரி லாத தற்பரன் விழியி ரண்டுங்
    கன்னிகை கமலக் கையாற் புதைப்பஅக் கணம தொன்றின்
    மன்னுயிர்த் தொகைகட் கெல்லாம் வரம்பிலா வூழி யாக
    அன்னதோர் பான்மை நோக்கி அருளுவான் நினைந்தான் அன்றே. - 366



    886 - ஓங்குதன் நுதலின் நாப்பண் ஒருதனி நாட்டம் நல்கி
    ஆங்கது கொண்டு நாதன் அருள்கொடு நோக்கி யாண்டும்
    நீங்கரு நிலைமைத் தாகி நின்றபேர் இருளை மாற்றித்
    தீங்கதிர் முதலா னோர்க்குச் சிறந்தபே ரொளியை ஈந்தான். - 367



    887 - மண்ணுறு புவனத் துள்ள மாயிருள் முழுதும் நீங்க
    உண்ணிகழ் உவகை மேல்கொண் டுயிர்த்தொகை சிறத்த லோடுங்
    கண்ணுதல் இறைவன் செய்கை கவுரிகண் டச்சம் எய்தித்
    துண்ணென விழிகள் மூடுந் துணைக்கரம் வாங்கி னாளால். - 368



    888 - சங்கரன் விழிகள் மூடுந் தனாதுகை திறக்கும் எல்லை
    அங்குலி யவையீ ரைந்தும் அச்சத்தால் வியர்ப்புத் தோன்ற
    மங்கையத் தகைமை காணூஉ மற்றவை விதிர்ப்பப் போந்து
    கங்கையோர் பத்தா யாண்டுங் கடல்களிற் செறிந்த அன்றே. - 369



    889 - ஆயிர நூறு கோடி அணிமுகம் படைத்தி யாண்டும்
    பாயிரு நீத்த பரவலும் அதுகண் டஞ்சி
    மாயனும் அயனும் வானோர் மன்னனும் பிறரும் போற்றி
    மீயுயர் கயிலை நண்ணி விமலனை அடைந்து தாழ்ந்தார். - 370



    890 - அடிமலர் தொழுதே எந்தாய் அறிகிலோம் இதுவோர் நீத்தங்
    கடல்களும் அன்றால் யாண்டுங் கல்லென விரைத்தி யாரும்
    முடிவுறு திறத்தால் அண்டம் முழுவதுங் கவர்ந்த முன்னாள்
    விடமெனப் பரித்தே ஈது விமலநீ காத்தி என்றார். - 371



    891 - என்றலும் நதிகள் தோற்றம் இயம்பிஎவ் வுலகுஞ் சூழபோய்
    நின்றவந் நீத்தந் தன்னை நினைத்தவண் அழைத்து நாதன்
    ஒன்றுதன் வேணி மேல்ஓர் உரோமத்தின் உம்ப ருய்ப்ப
    மன்றலங் கமலத் தோனும் மாலுமிந் திரனுஞ் சொல்வார். - 372



    892 - மேதினி யண்ட முற்றும் விழுங்கிய கங்கை உன்றன்
    பாதியாள் கரத்தில் தோன்றும் பான்மையால் உனது சென்னி
    மீதினிற் செறிக்கும் பண்பால் விமலமாம் அதனில் எங்கண்
    மூதெயில் நகரம் வைகச் சிறிதருள் முதல்வ என்றார்.
    (366. புதைப்ப - மூட. 367. ஒரு தனி நாட்டம் - இங்கு நெற்றிவிழி.
    368. துணைக்கரம் - இருகரங்கள். 369. அங்குலி அவை ஈரைந்தும் - பத்து விரல்களிலும்.
    371. கல்லென - கலீரென. 372. நீத்தம் - சலம்பிரவாகம்.
    373. மேதினி அண்டம் - பிருதிவியண்டம். பாதியாள் - உமை. விமலமாம் -
    பரிசுத்தமானதாம்.) - 373



    893 - இறையவன் வேணி யுள்புக் கிருந்ததோர் கங்கை தன்னில்
    சிறுவதை வாங்கி மூவர் செங்கையுஞ் செறிய நல்க
    நிறைதரும் அன்பால் தாழ்ந்து நிகழ்விடை பெற்றுத் தத்தம்
    உறைநகர் எய்தி அங்கண் உய்த்தனர் அனைய நீத்தம். - 374



    894 - அந்நதி மூன்று தன்னில் அயனகர் புகுந்த கங்கை
    பன்னருந் திறலின் மிக்க பகீரதன் தவத்தால் மீளப்
    பின்னரும் இமையா முக்கட் பெருந்தகை முடிமேல் தங்கி
    இந்நில வரைப்பிற் செல்ல இறையதில் விடுத்தல் செய்தான். - 375



    895 - நானில மிசையே உய்த்த நன்னதி சகரர் எல்லாம்
    வானுயர் கதிபெற் றுய்ய மற்றவர் என்பிற் பாய்ந்து
    மீனெறி தரங்க வேலை மேவிய தி·தொன் றல்லால்
    ஏனைய நதிகள் தொல்லை இடந்தனில் இருந்த அன்றே. - 376



    896 - தொல்லையில் இறைவி அங்கைத் தோன்றி கங்கை நீத்தம்
    ஒல்லையில் உலகங் கொள்ளா தடக்கிய உண்மை அன்றோ
    அல்லிருள் அனைய கண்டத் தாதியங் கடவுள் முன்னோர்
    மெல்லியல் தன்னை வேணி மிசைக்கொண்டா னென்னு மாறே. - 377



    897 - மாதுமை வசத்த னாகி மருவுவான் என்றி அன்னான்
    நாதனே தருளே எல்லாம் நண்ணுவித் தருளும் வண்ணம்
    பேதக மாகித் தானோர் பெண்ணுருக் கொண்டு மேவும்
    ஆதலின் அவள்வந் துற்ற தன்மையை அறைவன் கேட்டி. - 378



    898 - தொல்லையோர் கமலத் தண்ணல் தோன்றியே இருந்த காலைப்
    பல்லுயிர்த் தொகுதி தன்னைப் படைப்பது கருதி முன்னர்
    வல்லையிற் சனக னாதி மைந்தர்நால் வரையுநல்க
    நல்லுணர் வெய்தி அன்னோர் நற்றவ ராகி உற்றார். - 379



    899 - அன்னதற் பின்னர் வேதன் அளிப்பதும் அல்கா தாக
    இன்னலுற் றிரக்கம் எய்தி யாதினிச் செய்வ தென்னா
    முன்னுறு குமர ரோடு முகுந்தன திடத்தில் எய்திப்
    பொன்னடி வணக்கஞ் செய்து தன்குறை புகன்று நின்றான். - 380



    900 - நின்றிடு கின்ற காலை நேமியங் கரத்து வள்ளல்
    இன்றிது நம்மல் முற்றா தீசனால் அன்றி யென்னா
    நன்றுணர் முனிவ ரோடு நான்முக னோடும் வௌ¢ளிக்
    குன்றினில் ஏகி நாதன் குரைகழல் பணிந்து சொல்வான்.
    (374. சிறு வதை - ஒருசிறிது. மூவர் - திருமால், பிரமன், இந்திரன் என்ற மூவர்.
    375. பகீரதன் - இவன் சகரர் வம்சத்தில் வந்த ஒரு அரசன், மிக்க முயற்சியுடையவன்.
    376. நானிலம் - குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் என்ற நிலங்கள்; பூமியுமாம்.
    சகரர் - இவர் அயோத்தி நகரை அரசுபுரிந்த சகரன் புதல்வர்கள்; இவர்கள்
    அறுபதினாயிரவர் ஆவர்.
    379. தொல்லை - முன்னொரு கற்பம். சனகன் ஆதி மைந்தர். நால்வர் -
    சனகன், சனந்தனன், சநாதனன், சனத்குமாரன் என்னும் நான்கு புதல்வர்கள்.
    381. முற்றாது - முற்றுப்பெறாது.) - 381



    901 - அண்டர்கள் முதல்வ கேண்மோ அம்புயன் படைப்பின் உள்ளங்
    கொண்ட னன்அதுமல் காதால் குறையிது நீக்கு கென்ன
    வண்டுள வத்தி னானை மைந்தரை அயனை நோக்கி
    நுண்டுகள் படவே ஈசன் நொய்தென வீறு செய்தான். - 382



    902 - ஏகனை ஆகை வைகும் எந்தைதன் னிடப்பா லான
    வாகுவை நோக்கும் எல்லை மற்றவண் உமையாள் தோன்றப்
    பாகம திருத்தி அன்னாள் பரிவொடு கலந்து மேவிக்
    கோகன தக்கண் னானைக் குமரரை அயனைத் தந்தான். - 383



    903 - தந்துழி ஈசன் தன்னைத் தனயரும் அயனும் மாலும்
    வந்தனை செய்து போற்ற மாயவன் வதனம் நோக்கி
    நத்தம தருள தாகு நங்கையோ டினிது சேர்ந்தாம்
    முந்தையின் வேதாச் செய்கை முற்றிடும் போதி என்றான். - 384



    904 - என்னலும் உவகை எய்தி யாமினி உய்ந்தோம் என்னா
    அன்னையொ டத்தன் தன்னை அளியொடு வலஞ்செய் தேத்திப்
    பின்னரும் வணக்கஞ் செய்து பெயர்ந்தனர் பின்பு வேதா
    மன்னுயிர்த் தொகுதி யெல்லாம்வரன்முறை படைக்கல் உற்றான். 385 - 385



    905 - மாற்றலர் புரமூன் றட்ட வானவன் உமையா ளோடும்
    வீற்றிருந் தருள லாலே விழைவுடன் ஆண்பெண் மேவி
    ஆற்றவும் இன்ப மெய்தி ஆவிகள் பெரிது மல்க
    நாற்றிசை முகத்தன் செய்கை நன்றுற நடந்த தன்றே. - 386



    906 - தேனமர் கமலத் தண்ணல் செய்தொழில் முற்று மாற்றால்
    ஆனதன் னருளை யாங்கோ ராயிழை யாக நல்கி
    மேனிகழ் கருணை தன்னால் மேவுவ துணராய் ஏனை
    வானவர் போலெங் கோனை மதித்தனை மதியி லாதாய். - 387



    907 - காமரு வடிவாய் எங்குங் காண்பது சத்தி அங்கண்
    மாமய மாகி நின்றான் மன்னிய சிவனாம் ஈது
    தூமறை முதலா வுள்ள தொலைநூல் புகலும் அன்னால்
    தாமொரு புதல்வன் தன்னைத் தந்தவா சாற்று கின்றாம்.
    (382. மல்காதால் - மலிவுற்றதில்லை. மைந்தர் - சனகாதியர்.
    383. வாகு - தோள்.
    386. ஆற்றவும் - மிகவும். ஆவிகள் - உயிர்கள். 388. காமரு - அழகிய, - 388
    ஆகத் திருவிருத்தம் - 907
    -----------

This file was last revised on 2 August 2008
This eText was made available as a service by Siva. Vanmeegi, Bangalore.